சத்தியப்பெருமாள் பாலுசாமி
000
சிம்ரனுக்கு அப்பொழுது பதினொரு வயது. யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள். இனிமேல் ஒருபோதும் அந்த வீட்டிற்குள், தான் அனுமதிக்கப்படமாட்டோம் என்பதை நன்றாக அறிந்தேதான் துணிச்சலான அந்த முடிவை எடுத்திருந்தாள். அம்மாவும், அப்பாவும், மூன்று அண்ணன்களும் நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஓசையில்லாமல் கதவைச் சாத்திவிட்டு வீதியில் இறங்கியவளின் இதயம் நீரில் நனைந்த பூனையைப் போல வெடவெடத்துக் கொண்டிருந்தது. எலிகளும், பெருக்கான்களும், தெருநாய்களும் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவில், சந்துசந்தாகச் சுற்றிக்கொண்டு அவள் தஞ்சமென்று சென்றடைந்த இடம், நகரின் முக்கியமான பகுதியொன்றில் இருந்த ஒரு ஓட்டு வீடு.
Ooo
முதலில், அந்த அம்மையார் அதற்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. “போ, உன்னோட வீட்டுக்கே திரும்பிப் போயிடு”, என்று விரட்டுவதிலேயே குறியாக இருந்தார். ஆனால், சிம்ரன் அசரவில்லை. விடாப்பிடியாக நின்றாள்.
“பல்லுப்படுதும்பான்; நீ திரும்பி நின்னு பொட்டியக் காட்டுனா, ‘ஐயே! பிய்யி!!’ன்னு காறித்துப்பிட்டுப் போயிட்டே இருப்பான். இது ஒரு நரகம். சோத்துக்கே நாய்படாதபாடு படணும். போ. உன்னோட வீட்டுக்கே திரும்பிப் போயிடு” – அந்த அம்மையாரும் அசரவில்லை. இறுதியில், சிம்ரனின் உறுதிதான் வென்றது. நாள்குறிக்கப்பட்டது.
ooo
ஒரு நீளமான அரைஞாண் கயிறு. அதன் ஒரு தலைப்பு ‘உருவாஞ் சுருக்காகி’ சிம்ரனின் பாலுறுப்புகள் மூன்றையும் இறுக்கிக் கொண்டிருந்தது. மறுதலைப்பைத் திருநங்கை ஒருவர் பற்றியிருந்தார். அந்த அறையின் ஒரு சுவற்றினருகே பூசைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எதிர்ச் சுவற்றை ஒட்டி ஆறடி நீளம், மூன்றடி அகலம், எட்டடி ஆழத்திற்குக் குழியொன்று தோண்டி வைக்கப்பட்டிருந்தது. இவற்றிற்கு இடையிலே சீரான வேகத்தில் நடந்து கொண்டிருந்தாள் சிம்ரன். அந்த நடையால், அவளது பாலுறுப்பைச் சுற்றியிருந்த சுருக்கு மேலும் மேலும் இறுகிக்கொண்டேயிருந்தது. இரத்த ஓட்டம் மெள்ள மெள்ளத் தடைப்பட்டு அந்த இடமே மரத்துப் போய்க்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில், சுத்தமாக உணர்ச்சியற்றுப் போனதை உறுதிசெய்து கொண்டதும், பூசைகள் தொடங்கின.
இளநகையுடன் சேவற்கோழியை அணைத்திருந்த மாத்தாவின் படத்தையே பக்தியுடன் வெறித்தபடி ஆடையின்றி நின்றிருந்தாள் சிம்ரன். அவள் முகத்தில் அச்சத்தின் சிறிய ரேகை கூட இல்லை. வாயில் ‘பந்தாடை’ வைத்ததற்குக் கூட ‘வேண்டாம்’ என்று மறுத்துவிட்டாள். மாத்தாவிற்குக் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டதும் அவளது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டன. அவளுக்குப் பின்னாலிருந்த சுவற்றின் மீது சாய்ந்து நின்றிருந்த ஒருவர், தனது கைகளை அவளது கைகளுக்கும் உடலுக்கும் இடையிலே செலுத்தி நீட்டிப், பிடறிப்பக்கமாகக் கோர்த்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். அப்போதும், சிம்ரனிடம் ஒரு சிறிய தடுமாற்றம் கூட இல்லை. இப்போது அவர், தன்னைத் திடமாகச் சுவற்றுடன் பொருத்திக்கொண்டு, தனது வலது காலை மெள்ளமாக மடக்கி, முட்டியை சிம்ரனின் கீழ்முதுகில் வைத்து லேசாக நெட்டி அழுத்தினார். அவளது பிறப்புறுப்புகள் மொத்த உடலையும்விட்டுச் சில அங்குலங்கள் முன்னுக்குத் துருத்திக்கொண்டு நின்றன. மெல்லிய குரலில் ஏதேதோ மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே அருகில் வந்த தாயம்மா, சிம்ரனின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டார், “மனசு மாறியிருந்தாச் சொல்லிடு சாமீ… திரும்பி வீட்டுக்கே போயிடுறியா?”
மறுப்பாகத் தலையை அசைத்தாள் சிம்ரன். மூன்றும் முடிச்சோடு அறுபட்டுக் கீழே விழுந்தன. மின்னல் வேகத்தில் ‘தாயம்மா கை’ நடந்து முடிந்திருந்தது. அறுபட்ட இடத்தில் குருதி பீறிட்டது. ஒருவேளை, மிகையான குருதி இழப்பு ஏற்பட்டு இறந்திருந்தாள் என்றாள், சிம்ரனை அந்த அறையில் தோண்டி வைத்திருந்த குழியிலேயே இட்டுப் புதைத்துக் காணாப் பிணமாக்கியிருப்பார்கள். விஷயம் வெளியே தெரிந்தால் எல்லோரும் கம்பி எண்ண வேண்டி வரும்.
ooo
கேட்டுக் கொண்டிருந்த எனக்கே குலைநடுங்கியது என்றால், சிம்ரனுக்கு எப்படியிருந்திருக்கும்!
“ஒரு சொட்டுக் கண்ணீர் விடலையே! ‘ஐயோ’ன்னு ஒரேயொரு சத்தங்கூட நாம் போடலியே”, என்றாள் புன்னகையுடன்.
“எப்படி சிம்ரன்?!!!!”
“உண்மையைச் சொன்னா, அந்த நிமிசந்தான் என்னோட வாழ்க்கையிலயே நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்த நிமிசம். எதுக்காவ நான் வீட்ட விட்டு ஓடி வந்தேனோ அது நிறைவேறின தருணம் அதுதான் இல்லையா?”
ooo
தனக்குச் சற்றும் பொருத்தமேயில்லாத கூட்டில் தான் அடைபட்டிருப்பதை உணர்ந்துகொண்ட பொழுது, அந்தச் சிறுவனுக்கு வயது ஐந்து தான் ஆகியிருந்தது. முதல் மூன்றுமே ஆண்களாகப் பிறந்துவிட்டதில், அவனுடைய அம்மாவுக்கு நிறைய வருத்தமிருந்தது. ஆனால், நான்காவது குழந்தையாவதும் பெண்ணாகப் பிறந்துவிட வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்தவருக்கு இறுதியில் மிஞ்சியதென்னவோ ஏமாற்றமாகத்தான் அமைந்தது.
அந்தக் குழந்தையை ‘வாடி தங்கம் போடி வைரம்’ என்றே அழைத்தார். கண்களுக்கு மையெழுதிவிட்டார். சடையைப்பின்னிப் பூ வைத்துவிட்டார். பெண் குழந்தைகளுக்கான ஆடைகளை அணிவித்து அழகுபார்த்தார். அதனால், நினைவு தெரியத்தொடங்கிய நாளிலிருந்தே யாரும் ஏவாமல், தானாகவே முன்வந்து வீட்டைக் கூட்டியது அந்தக் குழந்தை. அம்மா ‘வட்டச்சொம்பு’ விளக்கி வைத்தால், பொறுப்பாகக் கழுவிக் கவிழ்த்தது. சின்னச் செப்புக் குடத்தை இடுப்பில் வைத்துத்கொண்டு தண்ணீர் சுமந்தது. ஆரம்பத்தில் இவற்றையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத அப்பா பின்னாட்களில் கண்டித்திருக்கிறார். ஆனால், அதற்குள் மறுசீரமைக்கவே முடியாத அளவிற்கு அந்தக் குழந்தையின் மனது மாறிப்போயிருந்தது. ‘பொம்பளச்சட்டி’ என்ற பட்டத்தைச் சமூகத்திடமிருந்து பெற்றிருந்தது. சில உறவுக்கார ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கும் கூட ஆளாகியிருந்தது. அந்தக் கொடுமைகளை வெளியே சொல்லக்கூடாது என்ற அளவிற்குக் கள்ளத்தையும் அது பழகியிருந்தது.
மூன்றாம் வகுப்பு முழுஆண்டு விடுமுறை மதியமொன்றில், ‘வீட்டில் யாருமில்லை’ என்ற தைரியத்தில் அம்மாவின் சேலையைக் கட்டிக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்த்த அந்தச் சிறுவன், கையும் களவுமாகத் தனது அப்பாவிடமே சிக்கிக் கொள்வோம் என்று எதிர்பார்த்திருக்கமாட்டான். அன்றைக்கு ஆரம்பித்தன அவனது போராட்டங்கள். “சொல்லித் திருத்துவோம்’ என்ற முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்ததால், அடிதடியில் இறங்கினார் அந்தத் தந்தை. அவருக்கு உளவு சொல்பவர்களாகவும், சமயங்களில் தாமே முன்வந்து தம்பியைத் தண்டிப்பவர்களாகவும் மாறிப்போனார்கள் உடன்பிறந்த தமயன்கள்.
அந்தச் சிறுவனுக்குத், தில்லானா மோகனாம்பாள் பத்மினியைப் போல உடையணிந்து நாட்டியம் ஆடவேண்டும் என்ற ஆசையிருந்தது. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன? பாடலின், ‘முகத்தில் நவரசமும்’ பகுதிக்கு, தான் காண்பிக்கும் பாவங்களைக் கண்டு பார்வையாளர்கள், கைதட்டி ஆரவாரிக்க வேண்டும் என்ற ஏக்கமிருந்தது. சில வேளைகளில், கண்டாங்கிச் சேலையைக் கட்டிக்கொண்டு கடலோரக் கவிதைகள் இரஞ்சனியைப் போல, ‘பொடிநடையாப் போறவரே, பொறுத்திருங்க நானும் வாறேன்”, என்று பாடியாடிக், காதலனை வம்புக்கிழுக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. பல வேளைகளில், சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா, தீபா போன்றவர்களைப் போல அரைகுறையாக உடையணிந்து, ‘பொன்மேனி உருகுதே, என்னாசை பெருகுதே’, என்று ஆட்டம்போட்டு ஆண்களையெல்லாம் தனது காலடியில் வீழ்த்தவேண்டும் என்ற கொதிப்பு இருந்தது. கல்யாண வீடுகளுக்குச் செல்லும் நாட்களில், பெரிய கரை வைத்த பட்டுப் புடவையில், முழுமையான மணப்பெண் அலங்காரங்களுடன், தான் தலைகுனிந்து நடந்துவரும் போது, தனது உடன்பிறந்தவன்கள், ‘மரகதவல்லிக்கு மணக்கோலம் இந்த மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்’, என்று பாடித் தழுதழுத்து, மணமேடையில் ஏற்ற வேண்டும் என்று மனக்கோட்டை கட்டியது. வெள்ளைப்புடவையைக் கட்டிக்கொண்டு, தெருவில் புழுதியெழக் குதிமாரடித்து அழவேண்டும் என்ற கனவும் கூட, துக்கத்தால் தூக்கமற்றுக்கிடந்த பல இரவுகளில் அதற்கு வந்துபோனது.
000
“இப்படி அறுத்துக்கிட்டதால நீ சாதிச்சதுதான் என்ன சிம்ரன்?”
“தோ, இது தான். இதுக்காகத்தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன்”, தனது முந்தானைய எடுத்து உதறிக்காட்டினாள்.
என்னால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒரு சேலையைக் கட்டிக் கொள்வதற்காக யாராவதும் இழக்கவே கூடாததை இழப்பார்களா? அவளிடமே கேட்டேன். உடனடியாகப் பதிலளிக்காமல், எங்கோ தொலைவில் பார்க்கும் பாவனையில் சிறிதுநேரம் இருந்தவள், மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டு கண்ணுக்குக் கண் பார்த்துக் கேட்டாள்,
“உன்னால சீலையக் கட்டீட்டு நடக்க முடியுமா?’
சட்டென்று, என்ன பதில் சொல்லதென்று எனக்குக் கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது. கண்டிப்பாக என்னால் சேலையைக் கட்டிக்கொள்ள முடியாது. அப்படியொரு ஆசை எனக்கு வந்ததும் இல்லை. உண்மையைச் சொன்னால், சேலையைக் கட்டிக்கொண்டு நான் நிற்பதான கற்பனையே எனக்கு அருவருப்பானதாகவும், அவமானகரமாகவும் தான் இருந்தது. ஆனால், அதற்காக மற்ற ஆண்கள் சேலையே கட்டுவதில்லை என்று சொல்லிவிடமுடியாதே? தொழில் நிமித்தமாக, குறிப்பாகத், திரைப்பட நடிகர்கள் சேலையணிந்து நடிக்கத்தானே செய்கிறார்கள்? சூப்பர் ஸ்டார் இரஜினிகாந்த் சேலை கட்டி நடித்ததில்லையா? சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கட்டியதில்லையா? அட, அவ்வளவு ஏன்? உலகநாயகன் கமலஹாசன் ஒரு படம் முழுக்க மடிசார் மாமியாகவே வலம் வந்தாரே! அவர்களை யாரும் தரக்குறைவானவர்களாகவோ, தாழ்வானவர்களாகவோ பேசியதில்லையே? தலைக்குமேல் வைத்துக் கொண்டாடக்கூடச் செய்தார்களே? ஊரிலும் கூட, கோவில் திருவிழாக்களில் சேலையணிந்து சாமியாடும் ஆண்களை யாரும் பழிப்பதில்லையே? காலில் விழுந்தல்லவா வணங்குகிறார்கள்!
“நீ சொல்ற உதாரணங்கள் வேற. நான் கேட்கறது வேற. உன்னால சேலையைக் கட்டிக்கிட்டு பஜார்ல நடந்து போக முடியுமா? சொல்லு?”
சிம்ரனின் அந்தக் கேள்வியில் இருந்த சவால்தொனி என்னைச் சீண்டியது.
“அதெல்லாம் ஒரு மேட்டரா? நான் சேலை கட்டிக்கிட்டு ரோட்டுல நடந்தா யாரு என்னைக் கேள்வி கேட்கப் போறாங்க?”
“சரி, ரோட்ல நடந்துருவ. சந்தோசம். திடீர்ன்னு உனக்கு ஒன்னுக்கு வருதுன்னு வச்சுக்க? எந்த பாத்ரூம்ல போவ? ஆம்பள பாத்ரூம்லயா? பொம்பள பாத்ரூம்லயா?”
ஐயோ! கண்டிப்பாக என்னால் பெண்களின் கழிவறைக்குள்ளெல்லாம் நுழையவே முடியாது.
“ஆம்பளைங்க பாத்ரூம்ல தான்”
“கரைக்ட். நீ ஆம்பளைப் பையன். ஆம்பளைங்க பாத்ரூம்ல போகணும்ன்னு தான் நினைப்ப. ஆனா, சீலையைச் சுருட்டி உக்காந்துக்கிட்டு உன்னோட குஞ்சாமணியைப் பிடிச்சு நீ ஒன்னுக்கடிக்கறதப் பாக்கற மத்த ஆம்பளைங்க காறித் துப்பமாட்டாங்களா?”
இயல்புதான். கண்டிப்பாக அசிங்க அசிங்கமாகப் பேசுவார்கள். ‘ஏமாற்றுப் பேர்வழி’, என்று கூறி இழுத்துப்போட்டு அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
“உனக்கே இப்பிடின்னா? பொம்பளையாவே என்னை நினைச்சுக்கற எனக்கு எப்படியிருக்கும்? ஆணுறுப்போட, பொம்பளைங்க பாத்ரூம்ல நுழைஞ்சு என்னால ஒன்னுக்கு இருக்க முடியுமா? இதோ, இப்ப, எந்த அச்சமும் இல்லாம பொம்பளைங்களோட பொம்பளைங்களா, பொம்பளைங்க பாத்ரூம்ல பூந்து ஒன்னுக்கு இருக்கமுடியும். விதவிதமா, பொம்பளைங்க ட்ரெஸ்ஸப் போட்டுக்கிட்டு வீதியில வீசி வீசி நடக்கமுடியும். எந்தக் கம்னாட்டியாவதும், சந்தேகப்பட்டான்னா, சேலையை துக்கிக் காட்டி ‘சாட்லா’ போட்டுக்கிட்டுப் போயிட்டே இருப்பேன். ஏன்னா? நான் ‘நிர்வாணம்’ பண்ணிக்கிட்டவ!’.
சிம்ரன் என்னிடம் கேட்ட, “உன்னால சீலையக் கட்டீட்டு நடக்க முடியுமா?’, என்ற கேள்வியின் பொருள் இப்போதுதான் எனக்கு விளங்கியது. கண்டிப்பாக, ஒரு ஆண்மகனால் சேலையைக் கட்டிக்கொண்டு வாழ்ந்துவிடவெல்லாம் முடியாது.
“அவ்வளவு ஏன்? எங்க அரவாணிகள் சமூகத்திலேயே, அக்வாக்களை அதாவது, நிர்வாணம் பண்ணிக்காத கோத்திகளை ஒருபடி கீழதான் வச்சுப் பாப்போம். அப்படியிருக்கும் போது உலகத்தைக் குத்தம் சொல்ல முடியுமா?” என்ற சிம்ரன், ஒரு பெருமூச்சுடன் அங்கலாய்த்தாள், “எப்படியோ? என்னால முடிஞ்சுது, நான் நிர்வாணம் பண்ணிக்கிட்டேன். வீட்ல நாலாவது பையன்ங்கறதால, நான் கல்யாணம் பண்ணிக் குழந்தைகுட்டி பெத்துத்தான் வம்சத்தை வளத்தாகணும்ங்கற கட்டாயமும், எமோசனல் ப்ளாக்மெயிலும் வீட்ல இல்லை. ஆனா, யோசிச்சுப்பாரு? வீட்டுக்கு ஒத்தை ஆம்பளப்புள்ளையாப் பொறந்தவன், பெத்தவங்க சொல்லை மீறவே முடியாதவன், உயிர்பயத்தால வீட்டாரோட பேச்சுக்குக் கட்டுப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவன் எல்லாம் என்ன பண்ணுவான்? தனக்கு இஷ்டமான ஒரு ட்ரெஸ்ஸக்கூடப் போட்டுக்க முடியலியேன்னு தான வாழ்க்கை முழுக்கப் புழுங்கிப் புழுங்கிச் சாவான்? ஒருவேளை, எல்லாத்தையும் உதறி எறிஞ்சுட்டு, வீட்டைவிட்டு வெளியேறி நிர்வாணம் பண்ணிக்கிட்டா மட்டும் வாழ்க்கையில என்ன பாலாறும், தேனாறுமா ஓடீருது? பிச்சையெடுத்தோ, பாலியல் தொழிலோ செஞ்சுதானே வாழ்க்கையை ஓட்ட முடியிது? தோ, என்னையே எடுத்துக்கயேன், வீட்டுக்குக் கட்டுப்பட்டு வெளியேறாம இருந்திருந்தேன்னா இந்நேரம் பத்தேக்கராவுக்கு நான் சொந்தக்காரி! ஆனா, இப்ப?”
சில நொடிகள் தரையைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டவள் சொன்னாள், “அத்தனை கஷ்டத்தையும் எதுக்காகத் தாங்கிக்கறோம் தெரியுமா? இதோ, எங்களுக்கு இஷ்டமான இந்தச் சீலைக்காகத்தான்!”
000
கேரளத்தின் கொல்லம் நகருக்கு வடக்கே, தேசிய நெடுஞ்சாலை 66 ல் அமைந்துள்ளது கருநாகப்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட ‘ச்சவற’ என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில், மேற்சொன்ன நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது ஒரு கோவில். பாலக்காட்டிலிருந்து வரும் பொழுது நெடுஞ்சாலைக்கு இடதுபுறமாக இது இருக்கிறது. இந்தக் கோவிலானது ‘கொட்டன்குளங்கர பகவதி’க்கானது. மிகச் சிறிய கோவிலாக இது இருந்தாலும், இன்றைக்கு உலகப்பிரசித்தியைப் பெற்றதாக இருக்கிறது. அதற்குக் காரணம், ஆண்டுதோறும் பங்குனிமாதம் பத்து மற்றும் பதினோறாம் தேதிகளில் நடைபெறும் ‘சமயவிளக்கு’ திருவிழா. மலையாள உச்சரிப்பில் ‘ச்சமய விளக்கு’. இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமே ஆண்கள், பெண்வேடமிட்டு விளக்கேந்தி வருவது தான். ‘ச்சமய’ என்றால் ஒப்பனை. ஆண்கள் பெண்களைப் போல ஒப்பனையிட்டு விளக்கேந்தி வருவதால் தான் இந்த விழாவிற்கே ‘சமய விளக்கு’ என்று பெயர் வந்தது.
பொதுவாக, தமிழ்நாட்டில் சகஜமாகப் பொதுச்சமூகத்துடன் ஊடாடி வருவதைப்போல, கேரளத்தில் திருநங்கையரால் ஊடாடி வரமுடிந்ததில்லை. சேலையைக் கட்டிக்கொண்டு தெருவில் நடப்பதே கூட இயலாத ஒன்றாகத்தான் இருந்தது. இன்றைக்கும் கூட, மிகுந்த ஏளனத்திற்கும், கேலிக்கும் உரியவர்களாகத்தான், திருநங்கையர் அங்கே பார்க்கப்படுகிறார்கள். ‘அரவானி’, ‘திருநங்கை’ போன்ற மரியாதையான சுட்டுக்கள் கூட அண்மைக்காலம் வரைக்கும் அங்கேயில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தற்போது தான் ‘சகயாத்ரிகா’ என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சகயாத்ரிகா என்றால் சகபெண்பயணி.
நிலைமைகள் இப்படியிருக்க, அங்கே, திருநங்கையரின் வாழ்வாதாரத்தைப் பற்றித் தனியே சொல்லவும் வேண்டுமா? மற்ற இடங்களில், குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, தொலுங்கானா, மகாராஷ்டிரா, தில்லி போன்றவற்றில், கடை கேட்டோ (அதாவது கடைகடையாகச் சென்று கைதட்டி யாசித்தோ), பாலியல் தொழிலோ செய்து கூட காலந்தள்ளிவிடமுடியும். ஆனால், கேரளத்தில் அவற்றைக் கூடச் செய்து வாழ முடியாது. தமிழ்நாட்டுத் திருநங்கையர், திருநங்கையராக வாழ்வதற்காகத், தமது பிறந்த வீட்டினைத் துறக்கவேண்டி வருகிறது என்றால், கேரளத்திலோ, தாம் பிறந்த நாட்டையும் துறக்கவேண்டியிருக்கிறது.
தமிழ்ச்சமூகமும் கூட, அத்தனை எளிதாகத் திருநங்கையரை ஏற்றுக்கொண்ட சமூகமெல்லாம் இல்லை. இங்கேயும் திருநங்கையரைப் பற்றிய ஏளனப் பார்வை இன்றைக்கும் கூட இருக்கிறது தான் என்றாலும், ஒப்பீட்டளவில் கேரளத்தை விட மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இதற்குக் காரணம், காலஞ்சென்ற, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரைப் போன்றவர்கள், அரசியல் தளத்தில் எடுத்த முன்னெடுப்புகள் என்றால் மிகையில்லை. கலைஞரே, ‘திருநங்கை’ என்ற அருமையான சொல்லைத் தமிழுக்குக் கொடையளித்தவர். திருநங்கையர் என்ற சொல்லில் வரும் ‘திரு’வுக்கு, திரு.மு.கருணாநிதி என்று எழுதும்பொழுது ‘திரு’வுக்கு என்ன பொருள் கொள்கிறோமோ அதே பொருளைத்தான் கொள்ளவேண்டும். சிறப்பானவர், மேன்மையானவர், மதிப்புமிக்கவர் என்பதே அந்தத் “திரு’வின் பொருள். ஆனால், அதை, ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்பதைக் குறிப்புணர்த்தும் சொல் என்றே பலரும் பிழையாக நினைத்துக் கொள்கிறார்கள். கலைஞரே முதன்முதலாகத், ‘திருநங்கையர் நலவாரியம்’, அமைத்த பெருந்தகையும் கூட.
ஆனால், கலைஞருக்கும் முன்பே, சமூக பண்பாட்டுத் தளத்தில் திருநங்கையரைச் சடங்கு சம்பிரதாயங்களின் நிமித்தம், ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இங்கே இருக்கத்தான் செய்தது. குறிப்பாகக், கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா! இந்தத் திருவிழாவையும், இந்தத் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் ‘மிஸ் கூவாகம்’, அழகிப்போட்டி பற்றிய செய்திகளையும் ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் இடைவிடாமல் பொதுச்சமூகத்திடம் கொண்டு சேர்த்ததன் மூலமாக, காட்சி ஊடகங்கள், மெள்ள மெள்ளமாகத் தமிழ்ச்சமூகத்தில், திருநங்கையர் ஏற்பை உறுதிசெய்தன. பெருமைக்குரிய நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் போன்ற தனிமனிதர்களும், தமது சமூகப் பங்களிப்பின் மூலமாகத் தமிழ்ச்சமூகத்தின் கவனத்தைத் திருநங்கையர்பால் ஈர்த்துக்கொண்டே இருந்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
இப்படி, தனிமனிதர்களின் பங்களிப்பினாலும், சமூக ஊடகங்களின் கவன ஈர்ப்பினாலும், கலைஞரைப் போன்ற மாபெரும் தலைவர்களின் அரசியல் முன்னெடுப்புகளாலும் உறுதிப்படுத்தப்பட்டதே, தமிழ்நாட்டின் பொதுச் சமூகத்தில் இன்றைக்கு உண்டாகிக் கொண்டிருக்கும் ‘திருநங்கையர் ஏற்பு’.
காலந்தாழ்ந்து தான் என்றாலும் கூட, இன்றைக்குக் கொட்டன்குளங்கர சமய விளக்கு பற்றி, காட்சி ஊடகங்கள் வெளியிடும் செய்திகள், காலப்போக்கில், திருநங்கையரைப் பற்றிய கேரளப் பொதுச்சமூகத்தின் பார்வையில் மிக நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்பலாம்.
000
2023 ஆம் ஆண்டின் சமயவிளக்கு திருவிழாவைக் கண்டுகளிப்பது என்று முடிவு செய்த வேளையில் தான், இன்னொன்றையும் கவனித்தோம். அப்போதே எங்களது திட்டம் நிறைவேறுமா? நிறைவேறாதா? என்ற தத்தளிப்பு தொடங்கிவிட்டது. பொதுவாக, மார்ச் மாதம் 24 ஆம் தேதி மாலையிலிருந்து 25 ஆம் தேதி காலை வரைக்கும் சமயவிளக்கு நடைபெறும். மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் கொட்டன்குளங்கர பகவதி திருவிழாவின் கடைசி இரண்டு நாட்களே சமயவிளக்கு நாட்கள். தீயூழாக, அதே மார்ச் 24 ஆம் தேதி நண்பகலிலேயே ‘கொடுங்கோளூர் அஸ்வதி காவு தீண்டல்’, நிகழ்ச்சியும் நடப்பதாக இருந்தது. அதைக் காணவேண்டுமென்றும் நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். காவு தீண்டலை நண்பகலில் கண்டுவிட்டு அதேநாள் மாலையில் நடக்கும் சமயவிளக்கைக் கண்டுகளிக்கலாம் என்றால், கொடுங்கோளூரிலிருந்து கொல்லத்திற்குப் போக ஆறு மணிநேரமாகும் என்றது கூகுள். மிகுந்த அயர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது தான் என்றாலும், எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை. காவு தீண்டலைப் பார்த்துவிட்டு வண்டியைக் கொல்லத்திற்கு விட்டோம். சவற கிராமத்தை நெருங்கும் முன்பே பலத்த போக்குவரத்து நெருக்கடி! சவறையைக் கடந்து கொல்லத்தை அடையவே இரண்டரைமணி நேரமானது. விடுதியை அடைந்து, குளித்து முழுகிப், புத்துணர்வாகி மீண்டும் வந்த வழியே திரும்பவும் பயணித்து நாங்கள் சவறையை அடைந்தபொழுது, மணி நள்ளிரவு பன்னிரண்டாகியிருந்தது.
கொட்டன்குளங்கர பகவதியின் கோவில் தான் சிறியதே தவிர, கோவில் வளாகம் பெரிதாகத் தான் இருந்தது. பூதக்குளம் என்ற குளத்தின் மேற்கரையில், கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது பகவதியின் சன்னதி. அந்தக் கோவிலுக்கு மேற்கூரை கிடையாது.
ஒருகாலத்தில், அந்த இடம் மாடுமேய்ப்பதற்கான இடமாக இருந்ததாம். மாடுகளை மேயவிட்டுவிட்டுக் குளத்தில் முக்குளியிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் கைக்கு ஒரு தேங்காய் கிடைத்ததாம். அந்தத் தேங்காயை எப்படி உரித்துத் தின்பது? என்று அவர்கள் கவலைகொண்ட நேரத்தில் தான், கூர்மையான கல்லொன்று அங்கே நிற்பதைக் கண்டார்களாம். உடனே, தேங்காயை அதன்மீது ஓங்கியடித்தார்களாம். அவ்வளவுதான்! எல்லோரும் வியந்து அஞ்சும்படி அந்தக் கல்லிலிருந்து பொங்கி வழிந்ததாம் செங்குருதி! செய்தியறிந்த பெரியவர்கள் பகவதியை வேண்ட, அவள் அந்தத் சிறுவர்களில் ஒருவன்மீதே இறங்கி, தானே அங்கு சுயம்பாக முளைத்திருப்பதாக அருள்வாக்குச் சொன்னாளாம். அப்புறமென்ன? அவள் இஷ்டப்படி ஊர்கூடி, கூரையற்ற அந்தக் கற்கோவிலைக் கட்டியெழுப்பியது என்று நீள்கிறது இந்தக் கதை.
இன்னொரு கதையோ, சுயம்பாய் நின்ற கல்லுக்கு விளையாட்டுப் போல பூசை செய்துவந்தார்கள் மாடுமேய்க்கும் சில சிறுவர்கள். குருத்தோலைகளைக் கொண்டு பந்தலிட்டுப், பூதக்குளத்திலிருந்து நீரை எடுத்துவந்து பகவதியை முழுக்காட்டும் பொழுதும், மலர்களைச் சேகரித்து மாலையாக்கி அணிவித்து அழகுபார்த்த பொழுதும், தங்களைப் பெண்களைப் போலவே பாவித்துக் கொண்டு, நடக்கவும், பேசவும் செய்தார்கள். பிற்காலத்தில், அந்த இடம் கோவிலாக மாற்றப்பட்ட பொழுதும், அந்தச் சிறுவர்களை நினைவுகூரும் விதமாகப், பெண்களைப் போலவே உடையணிந்து கொண்டு பூசை செய்யத் தொடங்கினார்கள் பூசகர்கள். அதுவே, இன்றைய சமயவிளக்காக வடிவெடுத்திருக்கிறது என்று போகிறது இன்னொரு கதை.
இந்த இரண்டாவது கதையே சமயவிளக்கை விளக்குவதாக இருந்தாலும் கூட, இதில் ஏதோ ஒரு மறைபொருள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், எதற்காகச் சில சிறுவர்கள், காரணகாரியமில்லாமல் தங்களைப் பெண்களாகப் பாவித்துக் கொண்டு செயல்படவேண்டும்? இந்தக் கேள்விக்கு விடைகாணப் புறப்பட்டதால் தான் இந்தக் கட்டுரையே பிறந்தது என்றாலும் மிகையில்லை.
கேரளத்தின் பகவதி கோவில்கள் அனைத்துமே கண்ணகி கோவில்கள் தான் என்பது ஒரு கருத்து. அதை அப்படியே ஏற்றுக் கொண்டோமானால், கொட்டன்குளங்கர பகவதியும் கண்ணகியே என்று ஆகும். சரி, ஊரின் பெயரோ ‘சவற’. குளத்தின் பெயரோ ‘பூதக்குளம்’. அப்புறம் எதனால் அந்த பகவதி மட்டும் கொட்டன்குளங்கர பகவதி என்று அழைக்கப்படுகிறாள்? கொட்டன் என்றால் துருவிய தேங்காயைக் கொண்டு செய்யப்படும் ஒரு படையல் பொருள். மாடுமேய்த்த அந்தச் சிறுவர்கள், ‘கொட்டன்’ செய்துதான் தங்களது பகவதிக்குப் படைத்தார்களாம். அதனால் தான் அவள் கொட்டன்குளங்கர பகவதி என்ற பெயரையே பெற்றாளாம். சரி, விஷயத்திற்கு வருவோம்.
கண்ணகிக்கான முதற்கோவிலைக் கட்டியவன் சேரன் செங்குட்டுவன். இன்றைய, தமிழ்நாடு-கேரள எல்லையில் மேற்குத்தொடர்ச்சி மலையின் மீது இருக்கும் அந்தக் கோவில், ‘மங்கலதேவி கண்ணகிகோவில்’ என்று அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில், ‘மங்கல மடந்தை கோட்டம்’. கணவனை இழந்த, விதவையான, அமங்கலியான கண்ணகி என்னும் பெண்ணைத் தெய்வமாக்கி வணங்க எண்ணிக் கோவில் எடுத்த பொழுது, அவளுக்கு இளங்கோவடிகள் எப்பேர்ப்பட்டபெயரைத் தருகிறார் பாருங்கள்! ‘மங்கலமடந்தை’!! இது தான் தமிழின் பெருமை. இது தான் சிலம்பின் பெருமை. வைதீகமோ, கணவனை இழந்தவளை அவனுடனேயே சிதையில் ஏற்றி உடனடியாகக் கொன்று தீர்த்தது; அல்லது விதவை என்று கூறி மொட்டையடித்து, நார்மடியணிவித்து, மூலையில் தள்ளி மெள்ளமாகக் கொன்றது. ஆனால், தமிழின் முதல் காப்பியமோ, ‘மங்கலமடந்தை’ என்று போற்றிப் பரவியது! அந்த மங்கலமடந்தை கோவிலின் முதல் பூசாரியாக நியமிக்கப்பட்டவள் தான் தேவந்தி என்ற பார்ப்பனப் பெண். இவள், கண்ணகியின் உற்ற தோழியும் கூட. ஆனால், இந்தப் பூசாரிப் பதவியை அவள் எளிதில் பெற்றுவிடவில்லை. சூழ்ச்சிகள் பல செய்துதான் அடைகிறாள். மேலதிகத் தகவல்களுக்கு, எனது ‘கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்?’ நூலை அணுகவும். நிற்க.
திருச்செங்குன்றம், வெள்வேலான் குன்றம் என்றெல்லாம் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் மலையின் மீது கண்ணகிக்கான முதல் கோவிலைக் கட்டிய செங்குட்டுவன், தனது தலைநகரான வஞ்சியிலும் (இன்றைய கொடுங்கோளூர்), தனது ஆளுகைக்கு உட்பட்ட சேரநாடு முழுவதிலும் கூட, பலநூறு கண்ணகி கோவில்களை எடுத்திருப்பான். அங்கேயும் பெண்களைப் பூசாரிகளாக நியமிக்கவும் செய்திருப்பான். அண்மைக்காலம் வரையிலும் கூட, கொடுங்கோளூர் பகவதி கோவிலின் பழைய கண்ணகி கருவறையாகக் கருதப்படும் ‘இரகசிய அறைக்கு’ப் பெண்களே பூசை செய்யும் உரிமையைப் பெற்றிருந்தார்கள் என்று சொல்கிறார்கள். இன்றைக்கும் கூட அதே கோவிலின் தென்மேற்கு மூலையில், கொட்டன்குளங்கர பகவதியைப் போலவே, கூரையில்லாத கருவறையில் குடிகொண்டிருக்கும் வசூரிமாலா பகவதிக்குப் ‘பிலாப்பள்ளி தேவர் வட்டம்’ எனும் நாயர் தறவாட்டைச் சேர்ந்த மூத்த அம்மையாரே பூசை செய்யும் உரிமையைப் பெற்றவராக இருக்கிறார்.
இவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது, ஆதியில், பெண்களே கொட்டன்குளங்கர பகவதிக்கும் பூசகர்களாக இருந்திருக்கலாம், அல்லது, பெண்பூசகர்களின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட ஆண்பூசகர்கள், பழைய சம்பிரதாயத்தை மதித்து ஒழுகும் முகமாக, தாமே பெண்வேடம் இட்டுக் கொண்டு பூசை செய்துமிருக்கலாம். அந்த வழக்கமே, இன்றைக்குச் சமயவிளக்காக வளர்ந்து நிற்கிறது என்று சொல்லலாம்.
பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு தம்மைத் ‘திருநங்கை’ என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்களால் பெண் உடைகளை அணிந்து கொண்டு பொதுச்சமூகத்தில் எளிதாக வலம்வர முடியும். ஆனால், தங்களைத் திருநங்கையராக அறிவித்துக் கொள்ளாமல் மறைந்து வாழ்பவர்களால் இயலுமா? கண்டிப்பாக முடியாது. கேரளத்திலோ, மேற்சொன்ன இரண்டு பிரிவினராலுமே பெண் உடைகளை அணிந்து கொண்டு சுலபமாகப் பொதுவெளியில் நடமாடிவிட முடியாது. இதற்குக் கேரளப் பொதுச் சமூகத்தின் கட்டுப்பெட்டித்தனம் ஒரு காரணம் என்றால், அதன் கட்டுத் திட்டங்களுக்கு அஞ்சித் தம்மை ஒளித்து வாழும் திருநங்கையர் இன்னொரு காரணம். தங்களது இருப்பைக்கூட அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளாததால், அவர்களைப் பற்றிய அக்கறைகளும், கரிசனங்களும், பொதுச்சமூகத்தின் பேசு பொருளாக மாறாமலேயே போயின. மனித உரிமைகளுக்காகப் போராடும் ஜனநாயக சக்திகளால் கூட, திருநர் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாத நிலைதான் இருந்தது. ‘அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?’ என்று சும்மாவா கேட்டார் புரட்சிக்கவிஞர்?
இந்த இரும்புச் சுவற்றில் தான் இன்றைக்குக் கொட்டன்குளங்கர பகவதியின் சமயவிளக்கு நிகழ்வு ஒரு உடைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளத்தில், தம்மை வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட, அறிவித்துக்கொள்ளாத திருநர்கள் அனைவருமே மிக நேர்த்தியாக, தங்களைப் பெண்போல அலங்கரித்துக் கொண்டு சமயவிளக்கில் பங்கேற்கிறார்கள். பொதுச்சமூகமும் ஊடகங்களும், ‘ஆண்கள் பெண் வேடமிட்டு விளக்கெடுக்கும் சடங்கு இது’, என்று சொல்லிக் கொண்டாலும், பங்கேற்பவர்களில் பலரும் வானவில் கொடியிலிருக்கும் ஏதோவொரு வண்ணத்தைக் கொண்டவர்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள். கேரளத்தின் திருநர்கள் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களான, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் திருநர்களும் கலந்து கொள்ளும் தேசியத் திருவிழாவாகவும் வளர்ந்திருக்கிறது சமயவிளக்கு என்றால் மிகையில்லை. சமயவிளக்கின் மறுநாள் காலையில், கொல்லத்தின் பிரபல சைவ உணவகம் ஒன்றில் காலைச் சிற்றுண்டியை அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கே ஒரு திருநரும் வந்தமர்ந்தார். ஐம்பதை நெருங்கும் வயது. நிறைந்த அணிமணிகளையும், ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடனான லெகங்காவையும் அணிந்திருந்தார். முகத்தில் அந்த அளவிற்கு நேர்த்தியாகப் பெண் போல ஒப்பனையிட்டுக் கொள்ளவேண்டும் என்றால், குறைந்தது இரண்டுமணி நேரமாவதும் ஆகும். ஆனாலும், அதை மிகவும் இரசித்துச் செய்து கொண்டு வந்திருந்தார். வருடத்தில் ஒரேயொருமுறை பெண் உடையில், பெண்ணைப் போன்ற ஒப்பனையில் வலம்வரும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு அவரிடமிருந்தது. ஏனென்றால், அவர் தம்மைத் திருநர் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளாதவர். யார் கண்டார்? அவரொரு கண்டிப்பான குடும்பத்தலைவனாகக் கூட இருக்கலாம்! அல்லது ஒரு அலுவலகத்தின் கறாரான தலைமை அதிகாரியாகக் கூட இருக்கலாம்!! ஆர்வம் தாளாமல் பேச்சுக் கொடுத்தோம். மலையாளி என்பதை அறிந்து கொண்டோம். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. சமயவிளக்கு போன்ற நிகழ்வுகளின் சாதனை எது என்றால்? இவற்றைப் போன்றவையாகத் தானே இருக்கமுடியும்?
000
நாங்கள் கோவிலுக்குள் நுழையும் பொழுது, அட்டகாசமான நாதஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ‘நகுமோகு கனலேநீ நாஜாலி தெலிசி’, முடிந்து சங்கராபரணம் திரைப்படத்தின், ‘சங்கரா நாத சரீராபரா’, ஜனரஞ்சகமாகத் தொடங்கியது. அப்படிப்பட்ட அபாரமான வாசிப்பை இதுவரை நான் கேட்டதேயில்லை. இறுதியாக வாசிக்கப்பட்ட ‘பாக்யத லக்ஷ்மீ பாரம்மா’, வெல்லாம் மிகவும் உயர்ந்த ரகமாக இருந்தது.
‘பகவதியின் திடம்பை’, வெண்புள்ளிகள் நிறைந்த வயதான யானையொன்றின் மீது ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுவந்தார்கள். ஊர்வலப் பாதையான, குஞ்சலமூடு எனப்படும் கோவில் தலைவாயிலிலிருந்து ஆராட்டு கடவுவரைக்கும் சமயவிளக்கை ஏந்தி வரிசையில் நின்றிருந்தார்கள் பக்தர்கள். அவர்களை வளைத்து வளைத்துப் படம் எடுத்தார்கள் ஊடகவியலாளர்களும், இரசிகமகா ஜனங்களும். சமயவிளக்கை ஏந்தியிருந்த பெண்வேடமிட்ட ஆண்களும் கொஞ்சம் கூடச் சலித்துக்கொள்ளாமல், பெருமிதமாகப் ‘போஸ்’ கொடுத்தார்கள். ஊடக வெளிச்சத்தை அடைவதற்கான உள்ளார்ந்த போட்டி அவர்களிடையே நிலவுவதை அவதானிக்க முடிந்தது. கதகளி நடனத்தின் பெண் பாத்திரத்தைப் போல அலங்கரித்து வந்திருந்த ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், அடுத்தநாள் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டதென்னவோ, ‘பெண்ணோ?’ என்று மயங்கும்படியான கவர்ச்சியான தோற்றம் கொண்ட சிலர் மட்டுந்தான்!
குளக்கரையின் கிழக்கேயுள்ள மணல் வெளியில், மிகவும் அழகான ஒரு குருத்தோலைப் பந்தலைச் சோடித்து வைத்திருந்தார்கள். முற்காலத்தில், மாடுமேய்க்கும் சிறுவர்கள், பகவதியின் சுயம்பு மூர்த்திக்குக் குருத்தோலைப் பந்தலிட்டு வழிபாடு செய்தார்கள் என்ற செய்தியைச் சொல்லியிருந்தேன் அல்லவா? அதன் மீள் நிகழ்த்தல் தான் ‘குருத்தோலப் பந்தல்’ போடுவதாக வருடாவருடம் இங்கே நடைபெறுகிறது. அந்தக் குருத்தோலைப் பந்தல் முன்பாகவும் வரிசையாகச் சமயவிளக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே இருந்த சிறிய மேடையில், ஒரு கர்னாடக சங்கீதப் பாடகர் அற்புதமாகக் கச்சேரி செய்துகொண்டிருந்தார். குரலைமட்டும் கேட்டால், ‘ஜேசுதாஸோ?’ என்று மயங்கும்படியிருந்தது. நடுநிசி ஒன்றரை மணியளவில் பாடப்படும் ‘சரச சாம தானபேத தண்ட சதுர’ வை எல்லாம், ஒரு இருநூறு பேர் ஆர்வமாக அமர்ந்து இரசித்துக் கேட்பார்கள் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை! குளத்தின் படிக்கட்டுகள் ஒன்றில், தனது தாயின் மடிமீது தலை வைத்து அரைக்கண்களை மூடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் ஒரு சிறுவன். சற்று முன்பு வரை, கோவில் வளாகத்தில், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்த தங்கை சூழ்ந்துவர, மோகினியாட்டக் கலைஞர் வேடத்தில் சமயவிளக்கினை ஏந்திப் பெருமிதமாக வலம் வந்து கொண்டிருந்தவன் தான் அவன். அசப்பில் பெண் குழந்தை போலவேயிருந்தான். இந்தக் குழந்தை நாளைக்கு என்னவாக மலர்வானோ? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
கொட்டன்குளங்கர பகவதிக்குப் பகல் வேளையில், சிறுவர்களைக் கொண்டு நடத்தப்படும் சமயவிளக்குக்குக் ‘காக்கவிளக்கு’ என்று பெயர். முன்னமே பார்த்தோமே, மாடுமேய்க்கும் சிறுவர்கள் பெண் போல பாவித்துக் கொண்டு பகவதிக்குப் பூசை செய்தார்கள் என்று? அதன் அசலான மீள் நிகழ்த்தல் தான் இந்தக் ‘காக்க விளக்கு’. கட்டுரையை முடிக்கும் இந்த நேரத்திலும், ‘எதற்காக அந்தச் சிறுவர்கள் தம்மைப் பெண்ணாகப் பாவித்துக் கொண்டு பகவதிக்குப் பூசை செய்தார்கள்?, எதற்காக அதை இந்தச் சமூகம் மீள் நிகழ்த்திப் பார்த்துக் கொள்கிறது?’, என்பது போன்ற கேள்விகள், விடாமல் என்னைத் துரத்திக் கொண்டே தான் இருக்கின்றன.
வாணியாற்றில் ஒரு வண்ணார் துவைத்துக் கொண்டிருக்கிறார். அவரது மகளான ஒரு சிறுமி குளித்துக் கும்மாளமிட்டுத் தண்ணீரைக் கலக்கு கலக்கென்று கலக்குகிறாள். தந்தையாரின் எந்த மிரட்டலையும் அவள் கண்டுகொள்வதில்லை. கோபமடைந்த தந்தையோ, துடுக்கான தனது மகளைப் பிடித்துச் சால் பானையைப் போட்டு மூடிவிடுகிறார். சும்மா மிரட்டுவதற்காகத் தான் அப்படிச் செய்கிறார். ஆனால், வேலை முசுவில் மறந்துவிடுகிறார். நெடுநேரம் கழித்துத்தான் நினைவிற்கு வருகிறது. ‘ஐயோ!’ என்ற பதற்றத்துடன் சாலைத் தூக்குகிறார். ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. சிறுமி மூச்சுத் திணறி இறந்துவிட்டாள்! இதைப் பின்னாட்களில் இப்படி வர்ணிக்கிறார்கள், ‘சாலைத் திறந்து பார்த்த பொழுது உள்ளே சிறுமியைக் காணவில்லை. ஒரு மாரியம்மன் சிலைதான் இருந்தது. அந்தச் சிலையே ‘வண்ணார மாரியம்மன்’ என்று வணங்கப்பட்டுப் பின்னர் ‘பண்ணாரி மாரியம்மன் ஆனது’
வேற்று ஜாதிக்காரனைக் காதலித்ததால், தனது குடும்பத்தாராலேயே ஆணவக் கொலை செய்யப்பட்டு, பின்னர் அதே குடும்பத்தாராலேயே தெய்வமாக வணங்கப்படும் எத்தனையோ பெண்களைப் பற்றிய கதைகளையும் கொண்டதுதான் நமது பண்பாடு.
ஒருவேளை, பெண்தன்மை மிகுந்திருந்ததால், அந்தச் சிறுவனையோ, சிறுவர்களையோ ஆணவக்கொலை செய்துவிட்டுப், பின்னாட்களில் அவர்களின் நினைவாகக் கோவில் எழுப்பி, அதிலே, சமயவிளக்கு என்னும் சடங்கையும் கூட இந்தச் சமூகம் உண்டாக்கியிருக்கலாம்.
ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். தம்மை அடியோடு அழித்து நிர்மாணிக்கப்பட்ட கற்கோட்டைகளைக் கைப்பற்றி மீண்டும் அடவியாக்கிக் கொள்வதற்காக, நெடிய கோடைகளையும், கொடிய வாடைகளையும் கடந்து காத்துக்கொண்டேதான் இருக்கின்றன ஆலம் விதைகளும், அரசம் விதைகளும். காலம் மட்டும் கனிந்துவிட்டால் போதும்.
000

சத்தியப்பெருமாள் பாலுசாமி
கிளிக்கன்னி சிறுகதை தொகுப்பு, பஞ்சுர்ளி, கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்?, கல்லே பரவினல்லது ஆகிய கட்டுரைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன.
அருமையான எழுத்துநடை.