ராஜவனக்காடு மிகப்பெரியது. அங்கு எல்லாவகையான விலங்குகளும் வாழ்ந்து வந்தன. பருவ மழை தப்பிப்போனதால் வனம் முழுதுமே இப்போது பெரும் வரட்சி நிலவி வந்தது.

உயர்ந்து நின்றிருந்த மரங்களெல்லாம் தங்கள் இலைகளை இழந்து மொட்டையாய் வான்நோக்கி மழையை எதிர்நோக்கி உயிரை தக்கவைத்து நின்றிருந்தன. இருந்தும் பலமரங்கள் காய்ந்து கட்டைகளாகிவிட்டன.

இப்படியிருக்க வனமெங்கும் புல் பூண்டுகள் எல்லாம் காய்ந்து சருகாகி காற்றினால் போன இடம் தெரியவில்லை. உயிர்க்கொல்லி விலங்குகளுக்கு வனத்தின் இந்த நிலைமை எந்த மாற்றத்தையும் கொடுத்துவிடவில்லை.

ஏற்கனவே காட்டெருமைக்கூட்டமும், மான்கள் கூட்டமும், யானைக்கூட்டமும் பஞ்சம் பிழைக்க வேறு பாதையைத் தேர்ந்தெடுத்து ராஜவனத்தை விட்டு போய்விட்டன.

தண்ணீர் கிட்டாமல் பல விலங்குகளும் பறவைகளும் வனமெங்கும் விழுந்து உயிர்விட்டு காய்ந்து கருவாடாய்க் கிடந்தன. இடம்பெயர்வு செய்யாமல் ராஜவனத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும் விலங்குகள் மட்டுமே இப்படியான கதிக்கு ஆளாகிக்கொண்டிருந்தன.

மரத்தடியில் கொஞ்சமேனும் நிழல் இருந்தால் அதன் கீழ் ஓய்விற்கு படுத்த மயில்கள், மான்கள் என வனம் முழுக்க ஆங்காங்கே இறந்து ஈக்கள் மொய்த்துக்கிடந்தன.

எந்த விலங்காக இருந்தாலும் உயிர்வாழ்வதற்கு தண்ணீர் வேண்டுமல்லவா! அப்படியும் வனத்தில் எங்கேயேனும் ஒருபக்கம் தண்ணீர் கிடைத்துக் கொண்டுதானிருந்தது. அது அந்தப்பகுதி விலங்குகளுக்கு மட்டுமேயான பகுதி.

நிலைமை இப்படியிருக்க புள்ளி மானொன்று தன்போக்கில் வனத்திலிருந்து வெளியேறும் வழியறியாமல் வனத்தையே சுற்றிக்கொண்டிருந்தது. அதன் கூட்டத்தார் முன்பே இந்த வனத்தை விட்டு வெளியேறிப் போயிருந்தார்கள்.

அப்படி சுற்றிக்கொண்டிருந்த அது எங்கேனும் மானின் சடலம் கிடக்கையில் அருகில் சென்று நின்று இறந்த மானுக்கு இறுதி அஞ்சலியை செய்துவிட்டு.. தனக்கும் இப்படியொரு நிலைமை வந்துவிடுமோ சீக்கிரமாக? என்று பயத்துடன் பச்சையைத் தேடி அலைந்தது.

தன் பசிக்காக அது காய்ந்த இலைகளையும் கூட தின்ன ஆரம்பித்ததிலிருந்து உடலில் சக்தி அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தவண்ணமிருந்தது. ஓட்டம் என்பதையே அந்தப் புள்ளிமான் மறந்திருந்தது.

இப்படியிருக்க அந்தப் புள்ளிமான் இந்த கடும் வெய்யிலில் சோர்ந்து போய் எங்கேனும் படுத்து ஓய்வெடுக்க இடமிருக்கிறதா?வென சுற்றிலும் நோட்டமிட்டது. சற்று தூரத்தில் குகை ஒன்றின் வாயிலை அது கண்டது. குகை என்றால் அதில் மாமிச உண்ணிகள் இருப்பதற்கு வாய்ப்பு அதிகமிருக்கிறதே!

சிங்கமிருக்கலாம்.. நரிக்கூட்டமிருக்கலாம்.. ஓநாய்க்கூட்டமிருக்கலாம்! சரி என்னதான் இருந்தால் என்ன? இங்கே இதே இடத்தில் விழுந்தால் மீண்டும் எழவா போகிறோம்? உடல் முழுக்க அப்படி வலியாய் இருக்கிறதே! என்று எண்ணிக்கொண்டே குகையை நோக்கி புள்ளிமான் சென்றது.

தன் மேல்த்தோல் முழுக்கவுமே அடிக்கும் வெய்யிலில் தீப்பற்றி எரிந்து வெந்துபோயிடுமென நினைத்தது அது. கண்களின் பார்வைக்கு திரும்பிய திசையெல்லாம் தூரத்தில் ஆற்றுநீர் ஓடுவது போல வெப்ப அலைகள் வீசுவதை கடந்த சிலமாதங்களாய் அது காண்கிறது.

குகையினுள் சிங்கமிருந்தால் கெஞ்சிக்கேட்டேனும் வலிக்காமல் தன்னை கொன்று தின்றுவிடும்படி சொல்லிட வேண்டும். யாருக்கேனும் தன் உடல் உணவாக ஆனதென்றால்.. அதையுமே தானமாக உயிரோடு கொடுத்துவிட்டு மேலுலகம் சென்றால் பெரிய மதிப்போடு என்னை வரவேற்பார்கள்! பதவிகூட கொடுப்பார்கள்!

சாவிலிருந்து எந்த விலங்குகளும் தப்பவும் முடியாது தானே! அது எப்போது வந்தாலென்ன? மேலுலகம் போகையில் இந்த முழுக்காட்டையுமா தூக்கிக்கொண்டு போகிறோம்? எங்கே போறோம்? என்ன ஆவோம்? என்றுகூட ஒன்றுமே தெரியாது.

இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டே புள்ளிமான் குகையின் வாயிலுக்கு வந்துவிட்டது. பார்த்தால் வாயிலில் பெரிய பெரிய எலும்புத்துண்டுகள் அங்கங்கே கிடந்தன. இதெல்லாம் ரொம்ப காலமாய் கிடக்கும் போலிருக்கே! உள்ளே நிச்சயமாக மாமிசம் சாப்பிடும் விலங்கு தான் இந்தக்குகையை வசிப்பிடமாக கொண்டு வாழவேண்டும்.

’உள்ளார யாரு?’ என்றொரு குரலிடலாமா? என்று நினைத்த புள்ளிமான் ஆனது ஆகட்டுமென உள்ளே நுழைந்தது. கொஞ்சம் தூரம் வரை உள்ளே வந்த புள்ளிமானுக்கு.. பின்பாக தனக்கும் முன்பாக இருட்டாய் இருக்கவே ‘குகையே இதோட முடிஞ்சிதா?’ என்று நினைத்தது.

கொஞ்சம் நேரம் அங்கேயே நின்று கண்களை இருளுக்கு பழக்கப்படுத்திக்கொண்டது. உள்ளே வெப்பமே இல்லாமல் இருந்தது. கொஞ்சம் நேரத்தில் கண்கள் பழக்கப்பட்டதும் முன்னேறிச்சென்றது.

உள்ளே சற்றுத்தொலைவில் இரு கண்கள் தன்னைப்பார்ப்பதைக்கண்டு ஒருகணம் நின்று, ‘யாரது?’ என்று பார்த்தது. அங்கே ஒரு பாறைத்திண்டின் மீது ஒரு வரிப்புலி படுத்திருந்தது.

அது இரவுநேர வேட்டையாடி. பகல் முழுதும் சோர்ந்து இந்த பாறைத்திண்டின்மீதே கிடக்கும். அது உள்ளே வந்துகொண்டிருந்த மானைப் பார்த்துவிட்டது. உணவுக்காகவே வனத்தில் சுற்றும் விலங்கல்லவா அது!

’சரி இன்றைக்கு நான் இரவு வேட்டைக்கி வெளியில் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது! அதான் கடவுளே எனக்கான இரையை குகைக்கே அனுப்பித்தந்துவிட்டாரே! நன்றி கடவுளே! என்ன கொஞ்சம் வத்தலும் தொத்தலுமாய் இருக்கிறது இந்த மான். வனத்தில் திரியும் எல்லா மான்களுமே இப்போது இப்படித்தானே எலும்பும் தோலுமாய் இருக்கின்றன. நல்ல புஷ்டியான மானைப்பார்த்து பலமாசமாகி விட்டது’ என்று நினைத்தது வரிப்புலி.

“வா மானே! வெளியே பயங்கரமான வெய்யிலடிக்குதுன்னு கொஞ்சம் நேரம் குகையில நிழல்ல படுத்து எந்திரிச்சுட்டு போலாம்னு வந்தியா?” என்றது வரிப்புலி.

படுத்திருப்பது புலி என்று தெரிந்ததுமே உடல் நடுங்கி நின்ற புள்ளிமான் பின்பாக தன்னையே ஒருவாறு தேற்றிக்கொண்டது. ’சாவைத்தேடி வந்துவிட்டு அதைக்கண்டதும் அஞ்சுவதா? நெவர்! ஆனால் சாகும் முன்பாக இந்த புலியை பூனையாக்கி வேடிக்கை பார்க்கோணும்!’ என்று அது யோசித்தது.

“என்ன வரிப்புலியாரே! பகல் தூக்கமா? என்னைப்பார்த்து பயந்துவிட்டீரா? இப்போதெல்லாம் என்னைப் பார்த்தால் வனத்தில் உள்ள எல்லா விலங்குகளும் பயப்படுகின்றன தெரியுமா!” என்றதும் வரிப்புலியே ஒருகணம் மிரண்டு போனது. என்ன சொல்கிறது இந்தப்புள்ளிமான்?

’இந்தப் புள்ளிமானைக்கண்டு வனமிருகங்கள் பயப்படுகின்றனவா? எதோ இதை அடித்துக் கொன்று மூன்று நாளைக்கு இங்கேயே வைத்து ஜாலியாக பசியாறிக் கிடக்கலாம் என்று யோசித்தால் இது இப்படி வாயிற்கு வந்தபடி சொல்கிறதே! அப்பவும் நினைச்சேன்.. என்னடா ஒரு புள்ளிமான் ரொம்பத் தைரியமா.. குகைக்குள்ள நான் இருப்பேன்னு தெரிஞ்சே உள்ளார வந்திருக்கேன்னு! அடக்கடவுளே! இது உன் திருவிளையாடலா?’

“என்ன வரிப்புலியாரே! பேச்சைக்காணமே.. என்னை இந்த வனத்துல ’உயிர்க்கொல்லி மானு’ன்னு எல்லா விலங்குகளும் தள்ளி வச்சிட்டுதுக! நான் வனத்துல இப்ப உயிர்வாழுற விலங்குகளோட லிஸ்டை எடுத்துட்டு இருக்கேன். வர்ற வழியில இந்தக்குகையை பார்த்ததால உள்ளார எதாச்சிம் பூச்சி வாழுதான்னு பார்த்து கணக்கு எழுத வந்தேன்.”

“நீ என்ன சொல்றே புள்ளி மானே? எனக்கு ஒன்னும் விளங்கலை. உன்னை எதுக்கு உயிர்க்கொல்லி மானுன்னு உட்டு வச்சிருக்காங்க? சிங்கம் கூடவா உன்னை உட்டு வச்சிருக்குது? பார்த்தா லிஸ்ட் எடுக்க குகைக்குள்ள வந்தேன்றே? நீ யாரு மொதல்ல?”

“அப்பிடிக்கேளு வரிப்புலியாரே! நான் செண்ட்ரல் கவர்மெண்ட் அனுப்பி வச்ச தூதுவன். கொரனா காலத்துல விலங்குகள் எண்ணிக்கை எத்தனை குறைஞ்சிருக்கு? ஏற்கனவே எத்தனை எண்ணிக்கை இந்த ராஜவனத்துல இருந்துச்சுக.. எல்லாமையும் டீட்டெய்லா கணக்கு வச்சு கொண்டுபோயி நான் சப்மிட் பண்ணனும் என்னோட அறிக்கையை!”

“சப்மிட் பண்றியா? அப்பிடின்னா ஆப்ரேசனா?”

“வரிப்புலியாரே.. அரசாங்கத்துக்கிட்ட விலங்குகளோட எண்ணிக்கையை கொண்டுட்டு போற தூதுவன் நானு. இப்ப இந்த ராஜவனத்துல மொத்தமா உன்னோட இனத்துல ஆறுபேருதான் இருக்கீங்க.. பதினைஞ்சுபேரு செத்தாச்சு கொரனாவால. பதினஞ்சுபேரு வெளிய போயிட்டாங்க! இப்படி யானைகள், சிங்கங்கள், சிறுத்தைகள், குரங்குகள், எவ்ளோ இங்கே வனத்துல வாழுதுன்னு கணக்கெடுத்து நான் கொண்டு போகணும்!”

“உன்னைய நான் இந்தக்குகையை விட்டு அனுப்புனாத்தானே நீ கவருமெண்டுகிட்ட கொண்டு போயி கணக்கு குடுப்பே! நீ இங்கியே குளோஸ்! இன்னிக்கி நைட்டு விருந்தே நீதான் பார்த்துக்க! யாருகிட்ட வந்து என்ன பேச்சு பேசிட்டு இருக்கே? நான் ரெஸ்ட்ல இப்ப இருக்கேன். ஆனா எனக்குத்தெரியாத பல விசயங்களை நீ சொல்றே! ஆமா நெசமாவே இந்த காட்டுல ஆறு புலிகள் தான் இருக்கா?”

“ஆமா!”

“அவங்களை நீ நேர்ல போயி பார்த்திட்டு வந்தியா?”

“ஆமா, வரிப்புலியாரே! பின்ன எப்படி நான் கணக்கு சொல்வேன் உன்கிட்ட!”

“உன்னோட கணக்கு ஒருபக்கம் கிடக்கட்டும்.. புலிக எப்படி உன்னை அடிச்சுத் தின்னாம உட்டுது? அங்க தான் எனக்கே ஒதைக்குது!”

“நான் கவர்மெண்ட் போட்ட கொரனா தடுப்பூசி மூனு குத்தியிருக்கேன்! அந்த ஊசி போட்ட விலங்கினங்கள் அதுவாவே தான் திப்புனு கீழே விழுந்து இருதய அட்டாக்ல சாவும். மத்தவங்க யாராலும் கொல்ல முடியாது.”

“கொரனா தடுப்பூசி போட்டிருக்கியா? அதப்பத்தி சொல்லு.. கொஞ்சம் நேரம் கேட்போம்!”

“கொரனான்னு ஒரு வைரஸ் நம்ம ஒடம்புல கலந்து பல விலங்குகள் போன வருசம் செத்துப்போச்சுக தெரியுமா உனக்கு? இந்த வனத்துல இருக்குற யாருக்குமே அந்த விசயம் தெரியில. ஆனா ஏகப்பட்ட விலங்குக செத்திருக்குதுக.. அப்புறம் அதை தடுக்க ஊசியை அரசாங்கம் கொண்டாந்துச்சு! அதைக்குத்திக்கிட்டா தப்பிச்சி உயிர்வாழலாம் இன்னும் கொஞ்சம் காலம்னு நிறைய விலங்குகள் அந்த ஊசியை போட்டுக்குச்சுக!”

“இரு இரு.. அந்த ஊசி அந்த வியாதியை தடுக்கறதுக்காக போட்ட ஊசி தானே!”

“ஆமா! ஆனா நான் மூனு ஊசி போட்டிருக்கனே! மூனாவதா போட்ட ஊசி தான் பவரு சாஸ்தி. என்னை நீ அடிச்சி சாப்புட்டீன்னா நீயும் அவுட்டாயிடுவே இங்க குகையிலயே!”

மிரண்டு போனது வரிப்புலி. இப்படியான விசயங்களை முன்பாக அது கேள்விப்பட்டதே இல்லையே! ஆனால் இந்த புள்ளிமான் துளிகூட பயமில்லாமல் நேருக்கு நேராய் நின்று சரளமாய் பேசுகிறதே! இதுவரை பார்த்த மான்களெல்லாம் ’தலை தப்பியதே தம்பிரான் புண்ணிய’மென ஓட்டமாய் ஓடும்களே! அதுகள் ஓடுவதை பார்த்தாலே ஒரு கெத்து உள்ளுக்குள் வருமே!

இந்த மான் என்னடாவென்றால் என் கெத்தையே அசைத்துப் பார்த்துவிட்டதே! சரி இதை அடித்து அந்த குகையின் மூலையில் போட்டுவிடலாமா! இல்லை ‘நீ கெளம்புப்பா.. இடத்தைக்காலி பண்ணு மொதல்ல!’ அப்படின்னு சொல்லி அனுப்பிடலாமா? இது சொல்ற வியாதியை நம்மகிட்ட ஒட்டவச்சிட்டு போயிடுமோ என்னமோ!

எதோ இன்னும் கொஞ்சம் வருசம் இந்த வனத்துல நாலுவித மட்டன் சாப்புட்டு நிம்மதியா வாழலாம்னா அதுக்கு விடாமல் பிரச்சனையை குகைக்கே தூக்கிட்டு வந்து நிக்குதே இந்த மானு!

ஒன்னு இதை அடிச்சுக்கொன்னு குகைக்கு வெளிய கொண்டி வீசிடலாம்! இந்த மானை சாப்பிட்டால்தானே நமக்கு பிரச்சனை வரும்போல இருக்கே! வெளிய கொண்டி வீசுனம்னா காக்கா, கழுகு இதை கொத்தி தின்னுட்டு என்னை ’நூறாயிசு வாழணும்’னு வாழ்த்தீட்டு போகும்ல! பறவைங்களுக்கு நல்ல விசயம் பண்ணினதாவும் ஆயிரும்! ’பறவைக்கு உணவிட்ட பலே புலி’ன்னு ஒரு பேரு நமக்கு இந்த வனத்துல கிடைக்கும்ல!

ஆனா இந்த மானை கொல்லுறதுக்காக நான் தானே அதுமேல பாய்ந்து குதிக்கணும்.. வாகாய் அதனோட கழுத்தைக்கடிக்கணும்.. அப்ப அந்த மூனாவது ஊசி குத்துன மருந்து என்னோட வாயி வழியா உள்ளார போயிட்டா? அட இதென்ன முழுசும் துன்பாமாயில்ல இருக்குது!

“என்ன வரிப்புலியாரே! யோசனை பலமா ஓடுது போல.. என்னைய எப்பிடி கொல்லலாம்னு யோசனையா?”

“சேச்சே! உன்னைய எதுக்கு நான் கொல்லோணும்? அதான் நீயே இருதய அட்டாக்குல போயிருவியே! எத்தனையோ மானுங்களை நான் துரத்தியிருக்கேன்.. எல்லா மானுங்களுமா என்கிட்ட சிக்குதுக? எத்தனையோ என்கிட்டயிருந்து தப்பிச்சும் போயிருக்குதுக! அதுமாதிரி உன்னை நினைச்சிக்கறேன்! நீ இந்த குகையை விட்டு சீக்கிரமா வெளிய போயிரு”

“நான் கொஞ்சம் நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்துட்டுத்தான் போகணும். என் கணக்கெடுப்பு இந்த வனத்துல இன்னிக்கோட முடிஞ்சுது. நைட்டு எங்க டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க கணக்கெடுப்புத்துறையில இருந்து என்னை கூட்டிப்போக வந்துடுவாங்க வரிப்புலியாரே! என்னோட ஒடம்புல ’சிப்’ இருக்கு. நேரா என்னைத்தேடி இந்த குகைக்கே வந்துடுவாங்க! அவங்க வந்தபிறகு நான் கிளம்பிடுவேன். வரிப்புலியாரே.. உங்களுக்கு பயமா இருந்தா நீங்க வேணா இங்கிருந்து கிளம்பிப்போயிருங்க!”

“எனக்கு பயமெல்லாம் இல்ல! வர்றவங்க எத்தனைபேரு வருவாங்க?”

“அது மில்ட்டரி யூனிட் வரிப்புலியாரே! கையில துப்பாக்கியோடதான் வந்து இறங்குவாங்க.. அப்ப உங்களைப்பார்த்தா சுட்டுப்பொசுக்கிடுவாங்க! உங்க நன்மைக்கித்தான் சொல்றேன்!”

“அடக்கடவுளே!” என்று புலம்பிக்கொண்டு பாறைத்திண்டிலிருந்து எழுந்தார் புலியார்.

000

சிறார் இலக்கியத்தில் புதிதாக களம் இறங்கியிருப்பவர். இது இவரது இரண்டாவது கதை.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *