மூன்று அரசியல் குறுங்கதைகள்

1. ஆட்சி சாதனைகள்

     தென்னிந்தியாவின் அனானிமஸ் மாநில முதலமைச்சர் பிரம்மாண்டமான மாநாட்டு மேடையில் பெருமிதம் பொங்க முழங்கிக்கொண்டிருந்தார்.

     “கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் ஆட்சியில் எண்ணற்ற சாதனைகள் புரிந்துள்ளோம். அவற்றை உங்கள் முன் பட்டியலிட்டு நினைவுபடுத்த விரும்புகிறேன்…”

     மக்கள் கூட்டத்தில் ஆவல் நிறைந்த அமைதி நிலவியது.

     முதலமைச்சர் கர்ஜித்தார்:

     “மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி; வேறெந்தக் கட்சிகளையும் விட ஊழல்களில் தலை சிறந்தவர்கள் நமது கட்சியினரே என்பதை நாம் தொடர்ந்து நிரூபித்துள்ளோம். அதோடு, நம் ஊழல்களை, அராஜகங்களை, அட்டூழியங்களை எதிர்ப்பவர்களை அதிகார துஷ்ப்ரயோகங்களால் அடக்கி ஒடுக்கி, ஒழித்துக் கட்டும் வல்லமை நம் அரசுக்கு உண்டு என்பதை நாடே அறியும். எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவது, கை கால்களை முறிப்பது என்பதையெல்லாம் நாம் திறம்பட செய்திருக்கிறோம். நம் கட்சித் தலைவர்களைக் கண்டால் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள்; அரசியல் விமர்சகர்கள் பயந்து நடுங்குகிறார்கள். சமூக வலைத்தளங்களில் நம் ஆட்சிக்கு எதிராக எவரேனும் உண்மை பேசினால் குண்டர் தடுப்பு சட்டத்தோடு பாய்கிறோம்…”

     கட்சிக் கரைத் துண்டு – வேட்டி, சேலை – ரவிக்கைத் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

     “அரசுத் திட்டங்களில் உள்ள குறைகளைச் சொல்பவர்களை, இலவசப் பொருட்களின் தரமின்மை பற்றிக் கேள்வி கேட்பவர்களை நாம் சிறையில் அடைக்கிறோம்; சித்திரவதை செய்கிறோம். கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்களின் விற்பனை பெருகியுள்ளது. கள்ளச் சாராயத்தால் சில நூறு ஆண்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துள்ளோம். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், கொடூரக் கொலைகளும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது நம் மாநிலத்தில் 435% உயர்ந்துள்ளது. இவை யாவும் நமது மகத்தான சாதனைகள்…”

     இளைஞர் அணிகள் கரவொலியிலும், மகளிர் அணிகள் சீழ்க்கையிலும் ஆர்ப்பரித்தன.

     முதல்வர் கைகளை நீட்டி, பெருமையுடன் கூறினார், “வேறு எந்தக் கட்சியின் ஆட்சியிலாவது இவ்வளவு சாதனைகள் செய்ய இயலுமா? இதெல்லாம் அவர்களின் கனவிலும் நடக்காதே! ஆனால், நமது ஆட்சியில் இவை நிஜமாகியுள்ளன. இது வேறு எவராலும் ஒருபோதும் தொட இயலாத இமாலய சாதனை!” 

     ஜே – ஜே கோஷங்கள் மாநாட்டு மேடையையே குலுங்க வைத்துவிட்டன.

     முதலமைச்சர் கையை உயர்த்தி தொண்டர்களை அமைதிப்படுத்தினார்.

     “இன்னும் ஒரு விஷயம். அடுத்த முறையும் நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த மாநிலத்தையே  சுடுகாடாக மாற்றிக் காட்டுவோம் என உறுதியளிக்கிறேன்…”

     மக்கள் கூட்டம் வெறித்தனமாகக் கை தட்டி ‘வாழ்க, வாழ்க’ கோஷமிட்டது.

2. அரசியல் பிரியாணி

தேவையான பொருட்கள்:

·    பாசுமதி அரிசி (வாக்குறுதிகள்) – 5 கிலோ: நைச்சியமானது, சுவை மிக்கது, தேர்தலின்போது மட்டும் காணப்படுவது.

·    மாட்டுக் கறி (சிறுபான்மை ஓட்டு வங்கி) – 3 கிலோ: ஜாதிய அடையாளமாக முன்னெடுக்கப்படும் புரட்சிகர இறைச்சி. 

·    ஆட்டுக்கறி (பெரும்பான்மை ஓட்டு வங்கி) – 1 கிலோ: மாட்டுக்கறியுடன் கலப்படம் செய்யப்படுவது.

·    வெங்காயம் (பொது மக்கள்) – 1/4 கிலோ: பல உள்ளடுக்குகள் கொண்டது, உரித்துக்கொண்டே இருந்தால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவது, கண்ணீர் வரவழைக்கக் கூடியது. 

·    தக்காளி (கட்சித் தொண்டர்கள்) – 1/2 கிலோ: கொழ கொழவென்று எந்த அழுக்கையும் தாங்கிக் கொள்ளும் குணம் கொண்டது. எளிதில் நசுக்கிப் பிழியலாம்.

·    பச்சை மிளகாய் (எதிர்க் கட்சிகள் மீதான தாக்குதல்) – 10 எண்ணிக்கை: காரம் ஏற்றக் கூடியது. தேர்தலுக்குத் தேர்தல் இதன் வீரியம் மாறும்.

·    இஞ்சி, பூண்டு விழுது (ஊழல்) – 200 கிராம்:  அரசியல் பிரியாணியின் மூலதனம்.

·    பிரியாணி மசாலா (கட்சிக் கொள்கைகள்) – 100 கிராம்:  அரசியல் பிரியாணியின் உயிர்நாடி. சிறுபான்மைக் கறிக்கு ஒரு மாதிரியும், பெரும்பான்மைக் கறிக்கு ஒரு மாதிரியும் பயன்படுத்தப்படுவது.

·    பட்டை, கிராம்பு (இன – மத – ஜாதிய வாதம்) – 50 கிராம்: சிறிது எனினும் காரம் மிக்கது. மெலிதான வாசனையும், வன் உணர்ச்சியைத் தூண்டுகிற தன்மையும் கொண்டது.

·    எண்ணெய் (பதவி) – 40 மில்லி: அரசியல்வாதிகளின் சகல கொழுப்புகளுக்கும் ஆதாரமாக இருப்பது.

·    நெய் (மாய்மாலப் பேச்சுகள்) – 80 கிராம்: நெஞ்சை உருக்கும் விதமான உறவு ரீதி அழைப்பு, பேச்சுகள் மூலம் மக்களை மயக்குவதும் மந்த புத்தி ஆக்குவதும்.

·    கொத்தமல்லி, புதினா (இலவசப் பொருட்கள், பணம்) – தலா 1 கட்டு: நாற்றத்தை மறைக்கப் பயன்படும் வாசனைப் பொருட்கள்.

·    உப்பு (கூட்டணிக் கட்சிகள்) – தேவையான அளவு: இது இருந்தால்தான் பிரியாணி மட்டுமன்றி எந்த அரசியல் சமையலும் ருசிக்கும்.

செய்முறை:

1. முதலில் வெங்காயத்தை (பொது மக்கள்) வாணலியில்  போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.  அவ்வப்போது நெய் (மாய்மாலப் பேச்சுகள்) சேர்க்கவும்.

2. பிறகு இஞ்சி – பூண்டு விழுதை (ஊழல்) கொட்டி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். ஊழல் நாற்றம் வெளியில் தெரியாத அளவுக்கு மசாலா சேர்த்துக் கிளறவும்.

3. தக்காளி (கட்சித் தொண்டர்கள்), பச்சை மிளகாய் (எதிர்க் கட்சிகள் மீதான தாக்குதல்) சேர்த்து வதக்கவும். தக்காளி மசிவது நாக்கில் எச்சில் ஊற வைக்கவும், மிளகாயின் கார நெடி மூக்கைத் துளைக்கவும் வேண்டும்.

4. பின்பு மாட்டுக்கறி (சிறுபான்மை ஓட்டு வங்கி), ஆட்டுக் கறி (பெரும்பான்மை ஓட்டு வங்கி) ஆகியவற்றைக் கொட்டிக் கலந்து வேகவைக்கவும்.

5. அரிசியை (வாக்குறுதிகள்) தனியாக வேக வைத்து எடுக்கவும். வதக்கிய மசாலாவில் அதை இட்டு, தேவையான அளவு உப்பு (கூட்டணிக் கட்சிகள்) சேர்த்து நன்றாகக் கிண்டவும்.

6. குறைந்த தீயில் வைத்து தம் போடவும். மேலே கொத்தமல்லி, புதினா (இலவசப் பொருட்கள், பணம்) தூவி அலங்கரிக்கவும்.

     சுவையான அரசியல் பிரியாணி தயார்.

     உண்பதற்கு முன் விருந்தாளிகளுக்கு மட்ட ரக குவாட்டரை (ஆபாசப் பேச்சாளர் – பேச்சாளினிகளின் சாக்கடைப் பேச்சுகள்)  குடிக்கக் கொடுக்கவும்.

     இந்த பிரியாணியை சாப்பிட்டு மயங்குபவர்கள் போடும் ஓட்டில், ஆட்டு மந்தை முன்னேற்றக் கழகம் ஆட்சியில் கொடி கட்டிப் பறக்கும்.

3. cuckold தங்கசிகாமணி கு.மு.க.

     கு.மு.க. எனப்படும் குடும்ப முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பிரமுகர்  தங்கசிகாமணிக்கு கட்சிப் பிரமுகர்கள் மத்தியில் கக்கோல்ட் சிகாமணி என்று காரணப் பெயர்.

cuckold என்ற சொல், மனைவி சோரம்போவதை ஏற்றுக்கொண்டு வாழும் கணவன் என்பதைக் குறிக்கும். இந்த இழிச் சொல்,  குயிலின் ஆங்கிலப் பெயரான cuckoo-விலிருந்து உருவானது. குயில்கள் தங்கள் முட்டைகளைப் பிற பறவைகளின் – குறிப்பாக, காக்கையின் – கூடுகளில் இட்டுவிட்டு விலகிவிடும். பிற பறவைகள் அல்லது காக்கைகள் அந்த முட்டைகளைத் தங்களுடையவையாகக் கருதி, குஞ்சு பொரித்து வளர்க்கும். இந்த அடிப்படையில், தனது மனைவி பிற ஆண்களுடன் சோரம் போய் அதன் மூலம் குழந்தைகள் பெற்றதை அறிந்தோ அறியாமலோ இருக்கிற கணவனுக்கும், மனைவி சோரம் போவதை அறிந்தும் அதற்கு ஆண்மையோடு எதிர்வினையாற்றாமல் ஏற்றுக்கொண்டிருக்கிற கணவனுக்கும் cuckold என்ற பெயராயிற்று.

சமூக, கலாச்சார நோக்கில் cuckold என்பது பேரவமானத்துக்குரியது. சில சமயங்களில் இது கணவனின் உடலியல் குறைபாடு, உளவியல் சிக்கல்கள் அல்லது விசித்திரமான பாலியல் ஆசைகளையும் வெளிப்படுத்தும். அதில் முக்கியமானது, மனைவியை இன்னொருவருடன் உடலுறவு கொள்ள வைத்து ரசிப்பது.

     கக்கோல்ட் தங்கசிகாமணியின் மனைவி பல ஆண்களுடன் தகாத உறவு கொண்டிருப்பவள். அவளது இரு மகன்களும் நிச்சயமாக தங்கசிகாமணிக்குப் பிறந்தவர்கள் அல்ல. எந்த ஆணுக்குப் பிறந்தவர்கள் என்பது அவளுக்கே தெரியாது. இதை தங்கசிகாமணியிடம் அவளே சொல்லியிருக்கிறாள். எனினும், தங்கசிகாமணி அந்தப் பையன்களைத் தனக்குப் பிறந்த பிள்ளைகள் என்பது போலவே வெளியுலகில் காட்டிக்கொண்டிருந்தார். புற உலகிற்கு இந்தக் கேவலம் தெரியாவிட்டாலும், வீட்டு வேலைக்காரர்கள், நெருங்கிய உற்றார் உறவினர்கள், நண்பர்களான கட்சிப் பிரமுகர்கள் ஆகியோருக்குத் தெரியும். அவர்கள் தங்களுக்குள் இது குறித்துப் பேசிச் சிரிக்கவும், அவரை இழிவுபடுத்திப் பேசவும் செய்வார்களே தவிர, அவரிடம் அது பற்றிப் பேசியதில்லை.

     தங்கசிகாமணிக்கு கட்சி செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அதைக் கொண்டாடும் விதமாக நெருங்கிய கட்சிப் பிரமுக நண்பர்கள் ஐந்து பேருக்கு அன்று தனது சொகுசு பங்களாவில் மது விருந்து கொடுத்துக்கொண்டிருந்தார். விருந்துக்கூடத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. பிரமுகர்கள் மப்பும் மந்தாரமுமாக இருந்தனர்.

     முதியவர் கரு.எழில்குன்றம், “ஏப்பா,… உஞ் சம்சாரம் வேலி தாண்டி மேஞ்சு, பயிராகிட்டு* வந்து, ரெண்டு கெடேரிக் குட்டி போட்டுட்டா; ஒரு ஆம்பளையா இருந்துட்டு அதைய எப்புடியப்பா சகிச்சுட்டு இருக்கற?” எனப் பேச்செடுத்தார்.

     மற்ற நால்வரும் அவரைத் திகைத்துவிட்டு, சிகாமணியாரைப் பரிதாபித்தனர்.

     சிகாமணியார் அலட்டிக்கொள்ளவில்லை. மக்கள் அவரது முகத்தில் எருமைச் சாணியை  வீசி, அந்த ஒளிப்படமும், காணொளியும் வைரலானபோதே கிஞ்சித்தும் வெட்கப்படாதவர், பாதி ஊரறிந்த இந்த ரகசியம் பற்றியா அவமானப்படப் போகிறார்?

     “நம்மகிட்டயும் பல குத்தம் கொறைக இருக்கும். அதே மாற சம்சாரத்துகிட்டயும் இந்தக் கொறை இருக்குதுன்னு அனுசரிச்சுப் போயிட்டா, வாள்க்கை ஸ்மூத்தாப் போகும்ங்க…” அவர் சர்வ சாதாரணமாக சொன்னதைக் கேட்டு அனைவரும் துணுக்குற்றனர்.

“முளுக்க நனைஞ்சதுக்கப்பறம் முக்காடு எதுக்கு? உள்ளதைச் சொல்லீர்றனுங்க.  மேற்படி சமாச்சாரத்துல நான் கொஞ்சம் வீக்கு. சம்சாரத்துக்கோ அதுல அப்புடியொரு ஆசை, வெறி! 69, 77, 71-ன்னு வித விதமா அனுபவிக்க ஆசைப்படுவா. எனக்கு 69 மட்டும்தான் முடியும். மத்தது முடியாது…”

அதைக் கேட்டதும் எல்லோரும் கமுக்கமாக சிரித்துக்கொண்டனர்.

“அடப் பாவி…! இதனாலதான் உனக்கு அடிக்கடி நாக்கு உரிஞ்சுபோகுதா? நான் கூட, நாம கட்சி வளத்துன நாத்தம் புடிச்ச வரலாறையும், உன்னோட எச்சக்கலை நாயத்தையும் பேசிப் பேசித்தான் உனக்கு அப்புடி ஆகுதுன்னில்ல நெனைச்சேன்!” இராசஇராசசோழன் சொல்லவும் சிரிப்புகள் வெடித்தன.

“69 தெரியும். அது உலக ப்பேமஸாச்சே…! அதென்றா மாப்ள 77, 71 எல்லாம்?”  மு.சுடலையாண்டி வியப்போடு கேட்டார்.

“77-ங்கறது ஸ்பூனிங், மச்சா…! 71-ங்கறதும் ஸ்பூனிங்தான். அதுல எக்ஸ்ட்ராவா என்ன பண்ணணும்னா….” சிகாமணியார் விவரித்ததைக் கேட்டு கரு.எழில்குன்றத்துக்குக் குமட்டியது. எழுந்து ஓடிச் சென்று வாஷ் பேஷினில் வாந்தியெடுத்துவிட்டு வந்தார்.

ஆனால், அவர் வரும்போது மற்றவர்கள் அது குறித்து சிகாமணியாரைத் துருவித் துளைத்து விசாரித்துக்கொண்டிருந்தனர்.

“அட நாறப் பயலுகளா…! இப்புடியெல்லாமாடா பண்ணுவீங்க? இதுலயெல்லாமாடா சுகம் உங்குளுக்கு?”

எல்லோரும் ஆனந்தமாகச் சிரித்தனர்.

“பெருசு! நீங்க பளைய பஞ்சாங்கம். உங்குளுக்கு பஜனைல ஒரே பாட்டு, ஒரே ராகம்தான் தெரியும். எத்தனை ராகம் இருக்குது, எத்தனை தாளம் இருக்குதுன்னு தெரியுமா? டே, மாப்ள…! பெருசுக்கு சொல்லிக் குட்ரா…” என்றார் மு.சுடலையாண்டி.

சிகாமணியார் அதி உற்சாகத்தோடு மிஷனரி, டாகி, கௌகேர்ள் முதலான நிலைகளை விளக்கலானார்.

“இந்த மாற வித்தியாசமான பொசிஸனெல்லாம் எஞ் சம்சாரத்துக்கு நெம்பப் புடிக்கும். சும்மா சொல்லக் குடாதுங்க. இங்க்லீஷ் போர்னோக்காரிகளே அவகிட்டத் தோத்துத் தோப்புக்காரணம் போடோணும்…! அதுவும் கௌகேர்ள் பொசிஸன்ல பூந்து வெளையாடுவா! எனக்குத்தான் அந்தக் குடுப்பினை இல்லீன்னாலும், அவ கச்சேரிகள்ல ஒன் மேன் ஆடியன்ஸா பக்கத்துலயே இருந்து, கண் கொட்டாமப் பாத்து ரசிப்பேன்…”

அவர் புளகாங்கிதத்தோடு சொல்லிக்கொண்டிருக்க, கேட்டுக்கொண்டிருந்தவர்களில் மூவருக்கு ஏறியிருந்த போதை இறங்கிவிட்டது. இருவருக்கு, அரை பாட்டில் ப்ராந்தியை ராவாகக் குடித்த மாதிரி போதை ஏறியது.

“எஞ் சம்சாரம்கறதுக்காகப் பெருமையாச் சொல்லுலீங்க. பாலம், சேர் பொசிஸன், சிட்டிங், ஸ்டேன்டிங், நீலிங்னு பல வகைலயும் கலக்குவா…”

மற்றவர்கள் அது குறித்து ஆவலோடு விசாரிக்க, கரு.எழில்குன்றம் குறுக்கிட்டார்.

“கொஞ்சம் இரு, கொஞ்சம் இரு! ஆறு மாசம் முந்தி நீயி நம்ம பொதுக் கூட்டத்துல சொன்ன சிட்டிங் – ஸ்டேன்டிங் – நீலிங் கதை, அவுசாரி ஊட்ல நடந்ததில்லையா? உங்கூட்ல நடந்ததுதானா..???”

சிகாமணியிடமிருந்து உலக மகா கேவலமான இளிப்பு வெளிப்பட்டது.

*******

அடிக் குறிப்பு:

*பயிராகுதல் – கால்நடைகளின் சினைப்பிடித்தலுக்கு கொங்கு வழக்கு.


*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *