வத்தலா டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். முனிசு துணிப்பையை தோளில் போட்டுக்கொண்டு நாக்கை மடித்து துலாவிய படி சலவாய் வடிந்த படி டீச்சர் டீச்சர்னு திக்கு வாயோடு கூவினான்.
”முனிசு உள்ள வா! வந்து ஒக்காரு’’
“சரிங்க டீச்சர்”. சிரித்துக் கொண்டு ஒக்கார்ந்தான்.
மணி அடித்தது. வத்தலா டீச்சர் மத்தியச் சாப்பாட்டோடு நொறுக்குத்தீனியாக அச்சு முறுக்கும் அதிரசமும் கொண்டு வந்திருந்தாள்.
முறுக்கையும் ,அதிரசத்தையும் பிய்த்தாள். ”முனிசு இங்க வா”
வடிஞ்ச மூக்கை தொடச்சுக்கிட்டு, வத்தலா டீச்சரின் பக்கத்தில் போனான்.
”இந்தா பண்டம்”
திக்கு வாயோடு, ’வே வே வேணாம் டீச்சர்”.
”டீச்சர் தான குடுக்குறேன் , வாங்கிக் கோ.”
பண்டங்களை வாங்கி டவுசருப் பைக்குள் வச்சுப்பிட்டு ஒரு அச்சு முறுக்கை எடுத்து நொறுக்கி வாயில் போட்டான்.
நெற அமாவாசை, முனிசு புலம்பிக் கொண்டிருந்தான். அன்று ஒரு நாள் மட்டும் வேற்று ஒலகத்திற்குச் செல்வான். பள்ளிக்கொடத்துக்கு அன்று ஒருநாள் விடுப்பு விட்டுவிட்டு ஊரையே சுத்துவான்.
தாயும் தகப்பனும் விடிஞ்சா கெணத்து வேலைக்கு போய்ட்டு , பொழுது அடஞ்சா தான் வீட்டு வாசப்படியை தொடுவார்கள்.
பள்ளிக்கொடம் பள்ளிக்கொடமாய் ஓடினார்கள் முனிசின் தாயும் தகப்பனும். மூள வளர்ச்சி இல்லாத பயனு, சேர்க்க மறுத்தனர். கடசியாக வத்தலா டீச்சர் காலில் விழுந்து நடுத்தரப் பள்ளிக்கொடத்துல சேர்த்தனர்.
வத்தலா டீச்சர் முனிசிடம், ”ஓம் பேரென்ன”
”முனிசு”
”நல்லா படிப்பயா”
நாக்கைச் சுருட்டி திக்கு வாயோடு ’படிப்பேன் டீச்சர்’ என்றான்.
வத்தலா டீச்சர் முன் முனிசின் தாயும் தகப்பனும் கண்ணீர் மல்க கும்பிட்டு,
’ஒரு பள்ளிக்கொடத்துலயும் சேர்க்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க டீச்சர்.
கிறுக்கு பயல யாரு பாக்குறதுனு தொறத்திட்டாங்க , நீங்க நல்லா இருப்பேய்ங்க டீச்சர். நாங்க காடு மேடுனு கெணத்து வேலைக்குப் போய்ட்டு வாறோம்.
இவன ஒத்தயில வீட்டுல, விட்டு போகமுடியல. வீட்டுல வயசான ஆளுக யாரும் இல்ல எல்லாரும் போய்ச் சேர்ந்திட்டாக’
வத்தலா டீச்சர் , முனிசின் தாயிடம், ’நீங்க ஒன்னும் கவலப்படாதேய்ங்க
எம்புள்ள மாதிரி பாத்துக்கிறேன்’.
நடுத்தரப் பள்ளிக்கொடத்துல,வத்தலா டீச்சருக்கு எதிர்ப்புக் கெளம்பியது. மத்த டீச்சர்க எல்லாரும் சேர்ந்து வத்தலா டீச்சரிடம் வாதிட்டனர்.
”கிறுக்குப் பயல பள்ளிக்கொடத்துல சேர்த்திருக்கேய்ங்க. மத்த பிள்ளகளோட தாய் தகப்பன் என்ன நெனப்பாக”.
”நீங்க யாரும் கவலைப் பட வேணாம். நான் தான் தலைமையாசிரியர்.
இதுனால வாரா பிரச்சினைகள நான் பாத்துக்கிறேன்”. மொகத்தில அறைஞ்சது போல இருந்தது மத்த டீச்சர்களுக்கு.
பரீட்சை எழுதாமயே முனிசு அஞ்சாவது வர வந்தான்.
அஞ்சாவதுக்குப் பிறகு,வத்தலா டீச்சர் அறையின் வாசலில் ஒக்கார்ந்து கொள்வான்.
மூனு மணி அடிச்சா , டீ தூக்கைத் தூக்கிக் கொண்டு கடைக்கு செல்வான்.
கடக்காரிடம் திக்கு வாயோடு வத்தலா டீச்சர் டீ என்று சொல்வான் .ஒடனே புரிந்து கொள்வார்கள்.
எவ்வளவு ரூவா கொடுத்தாலும் வாங்க மாட்டான் முனிசு. மிச்சத்தை கொண்டாந்து வத்தலா டீச்சர் கையில ஒப்படைப்பான்.
கலியாணமே பண்ணிக் கொள்ளாத வத்தலா டீச்சர், “முனிசை தத்தெடுத்துக் கொண்டாள்”.
கோடை விடுமுறை தொடங்கி விட்டது, புளியந்தோப்பில் பழங்கள் விழ ஆரம்பித்தன.
வற்றுக் கண்மாயில சிறுவாண்டுகள் மீங்குஞ்சுகள பிடிச்சு வெளயாடினர்.
வாத்துக் காரர்கள் கோட மேய்ச்சலுக்கு வாத்துக்களை எறக்கினர்.முனிசு வாத்துப்பட்டிக்கு கெளம்பினான்.
”முட்டை முட்டை, வாத்து முட்டை வேணும்”. வாத்துப் பட்டியின் முன்னே புலம்பிக் கொண்டு இருந்தான்.
வாத்துக்காரர்கள், ’ஏய் அந்த பயலுக்கு ரெண்டு முட்டையைக் குடுத்து கெளப்பி விடுங்கய்யா’.
மீசக்கெழவன் நாலு வாத்து முட்டையைக் முனிசு கையிலகுடுத்து கெளப்பி விட்டார்.
”முனிசின் மொகத்தில பூத்திருந்ததது சிரிப்பூ”.
ஊரார்களின் ஒவ்வொரு வீட்டையும் தட்டி, ‘வாத்து முட்டை.. வாத்து முட்டை .. தாத்தா குடுத்தாரு தாத்தா குடுத்தாரு!” திக்குவாயோடு ,வடிஞ்ச மூக்கைத் தொடச்சபடி வீட்டுக்கு வந்தான்.
ரெண்டு முட்டையை கோழி அடயில வச்சான் முனிசு. மிச்சமிருந்த ரெண்டு முட்டையை ஒடச்சு பொரிச்சு தின்றார்கள் முனிசின் தாயும் தகப்பனும்.
வெள்ளயம்மாக்கெழவி செத்து பதினாறாவது நாள் தாண்டியிருந்தது.வெள்ளயம்மாக்கெழவி வீட்டார்கள் திண்பண்டங்களை முனிசிடம் கொடுத்தனர்.
”இல்ல வேணாம் இல்ல வேணாம்”
”பாட்டி செத்திருக்கு.. பாட்டி பாட்டி செத்திருக்கு” திக்குவாயோடு சொல்ல,
வெள்ளயம்மாக்கெழவி வீட்டார்கள், இவனப் போயி கிறுக்குப் பயனு சொல்றாங்களே. எவ்வளவு தெளிவா இருக்கான் பாருங்க. கெழவி செத்திருக்காம். அதனால பண்டம் வேணாம்னு சொல்றயான்.”
அமாவாசை இருட்டு,துணிப்பையை கையில புடித்தபடி கம்மாக்கரை வழியே புளியந்தோப்புக்கு நடந்தான் முனிசு. தானே பேசிக்கொண்டான் தானே சிரித்துக் கொண்டான்.
வெளிக்கி இருந்துவிட்டு காலுகையை கம்மாய்க்குள்ள கழுவினான்.புளியம்பழங்கள் எடம் தெரியாம அப்பிக் கெடந்தன. துணிப்பையை நெப்பினான். கோழி கூப்பிட்டது. பளாருனு விடிய ஆரம்பித்தது.
பொடிநடையாய் வந்தான். மந்தயில செல்லி மீனை அறுத்து ஒரசிக் கொண்டு இருந்தாள்.
”ஏலேய் முனிசு, எனக்கு அஞ்சாறு புளியம்பழம் போட்டுட்டு போடா!”
’அம்மா அடிக்கும்’ ‘அம்மா அடிக்கும்’
சரிடா,” குடுக்காட்டி போ”.
செல்லி ஆய்ஞ்ச , மீன் மண்டைகள தனியா பிரிச்சு குமிச்சா. மீன் மண்டைகள பச்சயா அள்ளி திங்க ஆரம்பிச்சான் முனிசு. ‘ஏய் கிறுக்குப் பயலே! கீழ போடுறா, பச்ச மீனை திம்பாங்களா” கோவத்தோடு வெரட்டினா செல்லி. முனிசு சிரித்துக் கொண்டே வந்தான்.
கோழி அடயில வாத்துக் குஞ்சு பொறித்து இருந்தது. கோடலீவு முடிஞ்சு விடிஞ்சா பள்ளிக் கொடம். ரெண்டு கிலோ புளியும் பத்து வாத்து முட்டையும் துணிப்பையில கட்டி முனிசிடம் குடத்து,வழியனுப்பி விட்டனர் முனிசின் தாயும் தகப்பனும்.
’ஏலே முனிசு, வத்தலா டீச்சர்கிட்ட குடுக்கணும். வேற யாரும் கேட்டாலும் குடுக்கக் கூடாது”
”சரிய்யா”.
முனிசு வத்தலா டீச்சரிடம், ’அம்மாஅம்ம்மா குடுத்துச்சு’’அம்மா குடுத்துச்சு’
”பையில என்ன இருக்க?”
வத்தலா டீச்சர் பையை வாங்கி பாக்கயில் ரெண்டு கிலோ புளியும் வாத்து முட்டையும் இருந்தது.
’ஏலேய் முனிசு. இந்த ரூவா, ஒங்க அம்மைகிட்ட போய் குடுக்கனும். சரிய்யா’ இருபது ரூவா தாளை எடுத்து நீட்டினாள்.
’வேணாம் டீச்சர்’ ’வேணாம் வேவேணாம். அம்ம்மா அம்ம்மா அடிக்கும்”
வத்தலா டீச்சர் கொண்டு வந்தபண்டங்களை, முனிசின் துணிப்பைக்குள் திணிச்சு விட்டார் .
பள்ளிக்கொடம் முடிஞ்ச வந்ததும் வாத்துக் குஞ்சுகளை, புடிச்சுக்கிட்டு மேய்க்கப் போறதுமாய் இருந்தான். ஒழவு ஓட்டி கெடந்த வயல்களில் வாத்துக் குஞ்சுகள எறக்கிவிட்டான்.
பெராந்துகள் சுத்திக் கொண்டு இருந்தன. ரெண்டு வாத்துக் குஞ்சுகளயும் ஒரே தூக்கில் தூக்கிச் சென்றது.
முனிசு அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தான். “வாத்துக்குஞ்சு.. வாத்துக் குஞ்சு.. பெராந்து தூக்கிட்டு போய்ருச்சு” .
பள்ளிக்கொடத்துக்கு லீவு போட்டுட்டு அன்னைக்கு முழுவதும் வாத்துக் குஞ்சுகளை நெனச்சுக்கிட்டே படுத்திருந்தான் முனிசு. கஞ்சியும் குடிக்கல.
வத்தலா டீச்சர் பள்ளி ஆண்டு விழாக்கான முன்னேற்பாடுகளில் இருந்தார்.கூடவே இருக்கும் முனிசு அன்று இல்லை.
மற்ற டீச்சர்களிடம் வத்தலா டீச்சர், ‘ஏய்ங் டீச்சர், இந்த முனிசு பய லீவா?’
‘தெரியல டீச்சர்’.
மறுநாள் துணிப்பையில் ஒற்றை நோட்டும் அலுமினியத் தட்டோடு , தோளில் போட்டுக் கொண்டு வந்தான் முனிசு.
’நேத்து ஏன்டா லீவு’
அழுது கொண்டே ,வடிஞ்ச மூக்கை தொடச்சுக்கிட்டு, ”டீடீச்சர் வாவாத்துக் குஞ்சு.. பெராந்து தூக்கிட்டு போய்ருச்சு”
”சரி சரி அழுகக்கூடாது. டீச்சர் சொன்னா கேப்பலே”.
எல்லா டீச்சர்களுக்கும் ஓடும் பிள்ளயானான் முனிசு. காலை மதியம் ரெண்டு வேலயும் டீச்சர்களுக்கு டீ காபி பண்டங்களை வாங்கிக் கொடுத்தும் வந்தான்.
பாட்டி ஊருக்கு கெம்பினார்கள் முனிசின் தாயும் தகப்பனும். முனிசும் அடம்புடித்தான். டவசருசட்டையை மாட்டிக்கொண்டு கெளம்பினான்.
ஊர் குளத்தில் சிறுவாண்டுகள் குளித்தனர். முனிசுக்கு கொளத்துல முங்கி குழிக்க பிரியம்.
பாட்டி வீட்டுக்கு போனதும், கொளத்துக்கு வந்தான். சிறுவாண்டுகளோடு குளித்தான். முங்கி முங்கி எழுந்தான். ஆகாயத்தில் மிதப்பதாய் கொளத்தில் மிதந்தான். ஆழம் இழுத்தது முனிசை.
உயிர் மட்டும் இல்லை. ஒடல் மெதந்தது கொளத்துல.தேடிப் பிடித்து தூக்கினர்.
ஒரு வாரமாச்சு, முனிசு பள்ளிக் கொடம் வந்து. வத்தலா டீச்சருக்கு சேதி வந்தது.முனிசு தண்ணியில முங்கி செத்துப் போன சேதி. ஒறைஞ்சு போனார் வத்தலா டீச்சர்.
வத்தலா டீச்சர் காலடியில சுத்திக் கொண்டு திரிந்த முனிசின் துணிப்பையும் ஒரு நோட்டும் ஒரு அலுமினிய தட்டும் டீச்சரின் அறையில் இருந்தது. முனிசு மட்டும் இல்லை.

அய்யனார் ஈடாடி
மதுரை மாவட்டம், மாடக்குளம் அருகிலிருக்கும் தானத்தவம் எனும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். வேதிப் பொறியியல் துறையில் பி.டெக் பட்டம் பெற்றவர். தற்போது தொழில் முனைவோராக உள்ளார்.
கல்லூரிக் காலத்திலேயே படைப்புகளை எழுதத் தொடங்கியவர். வேளாண் தொழில் குடும்பப் பின்புலமும், தமிழின் மீதான பற்றாலும், இயற்கையின் கொண்டிருக்கும் அதீதக் காதலாலும் கவிதைகளைப் படைப்புகளாக வடித்தெடுக்கிறார்.
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதை நூலை 2022லும் , மதுரை வட்டார கிராமத்து எளிய மக்களின் பாடுகளையும் , வரலாற்று சரித்திரத்தையும்
எனதூர் சரித்திரம் எனும் சிறுகதை நூலாக தொகுத்து 2023ல் வெளியிட்டிருக்கிறார்.