அனிச்சையாக கொசு அடிக்கும்
வலது கை
வெளியேறும் புத்தன்
00
பொட்டல உறை
மட்டுமே புதிது
உள்ளேயிருப்பது
இன்னும் ஊசிப்போன
கட்டுச்சோறு தான்
00
இரும்புக் கோட்டை தான்
ஆனால்
உள்ளே நுழைவதும்
உடைப்பதும்
இவ்வளவு எளிதா என்ன?
00
எதிரிகளை எளிதாக
நம்பி விடலாம்
நம்மோடு எப்போதும் இருப்பவர்களிடம் தான்
கூடுதல் கவனம் தேவை
00
சுத்தம் செய்யும் வேலை நடைபெறுகிறது
உங்களுக்கு சற்று அவசரம்
கதவைத் திறந்து உள்ளே நுழைகிறீர்கள்
கடுமையான முகத்திடம்
புன்னகையுடன் அனுமதி கேட்கிறீர்கள்
அனுமதியுடன்
கூடுதலாக ஒரு புன்னகையையும் பரிசாகப் பெறுகிறீர்கள்
ஒரு புன்னகை மட்டுமே போதும்
இந்த நாளை வெளிச்சமாக்குவதற்கு
இவ்வுலகை வெல்வதற்கு
00

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

