வலியின் தீவிரம்
வாள் வீச்சைப் போல
வேதனையைக் கூட்டுகையில்
வறண்ட நிலத்தில் நுழைய முடியாமல் ஆவியாகிப் போன நீரென
பசியின் வயிற்றில்
ஒட்டிக் கொள்ளாத
உணவைக் காண்கையில்
மலையேற முடியாத பிள்ளையின் காலென
தொண்டையில் நுழையக்கூட முடியாத
நீரைத் தேடுகையில்
என்னைக் காணும் போது
எப்போதும் போல புன்னகையை
அணிந்து கொள்ள முயற்சிக்கிறீர்
காலனின் நீள் அழைப்பை
புறக்கணித்தபடியே
வாழ்வை எதிர்கொள்ள விரும்புகிறீர்
அரை நூற்றாண்டு காலத்தைத் தாண்டிய
உழைப்பின் பெரும் பாய்ச்சலில்
ஒற்றைக் கனவையாவது எனக்குள்
திணிப்பதில் ஒருபோதும் விரும்பியதில்லை
முதுமைப் பிணிக்குள்
முடங்கிய போதும்
செலவுகளுக்கான பட்டியலை
என் வசம் நீட்டியதில்லை
பாலைவனத்தில் தனித்தலையும்
ஈரக்காற்றின் பெருமூச்சைப் போல
உம்மை விட்டுவிட்டு
நான் வெளியேறிய போதும்
பிள்ளை வாசத்தின் பெரும் பயனென்றே
கையசைத்தீர்
மாதங்கள் நீள
நாங்கள் விழியினை மூடாது
உம்மை மடியினில் ஏந்தி வைத்திருக்கையில்
கொடும் பிசாசைப் போல
நீண்ட மரணத்தின் கரத்தில்
சிக்கிக்கொண்டீர்
ஆற்றாமையும் அழுது தீரா
மனக்கண்ணீரிலும் நனைந்தபடி
மண்ணுக்கு இரையென
உயிரற்ற யாக்கையினை
ஒப்படைத்தபடி திரும்பி விட்டேன்
ஒருபோதும் என்னிடம் பகிராத
உனது துன்பங்களை அறியாமல்
ஓடிக் கொண்டிருந்தவனுக்குள்
நீ மறைந்த பிறகே
எட்டிப் பார்த்து
அச்சம் கொள்ள வைக்கும் துன்பத்தை
உனது பெயரை உச்சரித்தபடியே
கடக்கப் பார்க்கிறேன்.
++

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.