“சுந்தரம்! சுந்தரம்!”

“இதோ வாரேன், வா ராமசாமி வீட்டுக்குள்ள வா.”

“இருக்கட்டும் சுந்தரம் நா மரத்த பாக்க வந்தேன். இந்த மா மரத்த தான் சொன்னியா?”. என்றபடியே மரத்தை ஏற இறங்க பாத்தான் ராமசாமி.

“ஆமாப்பா இத தான் சொன்னேன். நா கேட்ட காசு கிடைக்கும்ல?”

“அது ஒன்னும் பிரச்சனை இல்ல கேட்ட காச குடுத்து புடலாம். மரம் நல்ல வாக்காத்தான் இருக்கு. அப்பறம் நாளைக்கு நம்ம பசங்க வருவாய்ங்க, காச குடுத்துபுட்டு வெட்டிட்டு போய்டுவாங்க என்ன நா சொல்லுறது.”

“நீ சொன்னா சரி தான் பா.”

“அப்ப நா வரட்டுமா…, “

“சரி ராமசாமி …,”

“அப்பா! ராமசாமி மாமா ஏன் நம்ம மரத்த சுத்தி சுத்தி பாத்தாரு.” என்றபடியே ஒடிவந்தான் மணி.

“இந்த மரத்த விக்க போறேன் டா. அதான் அவரு மரத்த பாத்தாரு.”

“எம் மரத்த வெட்டப்போறியா, வேண்டாம்பா “

“ஏலேய் மரத்த வெட்டுனா காசு கிடைக்கும்ல, நீ தான ஸ்கூலுக்கு பீஸ் கட்டனும்னு காசு கேட்ட. மரத்த வெட்ட வேண்டாம்னா காசு யாரு குடுப்பா.”

“போ ப்பா அதுக்கு எம்மரத்த வெட்டுவியாக்கும், எம் மரத்த வெட்டக்கூடாது.”

“கிளிபிள்ளைக்கு சொல்லுறமாதிரி சொல்லுறேன், நீ என்னடான்னா சொன்னது மேலயே சொல்லுறவன். ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு ஓடுற வழிய பாரு. இங்க நின்னு இப்படி அழுதகிட்டு இருந்த அடிச்சு புடுவேன் பாத்துக்க.” என்று கோவமாக சென்றார் சுந்தரம்

மணி அழுதபடியே பள்ளிக்கு சென்றான்.

“ஏன்டா மணி அழுதுகிட்டே வார” என்றான் அவனின் நண்பன் ரவி

“எங்க வீட்டுல இருக்குற மா மரத்த எங்கப்பா வெட்டப்போறாரு டா. நா வேணாம்னு சொன்னா என்ன அடிக்க வாராரு டா.”

“என்னடா சொல்லுற நிஜமாவா வெட்ட போறாரு”

“ஆமா டா”

“மரத்த வெட்டாம காப்பாத்த ஏதாவது ஐடியா குடுடா.”

“இப்படி திடீர்னு கேட்டா எப்படி டா. கொஞ்சம் பொறு யோசிச்சு சொல்லுறேன். இப்ப வா ஸ்கூலுக்கு நேரமாச்சு.லேட்டாச்சுனா அந்த சிடுமூஞ்சி வாத்தி நம்மல வெளில நிக்க வச்சுடுவாரு.”

பள்ளிக்கு வந்தும் மணியின் மனம் முழுதும் மரத்தையே சுற்றி வந்தது.

“டேய் எனக்கு ஒரு யோசனை, பேசாம இன்னைக்கு ராத்திரியோட ராத்திரியா அந்தமரத்த சுத்தி செவப்பு சேலை கட்டிவிட்டு மரத்துல சாமி வந்துட்டுன்னு சொல்லுவோம் டா. சாமிக்கு பயந்து மரத்த வெட்ட மாட்டாங்கள்லா. எப்படி என ஐடியா”என்று தன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான் ரவி

“போடா லூசு பயலே! உன் ஐடியாவ தூக்கி குப்பைல போடு.” என்று ரவியின் பின்னந்தலையில் அடித்தான் மணி.

“ஏன்டா?”

“என்ன ஏண்டா நோண்டான்னு. எங்க வீட்டுல இருக்குறது மா மரம் அதுல எப்படிடா சாமி வரும் மக்கு சாம்பராணி.”

“அட ஆமால. இத நான் மறந்துட்டேன்.”

“நல்லா மறந்த போடா”

“டேய் அங்க என்னடா குசு குசுனு பேசிகிட்டு இருக்கிங்க” என்று ஆசிரியர் கேட்கவும் “ஒன்னும் இல்ல சார்” என்றனர் இருவரும்.

“டேய் உண்மைய சொல்லல வெயில்ல முட்டுக்கால் போடனும் பாத்துக்கோங்க.”

“சார் இவங்க வீட்டுல இருக்குற மாமரத்த வெட்ட போறாங்களாம். அதான் சார் அத எப்படி தடுக்கனு பேசிட்டு இருந்தோம்.” என்றான் ரவி.

“ஆமா டா நீங்க ரெண்டுபேரும் பேசி இந்தியாவ காப்பத்தபோறீங்களோ? ஒழுங்கா பாடத்த கவனிக்கல ஒத படுவிங்க பாத்துக்கோங்க. இங்க உசிர குடுத்து பாடம் எடுத்தா மரத்த காப்பாத்துறேன், கிணத்த காப்பாத்துறேனு கதை அளக்குறிங்களா போய் உக்காருங்கடா.”

“சரி சார்” என்ற படி இருவரும் அமர்ந்தனர்.

பள்ளி முடிந்து மணியும் ரவியும் வீடு திரும்பினான். வரும் வழியெல்லாம் மரத்தை பற்றிய பேச்சுதான் இருவருக்குள்ளும் .

கருக்கல் நேரம் இருவரும் மாமரத்தடியில் அமர்ந்து பேசிக்கிட்டு இருந்தனர்.

“என்னடா எப்படி யோசிச்சாலும் ஒரு ஐடியாவும் கிடைக்க மாட்டுக்கு. என்னடா பண்ண.”

“அதான் டா எனக்கும் என்ன பண்ணனு தெரியல. இருட்டியும் போச்சு விடிஞ்சா ஆளுங்க எல்லாம் வந்துடுவாங்க.”

“டேய் அங்க என்னடா மரத்துக்கு கீழ மாநாடு படுக்க வாடா” என்று மணியின் அம்மா அழைத்தாள்.

“வாரேன் மா.,” என்றான் மணி.

“சரி டா. நானும் வீட்டுக்கு போறேன்.” என்றபடியே ரவியும் வீட்டுக்கு போனான்

“அம்மா”

“என்ன டா”

“அம்மா அப்பாக்கிட்ட சொல்லுமா மரத்த வெட்ட வேண்டான்னு.”

“டேய் வாய மூடிட்டு தூங்குடா.”

“மரத்த வெட்டுனியா இனி நா பள்ளிக்கூடத்துக்கு இந்த போக மாட்டேன்.”

“நீ அடி வாங்காம தூங்க மாட்டியா? பேசாம தூங்குடான்னா.” என்று அதட்டி மணியை தூங்க வைத்தாள் அவனின் அம்மா.

பொழுது விடிந்தது!

“மணி டேய் மணி எந்திரிடா ஸ்கூலுக்கு நேரமாச்சு”

“நா ஸ்கூலுக்கு போகமாட்டேன்.”

“ஏன்டா, இப்படி காலங்காத்தல அழுகுற?”

“நா சொல்ல சொல்ல கேக்காம மரத்த வெட்டுனிங்கள்ல. இனி நா ஸ்கூலுக்கு போகமாட்டேன்.”

“டேய் யாருடா மரத்த வெட்டுனா. மரத்தலாம் யாரும் வெட்டல உங்க வாத்தியாரு காலைல வந்தாரு, வந்து டியூசன் நடத்த இடம் வேணும் மரத்தடிய வாடகைக்கு குடுங்கன்னு கேட்டாரு. அப்பாவும் சரினு சொல்லிட்டாரு. அதனால மரத்த வெட்டல இப்ப அழாம ஓடு ஸ்கூலுக்கு நேரமாச்சு.”

“ஐய்யா ஜாலி அம்மான்னா அம்மா தான்.”

“டேய் நா என்னடா பண்ணுனேன். எல்லாம் உங்க வாத்தியாரு தான் பண்ணாரு. போயி அவருக்கு நன்றி சொல்லு.”

“சரிமா நா ஸ்கூலுக்கு போறேன். ரவிக்கும் போயி இத சொன்ன ரொம்ப சந்தோஷப்படுவான் மா.”

“சரி சரி போடா”

மரம் காப்பாற்றப் பட்ட சந்தோஷத்தில் ஓடி வந்தான் பள்ளிக்கு. அவனுக்கு சற்று தொலைவில் ரவி செல்வதை பார்த்தான். “ரவி டேய் ரவி” என்று கத்தியபடியே ஓடினான் ரவியை நோக்கி

“என்னடா ஏன் இப்படி ஓடி வார உங்கப்பா மரத்த வெட்டிட்டாரா.”

“உன் வாய கழுவுடா. எங்கப்பா மரத்த வெட்டல நம்ம சிடுமூஞ்சி வாத்தியாரு மாமரத்துக்கு கீழ டியூசன் எடுக்க வாடகைக்கு கேட்டாராம் எங்கப்பாவும் சரிவு சொல்லிட்டாராம் டா”

“என்னடா சொல்லுற அந்த நம்பியார் எப்படி டா எம்.ஜி.ஆர் ஆ மாறுனாரு?”

“அவரு எப்படி மாறுனா நமக்கு என்ன டா. மரத்த வெட்டல லா நமக்கு அது போதும்.”

இருவரும் இணைந்து வகுப்பறைக்குள் நுழைந்தனர். அன்றைய வாசகமாக கரும்பலகையில், “பிற உயிர்களிடத்தில் அன்பு செய்” என்று எழுதப்பட்டு இருந்தது.

 ரா.சண்முகவள்ளி

கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.

இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம்,  வானவில், நான் போன்ற  மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *