தூவானம்

———————-

மழைபெய்து ஓய்ந்திருந்தது

கருத்தமேகங்கள் செம்மையாய் ஓடிக்கொண்டிருந்தன ஓடையில்

,

மேய்ச்சலுக்கு மேலேறிய ஆடுகள் குன்றினின்று கீழிறங்கிக்கொண்டிருந்தன

,

வாய்க்கால் நீரில் உடல்நனைய மகிழ்வாய்

மண்வெட்டி அலசினான் சம்சாரி

,

பள்ளிக்கூடத்தினின்று வீடு திரும்பும் பிள்ளைக்காடுகள் மரக்கிளை பற்றி உலுக்க

மறுமழை பொழிந்தது

,

பேருந்து சன்னலோரம்

அமர்ந்த  யுவனொருவன் மீது

 சாரல் தெறிக்க

 தன் காதலியின் அலைபேசி புகைப்படம்கண்டு பிராந்தனைப்போல புன்னகைத்து அவள் எண்ணுக்கு அழைப்புவிடுக்கத்துவங்கினான்

,

மீண்டும் தூறத்துவங்கிற்று.

00

மலைக் கோவில்

————————————–

மாநகரத்தில் இருந்து

மாநகரத்திற்கு

,

கிராமங்களின் வழியே

விரைகிறது ரயில்

,

ஓடும் நதியில்

முங்குநீச்சலிட்டு

,

உழவுக்காட்டில்

உலாவி

,

ஆடோட்டிகளோடு

கதைபேசியபடியே

,

மலைக்கோவிலுக்கு

போய்க்கொண்டிருக்கிறது

,

கான்க்ரீட் காட்டில்

உழன்று திரியும்

நகரத்தானிகிய

கிராமத்தானின் மனசு

00

இரவுக்கொடை

——————————-

மறுகால் பாயும்

கண்மாயில்

பானைப்பறி

,

அறுவடை

களத்தில்

இராப்படுக்கை

,

பாலணைய

நிலவொளியில்

பெரியாம்பளையின்

வெள்ளைக்காரன்

காலத்து

களவுக்கதை

,

துவங்கிவிட்டது

எங்கள்

இரவுக்கொடை

00

அரண்மனைக்குத் திரும்பும்

 சித்தார்த்தன்

——————————————–

“மனைவியை

குழந்தையை

மறந்து பிரிந்தவனை

வாழ்த்துவதாகாதடி….. !

தங்கம்

மன்னிக்கக்கூடாதடி! “

,

எங்கோ இழவு வீட்டில் ஒலிக்கும்

சி. எஸ். ஜெயராமனின் குரல்

பளார்…….

பளாரென்று….

செவியில் அறைகிறது

,

தன் யசோதரை மற்றும் இராகுலனின் பிரிவுத்துயர் கொந்தளிக்க

,

அவசர அவசரமாக

தன் அரண்மனைக்கு திரும்புகிறான்

நவீன சித்தார்த்தன்

,

 பார் வசதி கொண்ட

 மதுபானக்கடை எண்:

 2343 லிருந்து

1848 ஐ துறந்து.

00

தும்பிகளின் இசைக்குறிப்பு

இசைக் கலைஞனின்

கரங்களைப்போல

மேலும் கீழும்

சிறகடிக்கும் தும்பிகள்

,

காற்றில்

எழுதுகின்றன

கார்காலக்குறிப்புகளை

00

தீபக்கோலம்

அதிகாலை வாசலில்

அகல்விளக்கு

கோலமிடுகிறாள்

ஒருத்தி

பிறகென்ன?

சூரியன் வந்து இனி

சுடரேற்றுவான்

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *