1
ஆர்யன் வீட்டிற்கு ஓடிவரும் சமயங்களில் டவுசர் அணிய அவ்வளவு கூச்சப்படுவது வேதாவுக்கு வேடிக்கையாய் இருந்தது. தொளதொளப்பான நைலான் பேண்ட்டை அணிந்தபடி துறுதுறுவென வீட்டின் சின்னஞ்சிறு பகுதிகளையும் உரிமையோடு கால் பதித்தாடும் சிறுவத்தின் குறும்புத்தனங்கள், எப்படித் தனக்கு வேறாய்க் காட்சித் தரவாரம்பித்தன என்று யோசித்து மாய்ந்தாள். சுழலும் நாற்காலியில் அமர்ந்து கணினியில் கொழுந்தன் பிள்ளை விடுமுறையில் களிக்கவெனச் சேமித்து வைத்திருக்கும் விளையாட்டில் மூழ்கவே அன்றாடம் வந்துவிடுவான். தனக்குள்ளே பேசிக்கொண்டு ஒருபோதும் நிஜமாக வாய்ப்பில்லா எதிரிகளைச் சுட்டு வீழ்த்துவது அவனுக்கு அலாதியின்பம் தருவதாக இருந்தது. விளையாடும் பிஞ்சின் லயிப்புகளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும் அவளுக்கு. அவனுக்குப் பிடித்தமான உணவு எது? பிடிக்காத பானம் எது? என்ன எல்லாமும் அவளுக்கு அத்துப்படியாய் இருந்தது. பச்சிளம் குழந்தையாயிருந்த சமயத்தில் இருந்து இவ்வீட்டிற்குப் பழக்கப்பட்ட குழந்தை என்பதால் வேற்றாள் என்ற நினைவே சமீபத்தில் வந்த அவள் உட்பட யாருக்கும் எழுந்ததில்லை. கடைக்குச் செல்வது போன்ற சின்னச் சின்ன உதவி வாங்கிக்கொள்ளவும் ரேஷனில் ஆண்கள் வரிசையில் நிற்க வைத்து எளிதில் பொருள் பெறவுமென அவசரத்துக்குப் போதுமான கையாளாக இருந்தான். விழாக்களுக்கு அழைத்துச் சென்றால் கூட்டத்தில் யாரும் அண்டவிடாமல் வளர்ந்துவிட்ட ஆணின் முறுக்கோடு முன்னும் பின்னும் வந்து நின்றுகொள்வான்.
முன்பே காதலிப்பது தெரிந்திருந்தாலும் பரசு தன்னை இழுத்து வந்ததால் உருவான கசப்பில் அக்கம்பக்கத்தினர் சரிவரச் பேசத் தொடங்கியிராத காலத்தில், ஆர்யன் மட்டுமே ‘அண்ணி வந்தாச்சு’ என மந்திரம் போல் உச்சரித்துக்கொண்டு தன்னைச் சுற்றிவந்த ஞாபகம் மூளவே, அவன் அருகிலமர்ந்து கன்னம் கிள்ளிப் பிய்க்கப்பட்ட அன்பின் அப்பத்தைத் தன் வாயில் போட்டுக்கொண்டாள்.
‘நான் என்ன குழந்தையா, கொஞ்சுறீங்க!’ என்று அவளைப் பார்க்காமலே சலித்துக்கொண்டான்.
‘நல்லாப் பெரிய மனுஷனாட்டம் பேசு’ என்று எழுந்துகொண்டாள்.
‘எனக்கு இந்த ஹெலிகாப்டர் லெவல முடிக்க ரொம்ப கஷ்டமாயிருக்கு அண்ணி. சும்மாதான என்னையப் பாத்துட்டு இருக்கீங்க. ஒரு விரல இந்த ஷிப்ட் பட்டன்ல வச்சிக்கோங்க. நான் ஏரோ பட்டன்ஸ ஹேண்ட்டில் பண்ணி ஜெயிச்சிடுறேன்’ என்று அவளைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொஞ்சினான். தென்னிந்தியர்களுக்கு வாய்க்காத அவனது செம்பு நிறமும் பழுத்த கலாக்காய்க்கு ஒத்த உதட்டு வண்ணமும் அவளை அதிகதிமாய் ரசிக்க வைத்தது.
‘நீ பொம்பளப் பிள்ளையாட்டம் இருக்கடா. பொட்டச்சிங்க கொஞ்சணும்னே பொறந்திருக்க’ என்று சிரித்துக்கொண்டாள். விசேசத்திற்குச் சென்றிருந்த மாமானார் வருவதற்கு மாலையாகும் என்ற நினைப்பும் ஞாயிற்றுக்கிழமையில்கூட தன்னுடன் இருக்காமல் டிஷ் கனெக்ஷன் என ஓடிவிடும் கணவன் மீதான எரிச்சலும், ஷிஃப்ட் பட்டனை அழுத்திப் பிடித்துக்கொள்ள வைத்தன. ஆர்யன் அவள் துணையுடன் முயற்சித்து மூன்றாவது முறை வெற்றிகண்டவனாகக் குதூகலித்தான்.
‘இந்த லெவல்லாம் எங்க கிளாசுல யாருமே தாண்டல தெரியுமா. நான் தான் இனிமே இதுல கிங்கு’ என்று குதித்தான்.
‘ஆமாடா நீதான் கிங்கு’ என்று சந்தோஷத்தில் பங்குகொண்டவளாக வேதாவும் எழுந்துகொண்டாள். ஓயாமல் குதித்தபடி இருந்தவனைப் பார்த்து, அவளுக்கும் குதிக்க வேண்டும் போலிருந்தது. கதவு திறந்திருந்த வீட்டில் சுற்றும் பார்த்துவிட்டு, நைட்டியைக் கைலிபோல் மடித்துக் கட்டிக்கொண்டவளாக அவளும் குதித்துப் பார்த்தாள்.
‘ஏன் அண்ணீ உங்க காலுல ஒரே முடியா இருக்கு!’ என்றவன் குதிப்பதை நிறுத்தினான்.
‘உன் காலுல இல்ல பாத்தீயா! அதான் சொன்னேன் நீ பொம்பளப் பிள்ளையாட்டம் இருக்கன்னு’ என்று மூச்சிரைப்புடன் மெத்தையில் அமர்ந்துகொண்டாள். முழு வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் அடியிலும் வியர்த்துக்கொட்டியது. பாண்டித் தாண்டுதலில்கூட ஒதுங்கியே நிற்கும் தன் சுபாவம் மறைந்துபோனதை எண்ணி வியந்துகொண்டாள்.
‘அப்ப நீங்க என்ன ஆம்பளயா?’
‘வாயி ரொம்ப நீளம் உனக்கு’ என்று தொடையைக் கிள்ளினாள். அவன் ஓவென கத்திவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டான். ‘அச்சோ என் செல்லம்ல ஏன்டா குட்டிப் பையா கத்துறே அண்ணிதானே கிள்ளுனேன்’ என்று சமாதானம் சொல்லியபடி மீண்டும் கிள்ளிச் சிரித்தவளாக விளையாடினாள். ஒரு பொம்மைபோல் தன் திருகலுக்கு அசைந்துகொடுக்கிறானே என்ற சந்தோஷம் அவளுக்குத் தேவைப்பட்டது. தனக்கு இவன் போல் பல சாவிகள் வேண்டுமெனப் பெருமூச்சுவிட்டாள். அறிவிக்கப்படாமல் துண்டிக்கப்படும் மின்வெட்டு அன்றும் தன் வழமையை நிறைவேற்றி மகிழ்ந்தது. கோடைக்கால வெப்பம் சருமத்தின் ஊறல் மீது கோபெழச் செய்தது. சிறிது நேரத்திற்குள்ளாகவே ஆர்யனுக்கு நன்கு வியர்த்துப் போகக் கண்டாள். குளியலின் நிறைவில் முத்துக்கோத்து நிற்கும் நீர்த்துளிப்போல் அவன் மீது வியர்வை திரண்டிருந்தது, அம்மைக் கண்ட நாட்களை நினைவூட்டின. தன் மார்பகத்தைப் போர்த்தியிருந்த வெள்ளைத் துப்பாட்டாவை எடுத்து அவனது முத்துக்களைத் தொட்டெடுத்தாள். அவன் வசதியாகக் காட்டியபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
‘நான் போறேன்ணி போர் அடிக்கிது’ என்று வாசலுக்கு அவன் ஓடவும், பரசுராம் வரவும் சரியாக இருந்தது. ‘எப்பப் பாத்தாலும் பொண்ணுங்க கூடவே உக்காந்திரு. ஆளையும் மூஞ்சியும்கூட பாரு பொண்ணாட்டமே’ என்று தப்பிக்கப் பார்த்தவனது பிட்டத்திலே தட்டினான். அவன் நிறத்திற்கு நன்றாகச் சிவந்துபோயிருக்கும் என நினைத்துக்கொண்டாள்.
‘என்னங்க இன்னிக்குக்கூட வேலைக்குப் போவணுமா! எவ்வளோ நேரங்கழிச்சு வர்றீங்க’
‘அடச்சீ சும்மான்னு இரு. கரண்ட் பில்லு எப்ப வந்து குறிச்சிட்டுப் போயிருக்காங்க. ஒரு வார்த்த சொன்னீயா நீ. கட்டாத வீட்டுல எல்லாம் ஃபியூச பிடுங்கிட்டு இருக்கானுங்க. பாத்துப் பதறியடிச்சிட்டு உடனே கட்டிடுறேன்னு கெஞ்சிட்டு வர்றேன். போ, புக்க எடுத்துட்டு ஓடிவா’ என்று பொறிந்துவிட்டுத் தன் கரகரத்த தொண்டையை அரைத்தவனாய்க் கோழையை வாசல் கதவைத் தாண்டித் துப்பினான்.
‘இல்லங்க வேணும்னு சொல்லாம இல்ல. மறந்துட்டேங்க’ என்றாள்.
‘ஊம்ப மறந்தீயா’ என்று கத்தியவன் அவள் கையிலிருந்து அட்டையைப் பிடுங்கிவிட்டு நூல்போல் பிரிந்துகொண்டு வரும் தன் பழைய தலைக்கவசத்தை அணிந்து வண்டியைக் கிளப்பி நகர்ந்தான். ‘பத்துநாளா மறந்துட்டாளாம். ஒன்னுத்துக்கும் லாயக்கில்ல. இவகிடந்து சாகுறேன்’ என்று அவன் முனகிக்கொண்டே போவதைப் பார்த்தவள், யார் காதிலாவது விழுந்திருக்குமா என்று அச்சத்துடனும் அவமானத்துடன் கதவிடம் வந்து கண்களைத் திருப்பினாள். ஆர்யன் மிகச் சகஜமான பார்வையோடு வாசலை நோக்கி வந்தான். ‘அம்மா, நீ அங்கேயே போ ஏதாவது கேட்டுட்டு இருப்பேன்னு சொல்லிட்டாங்க அண்ணி’ என்றபடி நுழைந்தான்.
அவள் குரலெடுத்து அழுதவளாக வேகமாய் அறைக்குள் ஓடி மெத்தையில் சாய்ந்துகொண்டாள். நடுங்கும் விரல்களுடன் இருளின் துணைகொண்டு நெருங்கும் கரிசனையற்ற மிருகமாக அவளது உள்ளத்தை நிறைத்திருந்தான். அவனுடல் முழுவதும் தரைபோல் மொழுக்கட்டையாக வேண்டும் என எண்ணிப் பார்த்தாள்.
‘சாரி அண்ணி. நான் வரல அண்ணி. உங்களத் தொந்தரவே பண்ண மாட்டேன். நான் சும்மா சும்மா வரேன்னு அழாதீங்க’ என்றவனாய் அவளை நெருங்கி அமர்ந்து முகத்தைத் திருப்ப முனைந்தான்.
மின்சாரம் உயிர்த்ததற்கு ஆதாரமாக, மின்விசிறி சுழலத் தொடங்கியது. கண்களைத் துடைத்தபடி எழுந்தமர்ந்தவள், ‘அண்ணன் திட்டுனத கேட்டியாடா?’ என்றாள் நெருக்கியமர்ந்து. தன் முகத்திற்கு நேராக அவன் முகமும் இருந்தது ஒருவித பரபரப்பை உண்டாக்கியது.
‘இல்லயே! என்னா திட்டுனாரு, பேட் வேர்டா?’ என்றதும் அவனை அழுத்தமாய் அணைத்துக்கொண்டாள். அந்த அணைப்பிலிருந்து அவனுக்கு விடுபட வேண்டும் போலவும் வேண்டாம் போலவும் இருந்தது. யாரும் நுழைவதற்கு வாய்ப்பற்றச் சூழலிலும் தன்னை யாரோ பார்ப்பது போலவும் தன் முதுகை ஒரு கண் நோட்டமிடுவதும் போலவும் இருந்தது அவனுக்கு. ஆனால் அதைப் பொருட்படுத்த முனையவில்லை. கன்னங்கள் உரசிக்கொள்ள உதடுகள் நீண்ட நேரம் பற்றியபடியே இருந்தன. அவனது சிவந்த உதடுகளிலிருந்து காய்ச்சாத பால் போல் சப்பென்று கசிந்த சுவை அவளது தலைக்கு உறைத்ததும், அவனை விட்டு விலகி தலைதாழ்ந்து கொண்டாள். இமை திறக்க பயந்துவாறு மெத்தையிலிருந்து இறங்கியவன், நடுக்கத்துடன் வீட்டை விட்டிறங்கி வேகமாய் ஓடிப்போனான்.
2
நன்கு படர்ந்த தோளும் அடர்த்தியான சிகையும் நேர்த்தியான உடையுமாய் ஆர்யன் நிறையவே மாறியும் வளர்ந்துமிருந்தான். அவனுக்குப் பரிச்சயமாய் இருந்த பகுதியிலிருந்து வீடு மாற்றிப் பல ஆண்டுகளுக்குப் பின்பு இப்படிச் சந்திக்க நேரிடும் என்று அவள் நினைக்கவே இல்லை. பரசுராமும் அவளும் பிள்ளைகள் இருவருடனும் தரையில் அமர்ந்து தட்டில் விரல்களை விட்டுக் கிளறிக்கொண்டிருக்க, ஷூக்களை அவிழ்த்துவிட்டு மிக உரிமையாய்க் கறிக்குழம்பை மூடியிருந்த தட்டை ஏந்தி, ‘போடுங்க. உங்க டேஸ்ட சாப்பிட்டு ரொம்ப வருஷமாச்சு’ என்று வேதாவிடம் நீட்டினான். தன் கணவனைப் போல் அவளால் ஓர் பரவசத் திளைப்பிலும் ஆச்சரியத்திலும் நனைய முடியவில்லை. சாலைகளில் அவ்வப்போது அவனைச் சந்திக்க நேரும் என்றாலும் தெரிந்தவன் போலவே காட்டிக்கொள்ள மாட்டாள். அந்த நாளும் வெப்பக் காற்றும் வீடெங்கும் படர்ந்திருந்த தனிமையின் சலிப்பும், தோன்றும் சமயமெல்லாம் பொழுதை நிறைத்து அமைதியை வீணடிக்கும் வல்ல நினைவுகளாக அவளுள் தேக்கம் கண்டுவிட்டன. அச்சுழலுக்குள் மீண்டும் அகப்படாதிருக்கவே அவனைப் பார்க்காததுபோல் தவிர்த்தே வந்தாள். விஷேச வீடுகளில் காண நேர்ந்தாலும் நெருங்கி பேசமுடியாத இடங்களில் தன்னைப் பொருத்திக்கொள்பவளாக மாற்றிக்கொண்டாள். அவளைப் பின்தொடர்ந்துகொண்டே வரும் அவனது கண்களுக்கு அவளால் எந்தத் திரையும் இடமுடியவில்லை. அதை வலியுறுத்தும் நிலையும் தார்மீகமும் தனக்கில்லை என்ற சுமை தொடர்ந்தது. எல்லாவற்றையும் கடந்து, தான் அறிந்த ரூபம் அறியாத வளர்ச்சியோடு கண்முன் நிறைந்திருப்பது புதிதாய் இருந்தது.
‘அட யாரு. ஆர்யன் குட்டியா. பயலே நல்லா வளந்துட்டடா. எப்படி வீட்ட கண்டுபிடிச்ச?’ என அறையிலிருந்து ஊன்றுகோலைப் பதித்துக்கொண்டே சங்கரன் வெளிவந்தார். அவர் மிக அரிதாகவே தன் அறையைத் தாண்டுகிறார் என்று நினைத்து அதிலிருந்து மீண்டவளாக, ‘அதுக்கென்ன சாப்பிடுடா’ என்று தட்டை நிரப்பினாள். இளையவனுக்கு என்று வைத்திருந்த நல்லியையும் அவனுக்கே வைத்தாள். தட்டில் இடப்பட்டிருந்ததைப் பரசுராமின் பார்வை கண்டு மீண்டது.
‘இப்படித்தான் காலேஜ் ரூட்டு தாத்தா. நோட்டு வாங்கலாம்னு கடையில நிறுத்துனேன்னா அண்ணன் வீட்டுக்குள்ள நுழையிறத பாத்தேன். சந்தேகத்தோட தான் வந்தேன் பாத்தா நீங்களேதான். எப்பா எத்தன வீடுதான் மாறுவீங்க நீங்களும்?’ என்று தன் அக்கறையைப் பொழிந்தவனாகக் கைநிறைய அள்ளி விழுங்கினான். ஆணுக்குரிய லட்சணத்தோடு சாப்பிடுவதாக நினைத்தாள். அச்சந்தர்ப்பத்தின் மீறலை அவன் நிச்சயமாய் யாரிடமும் பகிரவில்லை என அவனது பார்வை சொன்னதாக நினைத்தாள். இல்லாவிட்டால் எந்த நினைவுகளும் அற்றுப்போன அன்றலர்ந்த பாலகன் போல் கூச்சமும் தயக்கமுமின்றிக் கண்ணுக்குள்ளாகப் பார்க்க முடியாது என்று பட்டது.
’இப்ப எங்க அண்ணா வேலை?’
‘மல்டிவெர்சல் போன் கடையில மானேஜரா இருக்கேன்டா. பெரிய மனுஷனாட்டம் விசாரிக்கலாம் கத்துக்கிட்ட. அம்மாப்பா நல்லாருக்காங்களா?’
’அவங்களுக்கென்ன சுகமா இருக்காங்க.’
‘அப்ப கண்டிப்பா வீட்டுக்கு அழச்சிட்டு வா’ என்றார். பிறகு வருவதாகச் சொல்லிவிட்டு வேதாவைப் பார்த்துத் தலையசைத்தவாறு நகர்ந்தான்.
அவன் வந்துபோனதே தெரியவில்லை என்று நினைக்கும்படி மிகத் துரிதமாய் ஒரு கடந்தகாலத் தவிப்பு மறைந்துபோனதை வேதா உணர்ந்தாள். அவள் தொடையைப் பற்றிக்கொண்டு கையளம்பக்கூட முனையாமல் தூங்கி வழியும் பிள்ளைகளைச் சுத்தம் செய்து பாய்விரித்துப் படுக்க வைத்தாள். மெதுவாகச் சாப்பிட்டுவிட்டு வேகமாக உடைமாற்றி வெளியேகினான் பரசுராம். உள்ளிருந்து மெல்லிதாய் கிரிக்கெட் வர்ணனைச் சத்தமும் மாமனாரின் இருமலுமே அவளுக்குக் கேட்டது. முகப்பறை சட்டெனச் சூன்யமாகியிருந்தாலும் அகம் அலறுவதாக இருந்தது. அவன் மீண்டும் வரக்கூடாது என்று பிரார்த்தித்தன உதடுகள். நிறமும் அழகும் அப்படியே தேங்காமல் வயதுக்கேற்ற விருத்தி கண்டிருப்பதாய்ப் பட்டது. அழகைக் காலம் அடையாளம் கண்டுவிட்டால் அது நிரந்தர எருப்போட்டு வளர்க்குமோ என்ற கேள்வி அவளைக் குடைந்தது. உடலில் எந்த அங்கமும் சீரான லட்சணத்தில் இல்லை எனவும் வடிவமாய் உருட்ட முடியாத கோதுமை மாவுதான் தன் உடல் எனவும் நினைத்தபடி பிள்ளைகளுக்கு நடுவே சாய்ந்தாள். ஒரு மாயச்சொடுக்கு விழுந்ததுபோல் உறங்கிப் போனாள்.
அடுத்தமுறை ஆர்யன் வந்தபோது, பரசுராம், நேரந்தவறுதலை ஏற்காத பணியிடத்திற்கும் பிள்ளைகள் பள்ளிக்கும் சென்றிருந்தனர். வழக்கமாகக் கேட்கும் தொலைக்காட்சிச் சத்தமும் சங்கரன் அறையிலிருந்து எழும்பவில்லை.
‘அண்ணி’ என்று மெதுவாய் குரல் கொடுத்தபடி உள்ளே வந்தான். மிக நெருக்கமாய் அவளை அண்டி ஷோஃபாவில் அமர்ந்தான். ‘என்ன மறந்துட்டீங்க பாத்தீங்களா!’ என்றதும் அவள் இதயம் நின்றுவிட்டதுபோல் திகைத்துத் துடித்தது.
‘என்னடா மறந்துட்டாங்க’ என்றாள். இயல்பைவிட அவளது குரல் குறைச்சலாய் ஒலித்தது. அத்தனை மெதுவாய்ப் பேசியிருக்கக்கூடாதோ என்றும் தோன்றியது. மிக லேசான மது நெடி வீசுவதாகப்பட்டது. ஆனால் அவளால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.
‘என்னாணீ நம்ம விளையாட்ட எல்லாம் மறந்துட்டீங்களே’ என்று அவளது உள்ளங்கையைக் கிள்ளினான்.
ஊமையான உதடுகள் சொற்களை மறந்துவிட்டிருந்தன. உள்ளங்கைகளும் பாதங்களும் வியர்த்தன. தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து உருவிய இளமஞ்சள் நிறக் கைக்குட்டையால் உள்ளங்கையை ஒற்றி எடுத்தவன், நெற்றியிலும் கழுத்திலும்கூட ஒற்றினான். நெருக்கத்தில் அவனது முகம், விகாரமாய் இருப்பதாகப் பட்டது. தான் பார்த்து ரசித்த குழந்தை எங்கே எனத் தேடினான். குழந்தை திறந்திருந்த கதவைக்கூடப் பொருட்படுத்தாமல் பெருமூச்சுகளை அடக்கியபடி அவளது கழுத்தில் முக்கால் உரசியது.
‘நீ அப்பறம் வாயேன். நான் பசங்களக் கூப்பிட ஸ்கூலுக்குப் போணும்’ என்று சட்டென எழுந்துகொண்டாள்.
‘அப்பறமா வரட்டா சரி சரி’ என்றவனாகத் தரையில் புரட்டிப்போட்டிருந்த மண்டையோட்டுப் படம் வரையப்பட்டிருந்த தலைக்கவசத்தை மாட்டியபடி மிகுந்த சத்தமெழுப்பும் தன் வாகனத்தை முறுக்கியவாறு பறந்தான். அவ்வண்டியின் கோரச் சத்தம் அவளைவிட்டு அகல்வேனா என்று அடம்பிடித்தது.
இருநாட்களாக அவன் வராததில் அவள் நடுக்கம் குறைந்து பெருமூச்சுகளுடன் அன்றாடத்தைக் கவனிக்கத் தொடங்கியிருந்தாள். பாத்திரம் கழுவும்போது மண்டையோட்டை நினைவுபடுத்தும் வடிபானையை அடித்துத் துவைத்தாள். வெந்நீரை அடுப்பிலிருந்து இறக்கும்போது கறைபடிந்து மஞ்சளாகியிருந்த கரித்துணியைச் சீண்ட அஞ்சினாள். தன் இருப்பே கவலைக்குள்ளாக மாறியதாகத் தோன்றினாலும் படபடப்புச் சற்றே கம்மியிருந்தது, அன்றிரவு பரசுராமுடன் அவன் சேர்ந்து வரும்வரை.
‘வாடா தம்பி. தயங்காத. அண்ணி ஒன்னும் சொல்லமாட்டா வா’ என்று மிகையாக வரவேற்கும்போதே மது அவனை முழுக்கியிருந்ததைப் புரிந்துகொண்டாள். போதாக்குறைக்கு, ஆர்யனின் கையில் நீண்ட வெள்ளை ஞெகிழிப் பை இருந்தது. மதுபாட்டில்தான் உள்ளே இருக்கிறதென அவளால் யூகிக்க முடிந்தது.
‘ஆர்யனுக்கு வேலை கிடைச்சிடுச்சாம்டி கடைசியா நம்மகூட சந்தோசமா இருக்கணும்னு கேட்டான். புள்ளைக்கு நம்மளச் சுத்தியே கிடந்தது நினப்பில்லாமப் போகுமா. அதான் அழச்சிட்டு வந்தேன்’ என்றான்.
வேதா அப்படி முறைத்து பரசு பார்த்தது இல்லை என்றாலும் அவனாகவே ஒரு முன்முடிவுக்கு வந்தவனாக, ‘சின்ன பையன குடிக்க வக்கிறேன்னு நினைக்கிறியா. இப்பதான் பசங்க ஸ்கூல்லயே பழகிடுறாங்களே. குடிச்சிட்டு எங்கயும் வண்டி ஓட்டி விழுந்துடக் கூடாதுன்னுதான் நம்ம வீட்டுலயே படுத்துக்கச் சொல்லிட்டேன்’ என்று ஆர்யனின் கைப்பற்றி முன்னிழுத்தான்.
‘இல்லங்க நம்ம வீடே சின்னது. ஒரு ரூம்ல அப்பா இருக்காங்க. ஹால்ல எப்படி நாம எல்லாரும்?’ என்று அவள் தன்னைப் பார்க்காமல் சொற்களை உதிர்த்தும் உதிர்க்காமல் முழுங்குவதைக் கண்டு சிரித்தவனாக, ‘அதெல்லாம் நான் அட்ஜெஸ்ட் பண்ணிக்குவேன் அண்ணி. எனக்குக் கொஞ்சூண்டு, ஒரு சின்ன இனுக்கு இடம் கிடைக்காமலாப் போயிடும்’ என்று சிரித்தபடியே தரையில் கால்நீட்டி அமர்ந்து தன் பொட்டலங்களைப் பரப்பினான்.
அவனது கண்கள் காட்டுப் பூனையின் வேட்டைப் பாய்ச்சலைப் போல் அசைந்து அவளைக் கலவரப்படுத்தின. குழந்தைகள் படம் பதிந்த சுவர்க் கடிகாரம், நேரம் பதினொன்றை நெருங்குவதைக் காட்டியது. தன் சிறிய வீட்டிற்குப் பொருத்தமாய் இராத நீண்ட வாகனம், முரண்டுபிடிக்கும் காளை மாட்டைப்போல் வாசலை மறித்து நிற்பதைப் பார்த்தவாறு அடுப்பறைக்குள் நுழைந்துகொண்டாள். செய்ய எந்த வேலையும் இல்லாவிட்டாலும் வெளியே வரத் திகிலாயிருந்தது. தேவதை துட்ஷ்மானதாகத் தோன்றியது. ஆனால் இங்கு யார் தேவதையாகவே இருந்தது என்று கேட்டுக்கொண்டவளாக அலம்பி முடித்திருந்த பாத்திரங்களை மீண்டுமாய்க் கழுவும் தொட்டியில் தள்ளிவிட்டு மெதுவாய் அலசத் தொடங்கினாள். அச்சத்தில் அவளையறியாமல் கால்கள் நடுக்கின.
பரசுராம், ‘இன்னிக்கு ஒருநா மட்டும்டி’ என்றவனாய் அவள் முகத்தை ஏறிடாமல், சொற்களுக்கும் காத்திருக்காமல் லோட்டா நிறைய நீரையும் ஒரு கின்னத்தில் வறுத்த கடலையையும் அள்ளிக்கொண்டு முகப்பறைக்குப் போனான். உறங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளுக்குப் பக்கத்தில் அமர்ந்து, அடையக் கிடையாத வஸ்துபோல் மதுவை ஆர்யன் வேகவேகமாய் ஊற்றி உறிஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்க்கையில் வீட்டில் அனுமதித்திருக்கக் கூடாதோ என்ற உணர்வு தோன்றி மறைந்தது.
அடுத்த சில சுற்றுகளுக்குள்ளாகவே பரசு குறட்டையொலியுடன் உறங்கிப் போயிருந்தான். அடுப்பறையில் பாத்திரங்கள் அட்சயமாகிக்கொண்டே இருந்தன. தனக்கொரு சிறிய தம்பளரில் மதுபெற்றுக்கொண்ட சங்கரனும் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டார். முகப்பறையின் விளக்கை அணைத்த ஆர்யன், அடுப்பறையைத் தவிர வேறெங்கும் விளக்கெரியவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு நிதானம் என்று அவன் கருதிக்கொண்ட வேகத்தில் வேதாவை நெருங்கினான். அடுப்பறை ஜன்னலிலிருந்து சாலை விளக்கின் மிகச் சிறிய ஒளி சன்னமாய்க் கவனித்துக்கொண்டிருந்தது.
அவள் எதிர்பார்த்துப் பயந்துகொண்டிருந்தது, இத்தனை காலமும் இச்சமயத்திற்கெனக் காத்திருந்தது என்று சொல்வதுபோல் ஆவேசமாய் அவளைப் பின்புறத்திலிருந்து கட்டிக்கொண்டான். அவள் சத்தமெழுப்பாமல் அவனிடமிருந்து விடுபட முயன்றுகொண்டிருந்தான். தான் அறிந்திருந்த சிறுவனின் உடலும் கரங்களும் அவனிடம் தற்போது இல்லை என்பது அவளை வருத்தியது. மதுவும் வியர்வையும் கலந்த கசந்த நெடி அவளை ஆக்கிரமித்திருந்தது. தன் வலுவைச் சேர்த்துக்கொண்டவள், விலகி அவன் மார்பில் கரங்களை வைத்துத் தள்ளினாள். சுவரோடு சாய்ந்து நின்றவாறு தவிப்போடு பார்த்தான்.
தன் உதட்டில் வலதுகையின் சுட்டுவிரலை வைத்துக்கொண்டு, ‘நீதானே அண்ணீ ருசி காட்டுனே. எத்தன வருஷமா ஏங்கிருப்பேன் தெரியுமா. ஆசையா உன்ன தேடி வந்தா தள்ளுறீயே’ என்று மீண்டும் நெருங்கினான். அவன் குரலும் சொற்களின் தடிப்பும் அஞ்சத்தக்கதாய் இருக்கவே, முதுகைக் காட்டியபடி தன் கரங்களை மார்போடு இறுக்கித் திரும்பிகொண்டாள்.
உடலைப் பாதியாக வளைத்தவன், மோப்பமிடும் பாவனையோடு அவளது இடுப்பில் தன் வறண்ட உதடுகளை உரசினான். அவள் சிலிர்த்து விலகும் முன்னாக, சங்கரனது அறை விளக்கு போடப்பட்டது. வேதா பதறியவளாக, இதயத்தின் மீது கைகளைப் பதித்துத் திரும்பிப் பார்த்தாள். சங்கரன் எழுந்ததாகத் தெரியவில்லை.
‘எம்மா வேதா முழிச்சிருக்கீயா. கொஞ்சம் தண்ணீ எடுத்துவா’ என்ற கட்டைக் குரல் வெளிவந்தது. கையில் செம்பு நிறைய நீருடன் முகப்பறையைப் பார்த்தாள். ஆர்யனும் அவனது வாகனமும் அகப்படவில்லை. நிலைக்கதவை அறைந்து மூடிவிட்டு அசைவற்றுக்கிடந்த கணவனுக்கு அருகே பிள்ளைகளை நகர்த்திப் போட்டவளாய்க் கருப்பெறும்புகள் வரிசை கட்டியச் சுவரோரமாகத் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள்.
3
மறுநாள் காலை உச்சிவெயில் தன் ஸ்தானத்தில் நின்றுகொண்டதும், வாசலுக்கு எதிரிலிருந்த காலி மனையில் வாகனத்தை நிறுத்திவிட்டு, கதவைத் தாண்டும்படி உள்ளே நுழைய வந்தான். அவன் கால் உள்ளே வரமுடியாதபடி சங்கரனின் ஊன்றுகோல் உள்ளிருந்து வழிமறைத்தது.
அலைபாயும் கண்களை மறைத்துக்கொண்டு மீண்டும் முயன்றான். தடுப்பு இடுப்புயரம் நீண்டிருந்தது. சங்கரன் ஒரு கையில் செய்தித் தாளுடன், கதவை ஒட்டி ஷோஃபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். பற்களைக் கடித்துக்கொண்டிருந்த அவரது இடக்கன்னம் துளியும் திரும்பவில்லை. தனக்கு நேராக நின்றபடி வேதா, தன் கண்களையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. முறைப்பைப் போலவும் கெஞ்சலைப் போலவுமான பலகீனப் பார்வை. அவன் துரிதமாய்த் திரும்பி நடைபோடத் தொடங்கினான். உடல் கூச்சத்தில் குறுகியது. வாகனத்தைத் தள்ளிக்கொண்டே போனான். ஊமை வெயில் அவன்மேல் கிடந்தது.
வேதா கரங்கூப்பி அழுதபடி நின்றாள். சங்கரன் முகம் நிமிராமல், ‘லேசா சூக்கு காஃபி கொண்டாடி ஆயா’ என்றவராக இரு கைகளிலும் நாளிதழைப் பிடித்து வாசிக்கவாரம்பித்தார்.
00

ஜார்ஜ் ஜோசப்
இவரது இயற்பெயர் ஜோ.ஜார்ஜ் இம்மானுவேல் (1996). ஜார்ஜ் ஜோசப் என்கிற பெயரில் கவிதை, கதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை முதலிய ஆக்கங்களை எழுதி வருகிறார். திருச்சியில் வசிக்கிறார். சீர்மை பதிப்பகம் இவரது எமரால்ட், பெருநெஞ்சன் என இரு சிறுகதைத் தொகுதிகளையும், பூனைகளில்லா உலகம், இஸ்மாயில் என இரு மொழிபெயர்ப்பு நாவல்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. இவரது முதல் கதைத்தொகுதியான ‘எமரால்ட்’ 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுதி பிரிவில் திருக்கார்த்தியல் விருது பெற்றது. அசோகமித்திரன், புதுமைப்பித்தன், மா.அரங்கநாதன், கலீல் ஜிப்ரான் உள்ளிட்ட முன்னோடிகளைத் தன் ஆதர்சமாகக் கருதுகிறார்.