1.

எப்போதும் தனை நாடிவரும்

மீனவனைக் கைவிடாத

கடல்

அள்ளித் தருகிறது

மீனின் வடிவில் வாழ்வை.

கொடும் சூறாவளியிலும்

கொட்டும் மழையிலும்

கரை ஒதுங்க வைத்தும்

அவ்வப்போது காப்பாற்றும்

கடலுக்குத் தெரியும் கருணை கூட

ராணுவத்தின் தோட்டாவுக்குத் தெரிவதில்லை.

2

பல்கிப் பெருகிய காட்டில்

பல்லடுக்கு மாளிகைகள்

பறக்க முடிவதில்லை

பறவைகளின் சிலைகள்

3.

காணும் கனவுகளுக்குள்

விரியும் பசுமையை நம்பி

பூத்துக் கிடக்கும்

கவிதைகளுக்குள்

எதிரொலிக்கத் துவங்குகிறது

பசியின் அலறல்.

இழந்த கூடுகளை எண்ணி

அச்சமுறாத பறவைக்குள்

விரியும் வானத்தின் பாதை.

மரத்தின் கிளைகளுக்குள்

மரணத்தை எதிர்கொண்ட போதும்

பறவையின் இறகுகள்

கனமேறி விடுவதில்லை.

வானத்தை கனவாக்கி வாழும்

நம்பிக்கையின் பாதையில்

எல்லா திசைகளும்

திறந்தே கிடக்கின்றன

இறக்கைகளின் மேலெழும்பலுக்காக.

++

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *