நாளை ஊருக்கு கிளம்ப இருப்பதால் அதன் உற்சாகம் திங்கள் கிழமையிலிருந்தே தொற்றிக்கொண்டது. அண்ணனுக்கு முன்பு வந்திருந்தபோது பொம்மச்சந்திரா டீமார்ட்டில் வாங்கிய வியரிங்க் அய்டம் ரொம்ப பிடித்திருப்பதாக சொன்னான். நான் தேர்ந்தெடுத்த ஹூடி விலை அதிகமாக இருக்கிறது வேண்டாம் என்று சொல்லிவிட்டான். அப்பாவும் நானும் விலைகளை எப்பொழுதும் பார்க்கமாட்டோம். எல்லா கணங்களையும் மகிழ்ச்சியாக இருந்துவிட முயற்சிப்போம். கடைகளுக்கு வருவது சாப்பிட ஹோட்டலுக்கு செல்வது போன்ற தருணங்களில் பெரும்பாலும் கையில் பணம் அதிகமாக இருக்கும் போதுதான் குடும்பத்துடன் அப்பா அழைத்துச்செல்வார். அப்பாவின் அந்தப்பழக்கம் எனக்கு பிடித்திருந்தது.

சென்னை சென்றதிலிருந்து அந்த ஹூடியை ஊருக்கு வரும்போது வாங்கிகொண்டு வந்துவிடு என்று பலமுறை சொல்லிவிட்டான். இப்படி அவன் சொல்கிறான் என்றால் அங்கு அவன் உடுத்திய ஆடைகளை பலரும் புகழ்ந்திருக்க வேண்டும். அப்பா சொல்வது சரிதான்.

அண்ணனுக்கு தாத்தாவிற்கெல்லாம் அடுத்தவர்கள் எது பற்றியும் நல்ல கருத்து சொல்லவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் ஏற்பார்கள் என்பார். இருவரிடமும் போராடி அப்பா மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

இந்த மாதிரி நேரங்களில் அப்பாவைப் பார்க்க பாவமாக இருக்கும். அவன் மனம் கோணாதபடி மிகவும் சாமர்த்தியமாக பேசுவார். அவர் கொஞ்சம் கோவமாகிக் கொண்டிருக்கிறார் என்று அவர் கண்ணைப் பார்த்ததும் எனக்கு தெரிந்துவிடும். நான் இடையில் புகுந்து குட்டிக் கலாட்டா செய்துவிடுவேன். அண்ணன் ஏற்காதது மாதிரிதான் பேசி இருப்பான். அடுத்த நாள் அப்பா அசந்து போகிற மாதிரி அவர் சொன்னதை அப்படியே செய்திருப்பான். எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

புக் பண்ண ஓலா ஆட்டோ வருவது தாமதமாகிக்கொண்டிருந்தது.

எஸ்எப்எஸ் காலேஜிலிருந்து டீமார்ட் நடப்பதை விட கொஞ்சம் தூரம். காத்திருந்த நேரத்தில் நடந்திருக்கலாமோ என்று தோன்றியது.

இதுமாதிரி நேரங்களில் பேசிக்கொண்டிருப்பதற்கு அப்பாதான் சரியான சாய்ஸ். ஆனால் மதியம் பேசும்போது அவர் வேலைக்காரர்கள் வேலைபார்க்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதற்காக கோபத்தில் இருந்து கொண்டிருந்தார். ‘பாத் ரூம், டாய்லெட்க்கு டைல்ஸ் ஒட்ட இரண்டு நாளாக தடவிக்கொண்டு இருக்கிறார்கள்’என்று கத்தினார். ‘ஈவினிங் சம்பளம் கொடுக்காமல் நாளைக்கு வாங்கடான்னு தொரத்திவிடப் போகிறேன்’ என்றார். நான் சிரித்தேன். ‘நீ ஏன் சிரிக்கிறேன்னு எனக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டு வழக்கமாக கேட்கும் கேள்விகளைக் கேட்டார். ‘சாப்பிட்டியா. ஆர் யூ ஓகே. எவ்வரித் திங்க் கோஸ் வெல்’ என்றார். பிறகு வழக்கமான ஒரு பிரார்த்தனை வார்த்தையை உதிர்த்தார். அதைக் கேட்டதும் எப்பொழுதும் போல மனம் உற்சாகமாக மாறிவிட்டது. அவர் ஏதோவொரு மேஜிக் வைத்திருக்கிறார். எந்தப் பயப்புள்ளைங்ககிட்ட சொன்னாலும் நான் சொல்றதை நம்ப மாட்டேங்குது. கேட்டா நான் சின்னப் புள்ளை விவரம் தெரியாதும்பாங்க. நான் வேலைக்கு போகப்போறேன்டான்னாலும் அவர்களுக்கு நான் சின்னப் புள்ளை தான்.

இப்படித்தான் பேங்களூருக்கு இன்டன்ஷிப் வருவதற்கு கல்லூரியில் கடிதம் ஒன்று வாங்கி வரவேண்டும். இரண்டு மூன்று நாள் அங்கு போகவேண்டியதாக இருந்தது. முருகேஷ் அங்கிள் காரில் சென்றோம். தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துக்கொண்டிருந்த நேரம்.அவர்கள் சொன்னதை விட அதிகமாக மழை பெய்து கொண்டிருந்தது. கல்லூரியில் கிளம்புகின்ற காலையில் வந்து கடிதம் வாங்கிக்கொள்ளச்சொன்னார்கள். தருவார்களா மாட்டார்களா என்று கவலையில் வாந்தி தலைவலி வயிற்றை குமட்டி மோசமான அனுபவம் அது. முருகேஷ் அங்கிள் ரொம்ப பயந்துவிட்டார். அப்பா தோளில் சாய்த்து படுக்க வைத்துக்கொண்டு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் தேம்பி தேம்பி அழுது கொண்டு இருந்தேன். அப்பா தலையைத் தடவிக்கொண்டு இருந்தார்.

முருகேஷ் அங்கிள் வண்டியை வேகமாக ஓட்டுவதா நிறுத்துவதா என்ற குழப்பத்தில் பயந்துபோய் இருந்தார். நான் அப்பாவிடம் சொல்லி சொல்லி அழுது கொண்டு இருந்தேன்.

‘எனக்கு மட்டும் ஏன்ப்பா இப்படி நடக்குது. எல்லோருமே போன்ல ஜஸ்ட் இன்பார்ம் பண்ணிட்டு போறாங்க. நான் நேர்ல வந்து கேட்டது தப்பாப்பா. நான் ரொம்ப விரும்பி நெய் சோறு சாப்பிடுவேன்னு உங்களுக்கு தெரியும். இன்னைக்கு நம்ம வீட்டுக்கு ஸாப் வீட்டிலிருந்து நெய் சோறு வரப்போவுது. இப்போ பாருங்கள். வாந்தி வயித்தைக்குமட்டுது. வயிரே அப்சட்டாக இருக்குப்பா’ என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தேன்.

“முருகேஷ். ஒரத்தநாடு போறதுக்குள்ள இதை சரி பண்ணித் தந்து விடுகிறேன். நீங்கள் தான் சாட்சி” என்றார்.

மணிப்பர்சை எடுத்து ஏதோ மஞ்சள் கலரில் சாப்பிடச்சொன்னார். நான் இருந்த எரிச்சலில் சாப்பிட்டுவிட்டு அப்பாவின் தோளில் சாய்ந்திருந்தேன். அவர் தலையைத் தடவிக்கொண்டு இருந்தார். மூன்று முறை வயிற்றைத் தடவினார்.

“மலைக்குப் போயிட்டு எப்ப முருகேஷ் வந்தீங்க.”

“நேத்துதான் சார். வந்தேன்.”

“அடுத்த முறை வரும்போது ஞாபகப்படுத்துங்க முருகேஷ். முருகனோட கதையை வச்சு, எல்லா மத புத்தகங்களில் உள்ள சம்பவங்கள், வழி வழியாக உலகெங்கும் சொல்லப்படும் கதைகளை வைத்து முதல் மனிதன் தமிழன் என்று நான் நிருப்பிக்கிறேன்.” என்றார்.

“சரி சார்.பாப்பாவுக்கு என்னாச்சு சார்”

அவர் நான் தேம்பி தேம்பி அழுததில் பயந்துபோய் இருப்பது தெரிந்தது. அதன் பிறகு அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.நான் எப்பொழுது தூங்கினேன் என்றும் தெரியவில்லை.

எந்திரிச்சதோட அப்பாவிடம் வம்பு இழுத்தேன். இதுவும் நான் வழக்கமாக செய்வது.

“முருகேஷ் வண்டி எந்த இடத்தில் போய்க்கொண்டு இருக்கிறது.” என்றார்.

“ஒரத்தநாடு பைபாஸ் சார்.”

“அங்கிள் இவர் ஏதோ மேஜிக் வச்சிருக்கார் அங்கிள். நான் சின்ன வயதிலிருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேன். ஒரு பயபுள்ளே நம்ப மாட்டேங்குது. ஏன்னா நான் சின்னப்புள்ளையாம்.”

அவர் சிரித்துக்கொண்டே

“ஆமாம் பாப்பா. நீங்கள் சின்னப்புள்ளேதான்.”

“அய்யோ. அவரு உங்களையும் மாத்திட்டாரு அங்கிள்.”

அப்பா எளிமையாக பிறரை குழப்பி விடுவார்.

அவர் சிரித்தார்.

ஓலா ஆட்டோ போன் செய்தார்.

வழக்கமாக பெங்களூர் பீக்கவர் தாமதத்தைப்பற்றி சொன்னார். இவர் தமிழ் பேசுபவராக இருந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . அப்பாவிடம் டீமார்ட் சென்று பேசலாமென ஆட்டோ ட்ரைவரிடம். ’ஒன்னும் பிரச்சினை இல்லை அங்கிள்’ என்றேன்.

டீமார்ட்டில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அண்ணன் கேட்ட ஹூடி செக்சனுக்கு சென்று எந்தப்பக்கம் புரட்டி புரட்டி எடுத்து தேடினாலும் அந்த ஹூடியைக் காணோம்.

அதற்குப்பதிலாக ட்ராக் பேண்ட் அழகாக இருந்தது. அவனிடம் எவ்வளவோ வற்புறுத்தியும் வேண்டாம் என்று மறுத்துவிட்டான். அம்மாவுக்கு சுடிதார் எடுத்தால் இரண்டு கவரில் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பமாக இருந்தது. வழக்கம்போல அப்பாவுக்கு அனுப்பி எதை எடுக்கலாம் என்று கேட்டேன்.

“ஆரஞ்சு கலர்.கிரீன் கலர் இரண்டில் ஆரஞ்சு கலரையே எடும்மா.”

“அப்பா அது ப்ளூ கலருப்பா.”

“நீ அனுப்பிய போட்டோவில் அப்படித்தான்ம்மா இருக்கு.”

“நான் வேற போட்டோ எடுத்து அனுப்புறேன்ப்பா.”

“வேண்டாம்மா. நீ பிங்க் கலரையே எடு. நீ ப்ளூங்கிறது வைலட் ப்ளூதானே. அதுதான் நீ எடுத்திருப்பேன்னு எனக்குத் தெரியும். லூபா.”

சின்ன வயதிலிருந்தே எனக்கு வயலட் புடிக்கும். அப்பா அந்த கலர் ப்ரைட்டாக இருக்காது என்பார். அதுவும் சரிதான். ஆனாலும் வயலட் கலர் பிடிக்கிறது. வெளியே வந்தால் பாப்கார்ன் விற்கின்ற இடத்தில் இரண்டு பேர் நின்று கொண்டு இருந்தார்கள். மசாலா போட்ட பாப்கார்னை வாங்கிக்கொண்டு ஆட்டோவுக்கு புக் செய்யலாமா நடந்து விடலாமா என்று யோசித்தபோது சாப்பிட வேண்டியது இருந்ததால் நடந்துவிடுவது சரியென தோன்றியது. அப்பாவிடம் வம்பிழுக்கலாமென போன் செய்தேன்.

“ஒரு நிமிஷம் லைன்ல இரும்மா. இனிப்பு இல்லாம லெஸீ போட முடியுமா. சரி இரண்டு மட்டும் கொடுங்கள்..நீ சொல்லும்மா.”

“அப்பா லெஸீன்னாலே இனிப்பு போட்டுதாம்ப்பா இருக்கும். யார் இரண்டு பேர்.”

“வேலை பார்த்த ஆளுங்கதான். ஒரு வாரமாக அவுங்களுக்கு சூஸ் வாங்கிக் கொடுக்கனும்ன்னு நினைச்சேன். வருகின்ற வழியில நைட் டைம்ங்கிறதால. கடை எதுவும் இருக்கிறதில்லையா. இன்றோடோ அவுங்க வேலை முடிகிறது அதான் வாங்கிக்கொடுத்துட்டு இருக்கிறேம்மா. கட்ப்பண்ணிட்டு கூப்பிடு. பணம் கொடுத்துட்டு ப்ளு டூத்தை மாட்டிக்கிறேன்.”

அப்பா மாதிரி யாரும் ஸ்வீட் சாப்பிட முடியாது. அவர் அண்ணனுக்கு ஏதோ நடப்பதற்கு இனிப்பு சாப்பிடுவதை பணையம் வைத்தார். அது நடந்துவிட்டால் அவர் இனிப்பானவைகளை நிறுத்திவிட்டார். ஆனால் இன்றுவரை சுகரா சுகரா என்று ஒவ்வொருவரும் கேட்கும் கேள்விகளுக்கு ஏதோவொரு பதில் சொல்லியபடியே இருக்கிறார். அப்பா எப்பொழுதும் அதிசயம்தான். மதியம் அவர் வேலைக்கார்களை திட்டிய போது அதனால்தான் நான் அவரிடம் சிரித்தேன். அவர் தோழர் சிந்தனை உடையவர். உழைப்பவர் வியர்வை அடங்கும் முன் ஊதியம் கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்ற ஆள். அவரால் எல்லாம் சில செயல்களை செய்யவே முடியாது. மீண்டும் போன் அடித்தேன்.

“அப்பா பாப்கார்ன் சாப்பிட்றேன்ம்பா. அப்படியே சாப்பிட்டு போகலாமென்று நடந்து போயிக்கிட்டு இருக்கேன்.”

“அந்த மசாலா மண்தானே.”

“அய்யோ அப்பா.”

நான் கத்தியதால் சிலர் என்னை திரும்பிப் பார்த்தார்கள்.

“ஆபீஸிலிருந்து கால் பண்ட்றாங்க.பத்திரமா போம்மா.”

“சரிப்பா..”

அப்பா ஜங்க் ஃபுட்டுக்கு எதிரானவர். அழகாக விளம்பரங்களை எடுத்து குழந்தைகளிடம் வியாபாரம் செய்துவிடுகிறார்கள். சமீபத்தில் ப்ரட்டில் தடவி சாப்பிடும் பால்க்கட்டி நிறுவனம் ஐஸ்கிரீம் தயாரிப்பில் இறங்கியது. அது மார்க்கெட்டில் வெளிவந்த ஒரு வாரத்தில் கிராமத்திலிருந்து வந்த சிறுவன் அந்த நிறுவனம் வைத்திருந்த பிரிஷரில் ஏறி அந்த ஐஸ்கிரீம் வேண்டும் என்று சொன்னானாம். அப்பா இதை சமீபமாக சொல்லிக் கொண்டு இருந்தார். ஒரு விளம்பரம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பார்.

குழந்தைகளின் சாக்லேட் மற்றும் லேஸ் போன்றவைகள் பல வியாதிகளுக்கு மூல காரணம் என்பார். இதுவொரு உலகலாவிய மோசடி. இதன் விழிப்புணர்வு எப்பொழுது எதன் மூலம் வரப்போகிறது என்று கவலைப்படுவார். வேறு வழியில்லாமல் பல முறை அவரே என் தொந்தரவினால் வாங்கியும் கொடுப்பார். நூடில்ஸ் பற்றி அவர் சொன்ன பொழுது கேட்கவில்லை. பிறகு ஒரு நாள் அந்த நிறுவனமே தவறை ஒத்துக்கொண்டது எனக்கு வெறுப்பாக இருந்தது.

அண்ணன் போன் செய்தான்.

“ஏய்…லூபா நீ சொன்ன அந்த ட்ராக்கை வாங்கிட்டு வந்துரு.”

“அடேய்ய்ய்…நான் கடையை விட்டு வந்துட்டேன்டா.”

“சரி.”

அவன் எப்போதும் இப்படித்தான். அவன் வேண்டாம் என்று மறுத்தாலும் நாம்தான் அதை செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பான். அது ஜெனடிக் பால்ட் என்பார் அப்பா. அப்பம்மா வீட்டு தாத்தா(அப்பாவின் அய்யா)இப்படித்தான் பண்ணுவார் என்று அப்பா சொல்வார். கொரோனா நேரத்து பின்னிரவு நேரத்தில் அவன் படம் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறான். டாய்லெட் போக விழித்த அப்பா.சாப்பிட்டியா என்று கேட்டுவிட்டு அவன் சாப்பிட்டேன் என்று சொன்னதும் தூங்கிவிட்டார்.

தூங்கிக்கொண்டு இருந்தவரை எழுப்பி ‘என்னப்பா பண்ட்றீங்க’ன்னு கேட்டுவிட்டு ‘இந்நேரம் அம்மா இருந்தால் நான் வேண்டாம் என்றாலும் நூடுல்ஸ் போட்டுக்கொடுத்திருப்பாங்க. நீங்கள் வருவீங்கன்னு படம் பார்த்துக்கிட்டு இருக்கேன். நீங்கள் தூங்கிக்கிட்டு இருக்கீங்க’ என்று சொல்லி இருக்கான். அப்பா அடிக்கடி அவனைக் கிண்டலடிப்பது இதை வைத்து தான். அவன் சொன்ன ட்ரஸை வாங்கிவிட்டாலும் அதை அவனிடம் சொல்லாமல் சர்ப்பிரஸ் செய்யவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டேன். அம்மாவுக்கு வாங்கி இருக்கின்ற ட்ரஸை அப்பா அம்மாவிடம் சொல்லமாட்டார் .

நாங்கள் எல்லோரும் அவரிடம் சொல்லிவிடுவோம். அவர் எதையும் எவரிடமும் சொல்லமாட்டார். முதல்முறையாக அவர் கேட்பதுபோல் ஜாலி பண்ணுவார். அதுதான் அப்பா. அவருக்காக வாங்கி இருக்கும் அவர் பல வருடங்களாக தேடிக்கொண்டிருக்கும் ப்ரவுன் கலர் சேர்ட்டை அவருக்கு வாங்கி வைத்திருப்பதை  கண்டுபிடிக்கும் விளையாட்டை அவரிடம் செய்யவேண்டும். நிச்சயமாக அவர் கண்டுபிடிக்க சிரமப்படுவார். இந்த முறை அண்ணனும் ஊருக்கு வருவதால் போகும் ஆவல் அதிகமாக இருந்தது.

சாப்பாட்டுக் கடை வந்துவிட்டது. தமிழ் அண்ணா வைத்திருக்கிறார். சேலத்துக்கு பக்கத்தில் ஏதோ ஒரு ஊர் என்று சொன்னார். அண்ணா கண்ணியமானவர். அவர் குணத்திற்கும் டேஸ்ட்டுக்கும் அவருக்கு ரெகுலர் கஸ்டமர்கள் அதிகம் இருந்தார்கள். மெஜஸ்டிக்கிலிருந்து வந்து சாப்பிட்டுவிட்டு சகருக்கு பார்சல் வாங்கி செல்கிறவர்களும் இருந்தார்கள். பொம்மச்சந்திரா வருவதற்கே குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாகும். இப்பொழுதெல்லாம் மக்கள் உணவு வெளியில் சாப்பிடுவதை ஸ்டைலாக வைத்திருக்கிறார்கள். ருசியான சிறிய கடைகளை ட்ரெண்ட் செய்துவிடுகிறார்கள்.

சையது அண்ணாவிடம்(எல்லோரும் சையது பாய் என்றுதான் கூப்பிடுகிறார்கள்). நான் சிக்கன் பிரைட் ரைஸ் போடச் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தேன். மூன்று டேபிள் அவைகளைச் சுற்றி நான்கு நான்கு சேர்கள். பலரும் நின்று கொண்டுதான் சாப்பிட்டுச் செல்வார்கள்.

அப்போது ஏழு அல்லது எட்டுவயதுடைய ஹிஜாப் போட்ட சிறுமியும் அதனுடன் சிலுவை அணிந்த அதன் வயது ஒத்த இன்னொரு சிறுமியும் சிறிய பர்சில் இருந்த காசு பணங்களை அண்ணா உட்கார்ந்திருந்த கேஷ் டேபிளில் கொட்டினார்கள். அண்ணா சிரித்துக்கொண்டே, ’என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

சிலுவை செயின் போட்டிருந்த குட்டீஸ்தான் சொன்னது.

“இரண்டு ப்ரைட் ரைஸ் வேண்டும்.”

அதற்குள் அண்ணாவுக்கு போன் வர அதில் பேசிக்கொண்டிருந்தார். குட்டீஸ்கள் இரண்டும் எனக்குப் போட்டுக்கொண்டிருந்த ப்ரைட் ரைஸ்ஸைப் பார்த்துக்கொண்டு இருந்தது. அந்த முகத்தில் நீண்ட நாள் ஏக்கமும் இதைக் கொடுத்தால் தேவலாம் என்ற துடிப்பும் இருந்தது. கடாய்க்கும் கரண்ட்டிக்கும் அவர்களின் விழிகள் மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்தது.

அண்ணா போனில் ஆர்டர் எடுத்துக்கொண்டு இருந்ததால் இந்த ப்ரைட் ரைஸ் இவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்பதை இவர்களாக நினைத்துக் கொண்டார்கள். கடாயைப் பார்ப்பது சட்டியைப் பார்ப்பது அண்ணாவைப் பார்ப்பது டேபிளில் குவிந்திருக்கும் காசு பணங்களைப் பார்ப்பதுமாக தவித்துக் கொண்டிருந்தார்கள்.

அண்ணா சீக்கிரம் போனை வைத்தால் தேவலாமென்று எனக்கேத் தோன்றியது. பேசிக்கொண்டு இருக்கும் கஸ்டர் ஒவ்வொன்றாக கேட்டுக் கேட்டு அந்தப்பக்கம் வேறு யாரிடமோ கேட்டு ஆர்டர் செய்தது அண்ணாவின் பேச்சிலையே தெளிவாக புரிய முடிந்தது.

எனக்கு முன்பு ரைஸ்ஸை வைத்துவிட்டு மாஸ்டர் சட்டியை சுரண்டி சரிசெய்து கொண்டிருந்தார். மூன்றாவது டேபிளில் இருந்தவர்களுக்கு கொத்துப்பரோட்டாவை இன்னொரு மாஸ்டர் கல்லில் கொத்திக்கொண்டு இருந்தார்.

குட்டீஸ்கள்  என்னைப் பார்த்து பிறகு சையதண்ணாவை பார்ப்பதுமாக நிலை கொள்ளாமல் இருந்தார்கள். நான் கேஸ் டேபிளுக்கு பக்கத்தில் இருந்ததால் என்னையும் அவர்கள் பார்க்க வேண்டியதாகிவிட்டது. நான் ஸாசை எடுத்து ஊத்துவதுபோலவும் சூடாக இருப்பதை கிளறுவது போலவும் சாப்பிட தாமதமாக்கிக்கொண்டிருந்தேன். அவர்களுக்கு முன்பு சாப்பிடுவது அசௌகரியமாக இருந்தது.

போனைப் பேசி முடித்த அண்ணா சில்லறைகளை எண்ணிக்கொண்டே இவ்வளவு சில்லறை எப்படி வந்தது என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

“நாங்கள் சேமித்து வைத்த காசு சிக்கன் ரைஸ் சாப்பிடனும்ன்னு ரொம்ப நாளாக ஆசை. அதான் உண்டியல் டப்பாவைத் திறந்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டோம்”என்றது ஹிஜாப்போடாத பெண். அது பேசுவதற்கு தயங்காமல் பேசியது.

நான் ஆறாவது படிக்கும் போது அப்பா அண்ணனையும் என்னையும் சேமித்த உண்டியலை உடைத்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் எல்லாவற்றையும் தனித்தனியாக குவியலாக வைக்கச்சொன்னார். இருவரையும் டினாமினேசன் போட்டு எண்ணச் சொன்னார்.

எண்ணி முடிப்பதற்கு அந்த ஞாயிறு மதியத்திற்கு மேல் கடந்துவிட்டது. அண்ணன் கிரிக்கெட் விளையாட அனுப்பவில்லை என்று கோவமாக இருந்தான். எல்லாவற்றையும் எண்ணி அவரவர்கள் தனியே எழுதி வைத்துவிட்டு இதை யாரிடமும் சொல்லாமல் எல்லாவற்றையும் ஒன்றாக்கி இருவருடையதையும் தனித்தனியாக வைத்திருங்கள் என்று சொல்லிவிட்டு அப்பா கடைக்கு ஏதோ சாமான்கள் வாங்க சென்றுவிட்டார். நான் வருவதற்கு தாமதமானால் பாயை அப்படியே இழுத்து ரூமில் வைத்துவிடுங்கள் என்றும் சொல்லிவிட்டுப் போனார். நாங்கள் எண்ணி முடித்து ரூமில் இழுத்து வைத்தபிறகு ஊரிலிருந்து தாத்தா வந்துவிட்டார். அதன் பிறகு அப்பாவும் வந்துவிட்டார்.

அண்ணனும் நானும் காசு பிரித்து வைக்கும் போதே என்னன்னவெல்லாம் செய்யலாமென பெரிய பிளானே போட்டோம். அவன் சைக்கிள் வாங்கவேண்டும் என்றான். நான் தான் அப்பாவே வாங்கித் தருகிறேன் என்கிறார் அதை ஏன்டா நீ வாங்கிறே. வேற ஏதாவது யோசி என்றேன்.

நாங்கள் மதியம் சாப்பிட்டும்போது அண்ணன் அப்பாவிடம் எதுக்கு இப்படி வைக்கச் சொல்லி இருக்கிறீர்கள் என்று செய்கையிலையே கேட்கச் சொன்னான். அப்பா சாப்பிட்டு முடியுங்கள் சொல்கிறேன் என்றார். சாப்பிட்டு முடித்ததும் அவரே ரூமில் இருந்த பாயை ஹாலுக்கு இழுத்து வந்தார்.

“இதில் இருக்கின்ற பணம் மொத்தம் எவ்வளவு என்று உங்கள் இருவருக்குதான் தெரியும். இதை நீங்கள் ஏலம் விடுங்கள். அதற்குதான் தாத்தா வந்திருக்கிறார். தாத்தாவை நாங்கள் இருவரும் பார்த்தோம் அவர் பொதுவாக சிரித்தார்.

“நீங்கள் குறைந்த பட்சம் ஏலத்தொகையாக நூறிலிருந்து ஆரம்பித்து வையுங்கள். ஐநூறு தொகையோடு ஏலம் முடிந்தால் அந்தப்பணத்தை கட்டணத்தொகையாக ஏலம் கேட்பவர்கள் கட்டிவிட வேண்டும். அந்த தொகையில் ஏலத்தை எடுக்க முடியாது. நீங்கள் வைத்திருக்கும் தொகையைவிட இரண்டு மடங்கிற்கு மேலே வருகின்ற தொகையில் பாதி தொகையை இரண்டு மடங்கு தொகையுடன் ஏலம் கேட்பவர்கள் கொடுத்தால் போதும் என்று எளிமையாக சொல்லி ஏலத்தை அப்பா ஆரம்பித்தார். அம்மாவுக்கும் தாத்தாவிற்கும் அப்பா ஏற்கனவே சொல்லி இருந்ததால் அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை.

தாத்தா அண்ணனோடதை எடுத்தவுடன் ஐநூறு என்றார். அப்பா முறைத்து விட்டு ஐநூற்றி பத்து என்றார். அம்மா ஐநூற்றி எழுபத்தி ஐந்து என்றார்கள். அரை மணி நேரத்தில் எங்கள் தொகையை ஏலம் நெருங்கிக் கொண்டிருந்தது. அண்ணனுக்கு கிரிக்கெட் விளையாட போகாத கோவமெல்லாம் காணாமல் போயிருந்தது. வீடே செம ஜாலியாக மாறி இருந்தது.

நான் ஊரில் அப்பம்மாவுக்கு போன் செய்து உன் மகனை கொஞ்சம் நெரைய ஏத்தி ஏலம் கேட்கச் சொல்லு அப்பம்மா என்றதும். எதுமே புரியாமல் அப்பம்மா அம்மாவுக்கு போன் செய்து விவரம் கேட்டுக்கொண்டு இருந்தது. ஏலம் செமையாக சூடு பிடித்தபோது அப்பா டீ போடச் சொல்லி அம்மாவை அனுப்பிவிட்டார். ஒரே வாக்குவாதம் சலசலப்பு எங்களுக்குள் நடந்து கொண்டிருந்தது. இந்த வாக்குவாதம் நடக்க வேண்டும் என்று தான் அப்பா டீ போட அனுப்பி இருப்பார் என்று பின் நாட்களில் நான் நினைத்துக்கொண்டேன். அது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். அப்பா எப்பொழுதும் வாழ்க்கையை முடிந்த மட்டும் மகிழ்ச்சியாக மாற்ற முயற்சித்துக்கொண்டே இருப்பார்.

சையது அண்ணா எண்ணிக்கொண்டு இருக்கும்போதே இரண்டு இருபது ரூபாய் நோட்டுகள் கிழித்திருப்பதை காட்டி ‘இதை நான்  என்ன செய்வது’ என்று என் நினைவை திசை திருப்பினார். அது பழைய இருபது ரூபாய் நோட்டு. அதனை வங்கியில் வாங்கவே யோசிப்பார்கள் என்று எனக்குத் தோன்றியது. குட்டீஸ்களின் முகம் சூம்பிவிட்டது. அடுத்து என்ன செய்வதென்று அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை. சிக்கன் ரைஸ் இரண்டையும் அந்த மாஸ்டர் அண்ணா போட்டு முடித்து பாக்ஸில் கொட்ட தயாராகிக்கொண்டு இருந்தார்.

“இரண்டு நோட் கிழிஞ்சிருக்கும்மா. இப்போது நான் என்ன செய்யிறது.”

இரண்டு பேரும் கண்ணில் கருவளையம் வருமாறு முகம் மாறி இருந்தார்கள்.

கடைக்கு வந்தவர்கள் சாப்பிடுவதிலும் அவர்களின் பேச்சிலும் கவனமாக இருந்தார்கள் .

“நான் பணம் தருகிறேன் அண்ணா. அவர்களிடம் பார்சல் செய்து கொடுங்கள்.” என்றேன்.

அவர்களின் தவிப்பு என்னை ஏதோ செய்தது. அழகான பிள்ளைகள். அந்த ஹிஜாப்பில் செம கியூட்டாக இருந்தது. இன்னொரு சிறுமி அவ்வப்பொழுது சிலுவையை கையிலெடுத்து முத்தமிட்டு போட்டது இன்னும் வசீகரித்தது.

“அதெல்லாம் வேண்டாம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.” என்றது சிலுவைச் செயின் போட்டப் பிள்ளை. பார்வையில் பார்த்து சிரித்ததில் அந்த குட்டீஸ் ஒரளவு நெருக்கமாகி இருந்தது. நான் எழுந்து சென்று ஜீப்பேயில் இரண்டு ரைஸூக்கான பணத்தைப் போட்டுவிட்டு அண்ணாவை அவர்களிடம் பணத்தையும் பார்சலையும் கொடுக்கச்சொன்னேன். அந்த குட்டீஸ்கள் முகத்தில் அத்தனை சந்தோசம். அத்தனைப் பிரியம். எனக்கும் சந்தோசமான மன நிலை அது மாறாமல் இருக்க நான் எனது ரைசையும் பார்சல் கட்டச்சொல்லிவிட்டேன்.

“இன்னைக்கு அக்காதான் உங்களுக்கு ஸ்பான்ஷர்.”என்றார் அண்ணா.

நான் ஹிஸாப் போட்டிருந்த பிள்ளையிடம் ‘நீ இப்தாரில் துவா கேட்கும்போது உனக்கு விருப்பமானதை எனக்காவும் கேட்டு அல்லாஹ்விடம் துவாச் செய்’ என்றேன்.

நாம்தானே இவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம் இவர்கள் நம்மிடம் பேசாமல் நம்ம ப்ரண்டுக்கிட்டே பேசுகிறார்கள் என்று அந்தக் குட்டீஸ் முகம் மீண்டும் மாற ஆரம்பித்துவிட்டது.

“சன்டே சர்ச்சுக்குப்போகும்போது கர்தர்க்கிட்டே எனக்காகவும் ஜெபிக்கனும். சரியா.”

இரண்டு பேரும் முகமலர்ச்சியுடன் பார்சலை தூக்கிக்கொண்டு ஓடியது விழுந்து விடுவார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த தெருவில் அவர்கள் மறையும் வரை அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. நான் எனது பார்சலை வாங்கி நடக்க ஆரம்பித்தேன். இந்த சந்தோசத்தை இந்தப்பணத்தையோ இதைவிட அதிகமான பணத்தைக் கொடுத்தாலும் வாங்க முடியாது என்று தோன்றியது. அப்பா தன் சக்திக்கு மீறி தர்மம் செய்வது பிறருக்கு உணவு கொடுப்பது ஏன் என்று இப்பொழுது தெளிவாக புரிந்தது. இந்த கியூட் மொமண்ட்டை அப்பாவிடம் சொல்ல வேண்டும்.

சரியாக அப்பாவும் கால் செய்தார்.

“போன முறை டீமார்ட் போனபோது அம்மாவுக்கு அதே பிங்கலர்ல. அதே டிசைன்ல சுடிதார் நான் எடுத்திருக்கேன். அதனால் அதனை நீ மாத்திரும்மா.”

கடையிலையே சாப்பிட்டு இருக்கலாமோ. டீ மார்ட்டில் சின்ன பேக்கைக்கூட உள்ளே விடமாட்டார்கள். தர்ஷினி அக்கா இந்த டீ மார்ட்டுக்கு முதல் முறை அழைத்து வரும்போது அம்மா ஹேண்ட் பேக் கையிலிருந்த சின்னப் பை எல்லாவற்றையும் ரூமில் வைத்து விட்டு வரச்சொன்னார்கள். டோக்கன் போட பேக் வாங்க கியூவில் நிற்கும் நேர விரயம் மிச்சமாகும் என்பதால் அந்த வழக்கத்தை அவர்கள் வைத்திருந்தார்கள். நானும் பெரும்பாலும் அதைக் கடை பிடித்தேன். வினாடி நேரத்தில் மனம் எதை எதையோ சிந்திக்க ஆரம்பித்து விட்டது.

“அப்பா நான் ரொம்ப தூரம் வந்துட்டேன்ம்பா. உங்கள் கிட்ட கேட்டப்போ நீங்கள் தானே எடுக்க சொன்னீங்க.”

“ஆமாம். நான் பார்க்கும்போது ஆரஞ்சு கலராக தெரிஞ்சுது.”

எனக்குள் பல்ப் எரிய ஆரம்பித்தது. மனுஷன் ஏதோ சம்பவம் பண்றாப்ள.

“தந்தையாரே…. என்ன…என்ன… நான் எவ்வளவு க்யூட்டான ஸ்டோரி வச்சிருக்கேன் தெரியுமா. கொஞ்ச நேரத்தில் எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்டீங்க தெரியுமா.”

“நாளைக்கு ஏப்ரல் ஒன்று. போன வருஷம் உன்னைய ஏமாத்தினப்போ சிரிச்சு என்கிட்ட சண்டை போட்டாலும் கவலையாக உன் கண்கள் உள்ளேப் போயிருந்ததைப்பார்த்தேன். உன் மனம் அப்பாவை ஜெயிக்க முடியவில்லை என்பதை நினைத்துக் கவலைப்பட்டதைக் கவனித்தேன். அதனால் இனிமேல் உன்னை ஏப்ரல் ஒன்றில் ஏமாற்ற கூடாது என்று முடிவெடுத்தேன். இனிமேல்தான் நாம் செய்யப்போறதில்லைன்னு அதான் இன்னைக்கு இந்த விளையாட்டை செய்தேன். ஸாரிம்மா” என்றார்.

அப்பா சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். அப்பா அந்தப்பக்கம் அழுது கொண்டு இருப்பார் என்பது எனக்குத் தெளிவாக தெரிந்தது. மனம் சோகமாக எனக்கு கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது.

அப்பா கணித்தது சரிதான். பெரிய மனித புத்தி எனக்கு வந்துவிட்டது. அப்பா என்னை மகிழ்விக்கவே இப்படி செய்கிறார் என்பதை மனம் மறந்து போனது. எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து என்னிடம் ஏப்ரல் ஒன்றை சொல்லியும் ஏமாத்துவார். சொல்லாமலும் ஏமாத்துவார். அவரின் வயிற்றில் குத்தி இடுப்பில் கிள்ளி இந்த வயதுவரை அவருக்கும் எனக்குமான ரம்மியமான தருணங்கள் அவை. இதை எப்படி நான் இழக்க இருந்தேன். ரூமிற்கு சென்றதும் ‘சாருக்கு வயசாயிடுச்சு போல தோத்துறுவோம்ன்னு பயமா’என்று மெஸேஜ் போட வேண்டும்.

அப்பாவுக்கும் எனக்கும் இந்த வயது சண்டை எப்பொழுதும் நடந்துகொண்டே இருக்கிறது. முக நூலிலையே அவர் தவறான வருடத்தை போட்டு வைத்துள்ளார். அவரின் பல புதிய நண்பர்கள் நம்பிகொண்டும் இருக்கிறார்கள். அதிலவொரு அறிவாளி மொசாம்பிகாவுல இருக்கிறார். அவர் என் கட்சிக்காரர். அது எனக்கு மகிழ்ச்சி. நானும் அவரும் தான் அப்பாவை வயதாகிவிட்டதென்று செமையாக கலாய்ப்போம். அவரும் செம டஃப் கொடுப்பார்.

இப்போது வயதாகிவிட்டதென்றால் மனுஷன் செம டெரரா என்ரி கொடுப்பாப்ளே. அப்பாவைப்பற்றிய நினைவே மீண்டும் புத்துணர்ச்சியைத் கொடுத்தது.

அப்பாவைப்போல கணவர் வேண்டும் என்று அப்பாவிடமே கேட்டது தவறில்லை என்று இப்பொழுது எனக்குத் தோன்றியது.

***

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *