1
வெளிப்புற சுவர் அருகே குரோட்டன்ஸ் செடிகள், டேபிள் ரோஜாச்செடிகள் என மண் தொட்டிகளில் வளர்ந்து படர்ந்திருந்த அந்த வீட்டின் முகப்பில் கதவருகே வெள்ளை நிறப்பலகையில் கருப்பு நிறத்தில் ‘சிட்டும்மா’ என்று எழுதப் பட்டிருந்தது. வீதியில் இருந்து நேராக பார்த்தால் கொல்லை தெரியும் படியான வீடு. கொல்லைப்புறத் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களில் இருந்து சப்தத்தோடு கீற்றுக்களை ஆட்டிக்கொண்டு இருந்தது காற்று. மஞ்சள், வயலட் டிசம்பர், கனகாம்பரச் செடிகளில் கண்கவர் வண்ணங்களில் பூக்கள் பூத்திருந்தன. கொல்லையின் நடுப்பகுதியில் ஆரஞ்சும் பச்சையும் கலந்து பின்னப்பட்ட நாடாக்கட்டில்ஒன்றும் இரண்டு ஊதாநிற Nilkamal நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. நாடாக்கட்டிலில் பூப்பறித்து போடும் பிளாஸ்டிக் டப்பாக்களும், வாட்டர் பாட்டில்களும் ஒரு மூலையில் இருக்க பள்ளிக்குக் கொண்டு செல்லும் பைகளை மற்றொரு ஓரத்தில் வைத்துவிட்டு அருகில் உள்ள நாற்காலிகளில் அமர்ந்து கொண்டார்கள் சித்ராவும், ரேகாவும்.
சித்ராவும், ரேகாவும் பத்தாம் வகுப்புத் தோழிகள். ஆறாம் வகுப்பில் இருந்தே அவர்கள் ஒரே பள்ளியில் சேர்ந்து படித்தாலும் இந்த வருடத்தில் ஒரே பிரிவில் இருந்ததால் இன்னும் நெருக்கமான தோழிகளாக மாறியிருந்தார்கள். ரேகா சித்ராவை ‘சித்து’ என்றே செல்லமாக அழைப்பாள்.
இந்த வருடம் பத்தாம் வகுப்பு என்பதால் தினமும் அவர்கள் இருவரும் ‘குரூப் ஸ்டடி’ செய்து கொண்டிருந்தனர். அருகருகே இருக்கும் தெருக்களில்தான் இருவரின் வீடுகளும் இருந்தன. ‘குரூப் ஸ்டடி’ என்றாலே அரட்டை இருக்கும் என இரண்டு பேரின் அம்மாக்களும் திட்டிக்கொண்டேதான் சம்மதித்தார்கள். எப்படியோ கெஞ்சிக் கெஞ்சி சம்மதம் வாங்கிப் படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் ரேகா அன்று வழக்கத்திற்கு மாறான பதட்டத்துடன் வந்தாள். அவளின் முகத்தைப் பார்த்து சித்ரா என்னவென்று தொடர்ந்து உலுக்கிக் கேட்டவுடன் ரேகா அதைப் பற்றி சொல்லச் சொல்ல உடல் மட்டும் இருவருக்கும் நடுங்கியபடி குலுங்கியது. ரேகா சொன்னதைக் கேட்டு இப்படிக் கூட நடக்குமா என்று சித்ரா அதிர்ந்து போய் இருந்தாள்.
நல்ல வேளையாக சித்ராவின் அம்மா கண்ணகி அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. மாவு மெஷினுக்கு கோதுமை அரைக்கச் சென்றிருந்தாள். ரேகா செருமிச் செருமி அழ அவளைத் தேற்றும் வழியும் இவளிடம் இல்லை. இருந்தாலும் அவள் தன்னிடம் சொல்லி அழுவது அவளுக்கு ஏதோ ஓர் ஆறுதலைத் தந்தது என்று மட்டும் புரிந்தது. ரேகாவின் கேவல் நிற்கும் வரை இவளுக்கும் பதட்டமாக இருந்தது. ‘அம்மா வேறு வந்துவிட்டால்.?’ படிக்காமல் என்ன அரட்டை என்று கத்தித்தீர்த்து விடுவாள் என்னும் பயம் வேறு சித்ராவைத் தொற்றிக்கொண்டது.
அன்று சனிக்கிழமை என்பதால் ரேகா எப்போதும் ஐந்து மணிக்கு வருபவள் நான்கு மணிக்கே வந்துவிட்டாள். சனி, ஞாயிறு மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கிப் படிக்கலாம் என பேசி வைத்திருந்தனர். அவ்வப்போது அம்மா சந்தேகப்படுவது போல அவர்கள் பள்ளி பற்றிய விஷயங்களுடன் கூடப் படிக்கும் பையன்கள் வம்பிழுப்பது பற்றியும் பேசுவதுண்டு. ஆனால் சித்ராவின் அம்மா கவனத்தை இங்கேதான் வைத்திருப்பாள் என்பதால் அதிகநேரம் அதெல்லாம் பேச முடியாது.
ரேகா கருப்புக்கும் சிவப்புக்குமான இடைப்பட்ட மாநிறம். முகம் அவ்வளவு லட்சணமாக கண், மூக்கு எல்லாம் அம்மன் சிலைக்கு எடுத்து வைத்தாற்போல் இருக்கும். அப்படியே அவள் அம்மாவை உரித்து வைத்திருக்கிறாள் என்று சித்ராவின் அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள்.
ரேகாவுடைய அப்பாவுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடிக்கமாட்டார் என்றாலும் வெள்ளிக்கிழமை இரவானால் அவருக்கு வார இறுதியைக் கொண்டாட வேண்டும். அன்றைய இரவு அவருக்கு மதுவோடு மட்டன், சிக்கன் ஏதாவது சாப்பிட வேண்டும். ரேகாவின் அம்மா வரத்தாமதாகும் என்பதால் இவரே முனியாண்டி விலாசில் வாங்கி வந்து சாப்பிட்டுக் கொள்வார்.
நேற்றிரவு வெள்ளிக்கிழமை என்பதால் அவர் வழக்கம் போல குடித்துக்கொண்டு இருந்தார். ரேகாவுடன் படிக்கும் வாசு அவர்கள் இருவருக்கும் நல்ல நண்பன். எந்தச் சந்தேகங்களை கேட்டாலும் பள்ளியில் பொறுமையாக சொல்லித் தருவான். நேற்று ஆங்கிலச் செய்யுள் படித்துவிட்டுக் கிளம்பும்போது ரேகா அவனிடம் நோட்டை வாங்கிக்கொள்ள மறந்து விட்டாள். அவன் அதைக் கொடுப்பதற்காக வீட்டுக்கு வந்தான். வாசலில் காலிங்பெல் அடித்தவுடன் ரேகா வந்து பார்த்தவள் வாசுவுக்கு அப்பா குடிப்பது தெரியக்கூடாது என்று நினைத்து கதவைச் சாத்திவிட்டு அவனோடு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தாள். அவனும் மறுநாள் ஆங்கிலத்தேர்வு என்பதால் பத்து நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டான்.
ரேகா உள்ளே நுழைந்த போது அவள் அப்பா தட்டில் இருந்த மட்டன் காலியாகி இருந்தது. அவர் கண்கள் சிவந்து இருந்தது. எப்போதும் குடித்தால் அவர் சத்தமாக ஏதாவது பேசி உளறுவது வழக்கம். மற்ற நேரங்களில் இருக்கும் இடம் தெரியாது. வெளியே போய் குடிப்பதற்கு இதுவே பரவாயில்லை என்று அவளின் அம்மாவும் சில வருடங்களாக விட்டுவிட்டாள்.
‘ரேகா?’
‘சொல்லுங்கப்பா?’
‘யாரது, வந்துட்டுப்போறது?’
‘நம்ம சுப்ரமணி அங்க்கிள் வீட்டு வாசுப்பா… நான் அவன் கிட்ட இங்கிலீஷ் நோட்டு வாங்க மறந்துட்டேன். அதக் குடுத்துட்டு போறான்.’
‘இந்தத் தட்டையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் போடு.’
‘ம்ம், சரிப்பா!…’ எடுக்கக் குனிந்தவள் கைகளை கெட்டியாகப்பிடித்துக் கொண்டார்.
எப்போதும் போலில்லாமல் அவர் பிடி வித்யாசமாகத் தோன்றவே ரேகாவிற்கு என்னவோ போலிருக்க ‘கைய விடுங்க’ வெடுக்கென இழுத்தாள்.
‘ஓஹோ, வாசு கூப்டா மட்டும் தான் போய் பேசுவியா, நான் கூப்டா பேச வரமாட்டியா?’
உடலின் மயிர்கள் அனைத்தும் ஒருசேரக் குத்திட்டு அதிர்ச்சிக்குள்ளாக சர்வமும் ஒடுங்க ஒரு விதமான கோரக்கத்தலுடன் வார்த்தைகள் வராமல் தடுமாற அவள் கேவியபடி கேட்டாள்.
‘என்ன பேசறீங்க நீங்க?’
‘உன் ப்ரண்ட்ஸ்ட்ட மட்டும் தான் போவியானு கேட்டேன்?’
அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்து கையை உதறியபடியே அலறி அழுதுகொண்டே இன்னொரு அறைக்குள் ஓடிச்சென்று கதவைச் சார்த்திக் கொண்டாள் ரேகா.
2
ரேகாவின் அம்மா, அப்பா இருவரும் அரசு அலுவலகத்தில் வேலை செய்தனர். நல்ல சம்பளம் என்பதால் அவளுக்கு எந்தக் குறையுமில்லை. கேட்டதை வாங்கித் தருவார்கள். அவளுக்கு ஒரு தங்கை மட்டும் இருந்தாள். அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ரேகாவின் அம்மா எப்போதும் அலுவலகத்தில் இருந்து வருவதற்குத் தாமதமாகும். அதனால் கண்ணகியின் வீட்டில் ரேகாவை குரூப் ஸ்டடிக்காக விடுவதாக சொல்லிவிட்டுச் செல்வாள்.
ரேகாவுக்கு தன் அப்பாவை இனி எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை. அவர் முகத்தில் இனிமேல் எப்படி விழிப்பது? எப்படி இங்கே நிம்மதியாக இருப்பது.? என் வீடே எனக்கு அந்நியமாகிப் போயிருக்கிறது. அம்மாவிடம் இதை எப்படிச் சொல்வது..?அம்மாவிடம் சொன்னால் தாங்குவாளா? வேறு யார் வம்பிழுத்தாலும் அம்மா, என் கிட்ட சொல்லிடு கண்ணு என்பாளே… இங்கேயே இப்படி நடந்ததை அம்மாவிடம் எப்படிச் சொல்வது? இதனை மறைப்பதுதான் எப்படி…? கேள்விகள் துளைக்கத்தொடங்கி தலைசுழன்றது ரேகாவிற்கு.
கோபம் உந்த பென்சில் சீவ வைத்திருந்த பிளேடை எடுத்து அவர் பிடித்த இடது கை முழுவதும் முழங்கையில் இருந்து உள்ளங்கை வரை கோடுகளைப் போட்டுக் கீறினாள். ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. அவசர அவசரமாக கதவைத்திறந்தாள். சமையல் அறையில் இருந்த கரித்துணியை எடுத்து ஒழுகிய ரத்தத்தைத் துடைத்தாள். அதைக் கொல்லையில் கொண்டு போய் வீசினாள்…மீண்டும் வீட்டிற்குள் வந்து கைகளில் கொஞ்சம் மஞ்சளை எடுத்து அப்பினாள். ஆனாலும் எரிச்சல் நிற்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் அறைவாசலில் வாளியில் இருந்த தண்ணீரில் கைகளைக் கழுவினாள். எரிச்சல் தாளவில்லை. சமையல் அறைக்குச் சென்று அம்மா வைத்திருக்கும் தீக்காயக் களிம்பை எடுத்து தடவிக்கொண்டாள்.
கைகளில் காயத்துடன் கர்சீஃப் வைத்து மறைத்துக் கட்டியவாறு வந்துதான் அழுதவாறு சித்ராவிடம் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள் ரேகா. சித்ராவிற்கு அழுகையும், கோபமும் தலைக்கேறியது. அவளைத் திட்டினாள். ‘இப்படிக் கூட அப்பா இருப்பாராடி’ என்று கேட்டுவிட்டு உடல் நடுங்கி அழுதாள். எரிச்சல் மண்டிய மனதோடு ‘நீ எதற்கு பிளேடில் கிழித்துக் கொண்டாய்? அவர் கையை கிழிச்சிருக்கணும்’ என மீண்டும் திட்டினாள்.
‘ப்ளீஸ், சித்து நானே என்ன பண்றதுனு புரியாமல் குழப்பத்தில் தாண்டி வந்து உன்ட்ட சொல்றேன், நீ வேற இப்படிப் பேசற?’ என்றவளைப் பார்க்கவே சித்துவிற்கு வலித்தது.
‘அதுக்குப் பிறகு அம்மா வந்து ஏதும் கேக்கலியாடி உன்ட்ட?’
‘இல்லடி, நேத்து நைட் அம்மா வரும் போது நான் தூங்கற மாதிரி புரண்டு புரண்டு நடிச்சிட்டேன். நிறைய முறை எழுப்பினாங்க. எழுந்துக்கல நானு. தங்கச்சிய மட்டும் எழுப்பி சாப்பாடு கொடுத்துட்டு எல்லாரும் தூங்கிட்டாங்க. அப்பா ஹாலில் உளறிட்டு இருந்தார்?’ என்றவுடன், ‘இன்னொரு முறை அந்தாள அப்பான்னு சொல்லாத?’ என்று கத்தினாள் சித்து. ‘என்னடி பண்ணச் சொல்ற, அப்படித்தானே கூப்பிடுவேன் இத்தனை நாளும்’ என்று அவள் சொன்னபோது பிளேடால் கீறிய காயங்களின் மேல் கண்ணீர்த்துளிகள் விழுந்தபடியிருந்தன.
சித்ராவிற்கு ரேகாவைக் கட்டிக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது. இனிமேல் எங்கள் வீட்டில் இருந்துக்கொள்ளெனச் சொல்லிவிடலாமா என்று நினைத்தாள். ஆனால் எல்லோரும் கேட்டால் என்ன பதில் சொல்வது எனப் புரியவும் இல்லை.
இருவரும் இதை எப்படி சமாளிப்பதென யோசித்தார்கள். சித்துவின் அம்மாவிடம் சொல்லலாமாவெனப் பேசினார்கள்.
ஆனால் அதற்கு ரேகா மறுப்பு தெரிவித்தாள். தன் அப்பாவைப் பற்றி சித்ராவின் அம்மா தவறாக நினைத்து விடக்கூடும் என யோசித்தாள். அவள் தன் அம்மாவிடம் சொல்லி விடுவாள் என்றும் பயந்தாள். ரேகாவின் இந்த முடிவு சித்ராவிற்கு கோபத்தைக் கிளறியது. அந்த ஆளை அவள் அப்பா என மறுபடியும் மறுபடியும் சொல்வதையும், அவர் பற்றிய பிம்பம் உடைபடக் கூடாது என யோசிப்பதையும் சித்ராவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
‘இன்னிக்கு காலைல எழுந்த பிறகு அப்பா என்னத் திரும்பி கூப்டாருடி?’
‘எதுக்கு, திரும்பி இந்தக் கை முழுக்க கிழிக்கவைக்கலாம்னா?’
‘இல்ல, சித்து ‘நேத்து நைட் நான் என்ன பேசினேன்னு எனக்குப் புரியல? நீ ஏன் கத்துனே? இனிமேல் அப்படிப் பேச மாட்டேன்னாரு.’
சித்ரா மிகவும் கூர்மையான பார்வை உடையவளாதலால் ‘இனிமேல் அப்படி பேசமாட்டேன்னா அவருக்கு என்ன பேசினார்னு தெரிஞ்சு இருக்கும்னு தானடி அர்த்தம்’ என்றாள்.
‘தெரியல, அவர் முகத்தை பாத்துப் பேசவே எனக்கும் புடிக்கல. சரிப்பானு சொல்லிட்டு ரூமுக்குப் போயிட்டேன்டி’ குழப்பமான பதிலைக் கூறினாள் ரேகா.
‘ஆனால் இனிமேல் அப்படி நடக்காதுனு என்ன நிச்சயம் ரேகா?’
‘எதுவுமே எனக்குப் புரியல புரியல புரியல, கேள்வி கேட்டுக் கொல்லாத சித்து நீயும்?’ இயலாமையில் உடைந்து தேம்பி மீண்டும் அழ ஆரம்பித்தாள் ரேகா.
3
சித்ராவின் அம்மாவின் கண்களில் மண்ணைத் தூவுவது சிரமமாக இருந்தது இருவருக்கும். இந்த விஷயத்தை அவளிடம் மறைக்க முடியாது தவித்தார்கள் இருவரும். கொல்லையில் மயில் அகவுவதைப் பார்ப்பதாக பாவனை செய்தார்கள். மயிலிறகு எடுக்கச்சென்று அதைத் தேடுவது போல சில நிமிடங்களைத் தள்ளினார்கள். டிசம்பர், கனகாம்பரச் செடிகள் அருகே சென்று சித்ராவின் அம்மாவுக்கு அவற்றை பறித்துத் கொடுத்தார்கள். திங்கட்கிழமை மாலை முழுவதும் இப்படியே கழிந்தது. ஒரு பக்கம் படிப்பதுவும் பிறகு அது பற்றி விவாதிப்பது போல குசுகுசுவெனப் பேசிக் கொண்டார்கள். வெள்ளிக்கிழமை இன்னும் மூன்று நாட்களில் வந்துவிடும். அதுவே அவர்களுக்கு மனக்கலக்கத்தை உண்டு செய்தது. அதற்குள் மீண்டும் இதை எப்படி சமாளிப்பது, எப்படித் தடுப்பது என்று எந்த வழிகளும் புலப்படாது தளர்ந்து போயினர்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை ரேகா வந்த போதும் அவர்கள் படிக்கவில்லை. மீண்டும் நடந்தது பற்றியே பேசினார்கள். திங்கட்கிழமை இரவு ரேகாவிடம் அவர் ஏதேனும் பேசினாரா என்று சித்து கேட்டாள். ஒரு பக்கம் படிப்பதுவும் பிறகு அது பற்றி ஒருவர் புத்தகத்தை மூடிக் கேள்வி கேட்டு இன்னொருவர் பதில் சொல்வது போல் பார்ப்பவருக்குத் தெரியும் விதமாக குசுகுசுவெனப் பேசிக் கொண்டிருந்தனர்.
ரேகாவின் அப்பா அவளிடம் எதுவுமே பேசவில்லை எனினும், அவள் அம்மா அப்பாவுக்கு டிபன் எடுத்துக் கொடு என்று சொல்லி இருக்கிறாள். அவளுக்குப் பயத்தில் உடம்பெல்லாம் நடுங்கி தட்டை எடுத்துக்கொண்டு போகும் போதே பட்டாசாலையில் கை தவறி போட்டுவிட்டதாக மெல்லக் கசிந்த குரலில் சொன்னாள்.
“அச்சச்சோ, அப்பறம்? “
‘அம்மா, என்னமா இதக்கூட செய்யத் தெரிலயா? ன்னு திட்டிட்டாங்க. எல்லாம் சுத்தம் பண்ணி நானே வச்சிக்கறேன் போன்னு அனுப்பிட்டாங்க. நானும் இதான் சாக்குனு ரூமுக்குள் வந்து படிக்கற மாதிரி நடிக்க ஆரம்பிச்சேன். ஆனால் ஹார்ட் மட்டும் நான் தப்பு பண்ற மாதிரி படபடனு துடிச்சது சித்து. எனக்கு இந்தப் பிரச்சினையில் இருந்து மீள வழியே இல்லையாடி? இப்படி தினமும் பயப்படறது தான் எனக்கு ரொம்ப எரிச்சலா வருது.’ சொல்லிவிட்டு புத்தகத்தைக் குனிந்து பார்ப்பது போல பாவனை செய்தாள்.
இனிமேல் அம்மா வரும் வரைக்கும் சித்ராவை ரேகா தன் வீட்டுக்கு துணைக்கு வந்து படிக்க முடியுமா எனக் கேட்டாள். சித்ராவுக்கு இந்தத் திட்டம் பிடிக்கவே இல்லை. ரேகாவின் அப்பா செய்த செயலை நினைத்து குமட்டிக்கொண்டு வந்தது. வெள்ளிக்கிழமை தோறும் ரேகாவின் நிலைமை இனி கேள்விக் குறியாகும் என்று தெரிந்தாலும் அம்மாவிற்கு சந்தேகம் வந்து விடும் என்று யோசித்தாள். அதனால் அந்த யோசனையைக் கைவிட நினைத்தாள் சித்து.
‘ஏய், ப்ளீஸ் டி எனக்கு வேற வழி தெரியல. கொஞ்ச நாள் இப்படி ஓட்டுவோம். நான் ஆன்ட்டி கிட்ட கேட்கிறேன். கொஞ்ச நாள் மட்டும் ஆன்ட்டினு சொல்றேன்.’ சொன்னவாறே ரேகா சித்ராவின் அம்மாவிடம் விழுந்து புரண்டு ‘ப்ளீஸ் ஆன்ட்டி ப்ளீஸ் ஆன்ட்டி’ எனக் கெஞ்சி சம்மதமும் வாங்கி விட்டாள்.
பள்ளி விட்டு வந்து சித்ரா ரேகா வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்தாள். அம்மா இப்படி பட்டென தன்னை விடுவாள் என்று எதிர்பாரக்கவில்லை. ரேகாவின் வீட்டுக்குச் செல்லவே அருவருப்பாக இருந்தது சித்ராவுக்கு. ரேகா வீட்டுக் காலிங்பெல்லை அழுத்தி விட்டுக் காத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அப்பாதான் கதவைத் திறந்தார்.
எப்போதும் வந்தால் ‘வாம்மா ரேகா, யார் வந்திருக்கா பாரு’ என்று அழைப்பார். தன்னையும் இப்படி நினைத்துப் பழகினாரோ என அவளுக்குத் தோன்றியது. ரேகாவின் நிலைமை இப்போது சித்ராவுக்குப் புரிந்தது.
‘அங்க்கிள், ரேகா?’
‘உள்ள இருக்கா… வரச்சொல்றேன்’ சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்று விட்டார்.
தாங்கள் பேசியது இவருக்கு எப்படியும் தெரிந்திருக்குமோ? அதனால் தான் இப்படிப் வேகமாகச் செல்கிறார். ‘ச்சே ச்சே’ அப்படி இருக்க வாய்ப்பில்லை என தன்னை சமாதானம் செய்து கொண்டாள். ரேகா வந்தவுடன் அவளைத் திட்டினாள். தான் இங்கே வரும் முன் தயாராக வாசலில் வெளியே நிற்கச் சொல்லியிருந்தாள். அதன் மூலம் அவளுடைய அப்பாவைப் பார்ப்பதை தவிர்க்க நினைத்தாள்.
‘என்னடி, உனக்கும் பயமாருக்கா?’
‘தெரில. அவர்ட்ட பேசவே எரிச்சலாருக்கு. உனக்காக வரேன்.’
‘என் நிலைமைய யோசிச்சயா சித்து? இப்போ புரியுதா உனக்கு?’
‘சரி விடு. நம்ம மேலே போலாம். வீட்டுக்கு போனா அம்மா என்ன படிச்சீங்கனு கேட்டாலும் கேட்பாங்க. அதுக்காகவாச்சும் கொஞ்சம் படிச்சிட்டுப் போறேன்டி.’
இப்படிப் பேச்சும் பாதி படிப்புமாக அந்த வாரம் கழிந்தது. மாடிக்கு சென்றதும் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பினாள் ரேகா. வார இறுதி வந்தவுடன் மறுபடியும் ரேகாவிற்குப் பயம் அதிகமானது. வெள்ளிக்கிழமை பள்ளியிலேயே புலம்ப ஆரம்பித்திருந்தாள்.
ரேகாவுக்குப் பதட்டம் அதிகமானால் உள்ளங்கைகள் வியர்த்து ஊற்ற ஆரம்பித்து விடும். ஆசிரியர்கள் யாராவது திட்டினாலே கர்ச்சீஃப் முழுவதும் நனைந்து விடும். அன்று காலையில் இருந்தே அவளுக்கு பதட்டம் குறையவில்லை. அன்று மாலையை எப்படிக் கடப்பது என்பது குறித்து பள்ளியில் பேசியபடி வீட்டிற்குக் கிளம்பினார்கள்.
4
சித்ராவிற்கு வியர்த்து வியர்த்துக் கொட்டியது. பயம் அதிகமானது. தான் ஏன் அப்படிச்செய்தோம் என்று யோசிப்பதற்குள் எல்லாம் நடந்ததை எண்ணிக் கலவரமுற்றாள். அவளால் வீட்டிலும் அம்மாவோடு இயல்பாக பேசமுடியவில்லை. ரேகா என்ன ஆனாள் என்று தெரிந்து கொள்ளவும் வழியில்லை என்பது மேலும் அவளை அச்சத்திற்கு உள்ளாக்கியது.
வெள்ளிக்கிழமை மதியம்தான் ரேகா அந்த கேள்வியைக் கேட்டாள்.
‘ஏய், சித்து நான் எங்காவது ஓடிப் போயிரட்டுமாடி?’
‘அடிப்பாவி , ஏன் இப்படி எல்லாம் பேசறே .. எங்கே போவ?’
‘தெரிலடி?’
‘எங்காவது என்ன மாதிரி ஓடி வர்றவங்களுக்கு ஹாஸ்டல் இருக்கும்ல?’
சித்ராவுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
‘வேணாம் ரேகா. நான் இன்னைக்கு சாயந்திரம் உங்க வீட்டுக்கு வரேன். எதுவும் போட்டுக் குழப்பிக்காதே.’
மாலை ஐந்தரை மணிக்கு சித்ரா ரேகா வீட்டிற்குச் சென்றபோது வாசலில் வந்து தயாராக நின்றிருந்தாள்.
அப்பா எங்கே என்றபோது ஜாடையில் கதவை மெதுவாகத் திறந்து காண்பித்தாள் ரேகா. அவர் எல்லாவற்றையும் ரெடியாக டீபாயில் வைத்துக் கொண்டிருந்தார்.
இருவரும் மிகவும் மெதுவாக பூனை போல நடந்து மாடிப்படி ஏறி மேலே சென்றனர். அன்று படிக்கவேண்டாமென உட்கார்ந்து மெதுவாக பேசிக்கொண்டு இருந்தனர்.
அரை மணி நேரம் கழித்து ரேகாவை அவளுடைய அப்பா கீழே இருந்து அழைத்தார்.
‘ரேகா, இங்கே வா?’
ரேகாவின் உள்ளங்கைகளில் மீண்டும் வியர்வை சொட்டி ஈரமானது. சித்ராவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். பயப்படாமல் போ என ஜாடையில் சொன்னாள்.
‘இன்னைக்கும் அப்படி பேசினா என்னடி பண்றது? நான் காது கேட்காத மாதிரி இருந்துக்கவா?’
“நோ, நீ போ. எதுனா பேசினா பாத்துக்கலாம்.”
மெதுவாக இறங்கி ரேகா கீழே போனாள்.
மாடியில் இருக்கும் ஜன்னலில் இருந்து பார்த்தால் கீழே ஹால் தெரியுமாறு அவர்கள் வீடு இருந்தது. ஜன்னலருகே பெரிய திட்டாக மணல், கற்கள் என்று வேலை செய்ய கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அவள் சென்ற பிறகு மெதுவாக நகர்ந்து அந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
‘ரேகா, என்ன பண்ற?’
‘சொல்லுங்கப்பா?’
‘கிச்சன்ல இருந்து இன்னொரு ப்ளேட் எடுத்துட்டு வா.’அவளுக்கு திக்திக்கென அடித்துக் கொண்டது.
சித்ரா மேலே இருந்து பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தாள். ரேகா இன்னொரு தட்டை எடுத்துக்கொண்டு வந்தாள். அவர் இன்னொரு தட்டில் மட்டன் பீஸ்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அதனை ரேகா கையில் கொடுத்து ஏதோ சைகை செய்தார். இவள் அருகே போகாமல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தாள். அவர் கண்கள் சிவந்து இருந்தன. அவள் கையை அவர் பிடிக்கப்போனார்.
சித்ராவின் கைகள் மணலை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டன. தொண்டை விக்க ஆரம்பித்தது. தன்னை அறியாமல் கத்திவிடுவாளோ எனத் தோன்றியது அவளுக்கு. இரண்டு கையகல அரளைக் கற்களைக் திட்டில் இருந்து எடுத்தாள். நேராக அவரின் நெற்றியைக் குறிபார்த்து வீசினாள். கல்லெறிந்த அடுத்த நொடி உடனே மாடியை விட்டு கீழிறங்கி வேகவேகமாக வீடு வந்து விட்டாள்.
நான்கைந்து நாட்களாகவே சித்ராவின் அப்பா வேலை அதிகமாக இருந்ததால் அவரை தினமும் இரவு நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் வருவதற்கு முன்னரே தூங்கிப் போயிருந்தாள்.
அன்று ரேகா வீட்டில் இருந்து வந்த பிறகு அவளுக்கு உலகத்து அப்பாக்கள் எல்லாரும் அப்படித் தானாயென திடீரென்று தோன்றியது. முதல் முறையாக அவள் அப்பா மீதும் சந்தேகம் வந்தது. அப்பா இதற்குத்தான் நம்மைக் கொஞ்சுகிறாரா என்றெல்லாம் தோன்றியது. நேற்று கூட என் “சிட்டும்மாவ” ஏதாச்சும் சொன்ன? அவ்வளவுதானென அம்மாவிடம் சொல்லும் போது தன் மேவாயைக் கொஞ்சி முத்தி வைத்தாரே.
‘வயசுக்கு வந்த கொமரி அப்பனாவே இருந்தாலும் தள்ளி நிக்கணும்னு அம்மா இதற்குத்தான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாளா.?’ எத்தனை நாட்கள் அம்மா திட்டினால் கூட அப்பாவோடு சேர்ந்து அவர் கால்மேல் தன் கால்களைப் போட்டுத் தூங்கியிருக்கிறோம். இனிமேல் அதல்லாம் செய்யக்கூடாதா? அப்பாவின் தோள்களில் ஏறி கரகரவென்று சுற்றுவோமே? அதையெல்லாம் நிறுத்திவிட வேண்டுமா? நாங்கள் இருவரும் என்ன செய்வது என்ன செய்வது… தன் அப்பா மீது சந்தேகம் வந்தது அவளுக்கு மேலும் மேலும் குழப்பமாயிற்று. எங்கேயாவது போய் முட்டிக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. இப்போது அவளுக்கும் ரேகா போல பிளேடு எடுத்துக் கிழிக்கவோ இல்லை என்றால் சுவற்றிலாவது போய் ‘டங்டங்’ என்று முட்டிக்கொள்ளலாமா என நினைத்தாள். தலை முழுவதும் அப்பா பற்றிய நினைவுகள், குழப்பங்கள் ஆக்ரமித்து நின்றன.
அப்பா அன்று இரவு வீட்டுக்கு வந்த பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது புரியாமல், என்ன செய்யலாமென யோசித்துக் கொண்டிருந்தாள்.
முதல் முறையாக அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு விஷயத்தை மறைக்கப் போகிறோம் என்பதே அவளுக்கு உறுத்தியது. அப்பாவிடம் மட்டுமாவது இதைப் பற்றி சொல்லலாம் என்றால் ரேகா கெமிஸ்ட்ரி மீது சத்தியம் வாங்கிக்கொண்ட நினைவு வந்தது.
சித்ராவின் அப்பா வீட்டுக்குள் நுழைந்தவுடன் “சிட்டும்மா” என்றழைத்தார். அவள் சிட்டு போல துள்ளி ஓடிக்கொண்டே இருக்கிறாள் என்று ஆசையாய் சிறுவயதிலேயே அவர் வைத்த செல்லப்பெயர் அது.
‘உனக்குப் புடிச்ச ஜாங்கிரி சூடா இருக்கும்னு வாங்கிட்டு வந்தேன்.. வாம்மா… அப்பா ஊட்டிவிடவா?’
அவளுக்கு அப்பாவிடம் வாங்கிக் கொள்ள முதல் முறையாக பயம் வந்தது. வேறு வழியில்லாமல் தன் அறையில் இருந்து எழுந்து போனாள்.
‘ம்க்கும். இன்னும் கொழந்த பாருங்க? கொமரியாகி இன்னும் ஊட்டிக்கிட்டு’ எப்போதும் போல அம்மா திட்டிக்கொண்டே தட்டுகளை எடுத்து வந்தாள்.
‘அவ எவ்வளவு வளர்ந்தாலும் எனக்கு குழந்தை தானடி’ மனைவியிடம் சொன்னவாறே மகளிடம் பேச ஆரம்பித்தார்.
‘என்ன சிட்டும்மா! படிச்சிங்களா நீயும், ரேகாவும் இன்னிக்கு அவ வீட்ல.?’
அவளுக்கு அவர் கேட்டதற்குப் பதில் சொல்லவே தோன்றவில்லை. அவள் திடீரென வெறிகொண்டவள் போல அப்பாவை கழுத்தோடு இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அழுதாள்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் ‘ஏண்டா சிட்டும்மா, எதுக்கு இப்படி அழறே? என்னாச்சு, அம்மா ஏதாவது திட்டினாளா, ரேகாவோட சண்டை போட்டுக்கிட்டியா? ஸ்கூல்ல ஏதாவது பிரச்சினையா? எதுன்னாலும் அப்பாகிட்ட மறைக்காமல் சொல்லு சிட்டும்மா’ என்றார்.
ஒண்ணுமில்லப்பா ‘ஐ லவ் யூப்பா’ என்றாள்.
000
கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழையஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி.
இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ், கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.