1.
ஜால விந்தை தரும்
கருசூல் கொள் மேகமெனக்
கனத்து நகரும் இரவிது
,
ஈரம் கசியும் பனியில்
நனையும் தொட்டாற்
சிணுங்கி மலரைப் போல
தொடுகையில் மலர்கிறாய்
,
மதர்த்த மலைமீது சகல பரிவாரங்களோடிறங்கும்
மாமழையாய் உன்மீது படரும்
விளையாட்டுப் பிள்ளை நான்
,
திடீர் நீர்ப்பெருக்கால்
மலையிறங்கும் நீர்ப்படலமெனத்
திறந்துகொள்ளும் மகிழ்வின்
வாயில்களை ஒருபோதும்
மூட முடிவதில்லை
,
கபால ஓடு தாண்டி
முத்துக்களாய்த் துளிர்க்கும்
வியர்வைத் துளிகளை
உலர வைப்பதற்குள்
உலர்ந்த நாவறண்டு
என்னையே விழுங்குகிறாய்.
,
தனிமையின் மோகத்தில்
நான் கனவு காண்கிறேன்
,
சுருங்காத படுக்கை விரிப்புகள்
வேதனையை மேலும் அதிகப்படுத்துகின்றன
,
பாலைவனக் கானலைப் போல
தூர தெரிந்து அண்மையில் அகல்கிறாய் விழைவின்
தீவிரத்தை வீர்யமாக்கி
,
உன்னை ஈரமாக்கும்
சிறு தூறல் நான்
உன்னை முழுதாய்
நனைய வைக்கும்
பெருமழையும் நான்
,
உன் வாசத்தை அறியும்படிக்கு
அருகில் வா
உன் வெப்பத்தை அறியும்படிக்கு அருகே வா
உன் உஷ்ணத்தை உணரும்படிக்கு நெருங்கி வா
உன் வியர்வை மணத்தை வியக்கும்படிக்கு
அருகில் வா
,
பறிமாறுதலின் அற்புதங்களை
நிகழ்த்தவல்ல விளையாட்டைச் சொல்லிக்கொடு
,
சிறிது சிறிதாக
மெல்ல மெல்ல
அணு அணுவாக
மூலக்கூறு மூலக்கூறாக
பகுதி பகுதியாக
கொஞ்சம் கொஞ்சமாக
முத்தத்தின் சாறெடுத்துப்
பகிர்ந்து கொள்
,
இழத்தலில் நிறைதலை
அடைக்கலத்துள் அடங்குதலை
சர்வத்துள்ளும் சரணடைதலைச்
சாத்தியமாக்கு .
2.
சிறுத்த இடைமேல்
பெருத்த கொங்கைகள் அதிர
சிறுத்த இடைகீழ்
விரித்த இடுப்பெலும்பு நகர
பருத்த தொடைகளுரசி
கொழுத்த பிட்டங்களாட நடக்கையில்
கருத்த கருவிழி பிரகாசத்தில்
மாயபிம்பமாய் உருக்கொள்ளும்
நின் சிங்காரச் சீதளம்.
,
தொடைகளிறங்கி நெளியும்
பூனை ரோமங்கள்
விரல்கள் தொடங்குமிடங்களில் முடிந்து போகின்றன
உனை நெருங்கா நிராசைகளாய்
,
உனை அடைய நினைக்கும்
பெரும் பிரயாசைகளனைத்தும்
அன்றடங்கிய வீழ்படிவென
மூளைத் திரவத்தில் தேங்கிக் கிடக்கின்றன
,
செம்பாத விரல் நுனிகளை
ஆயிரமாயிரம் வருடங்களாய்
வருடக் காத்திருக்கும்
அதரங்களில்
விடம் தரித்துப் போகிறாய் மாயப்புன்னகையால்.
,
உள்ளம் பாத ரேகைகளில் பயணிக்கின்ற என் உதட்டின் முத்தங்களால் சிலிர்ப்படையும்
முகவடிவழகைக் காணாதபடிக்கு
செம்பாத இளம் சூட்டில் வேகிறேன் .
,
படர்ந்து கிளரும்
இளமுலையுண்ணாத
இவ்வாயிருந்தென் பயன்?
,
பானை வாய்ப்பகுதியிலிருந்து
இருமருங்குமிறங்கும் வழுவழுத்த
கழுத்துப் பகுதிகளில் பதிக்காத
பற்களிருந்தென் பயன் ?
,
தடந்தோள் நெடிதுயர்
வடிவுற்ற கோலமே !
செந்தூரமே!
,
பத்ம மேடிறங்கி
இருபெரும்பாறை
பிளவினிடை
துருத்தி நிற்கும்
அருமுகையை
வருடா
விரல்களிருந்தென் பயன்?
,
உறுமும் பன்றியின் ஒலியென
கதறும் காமம்
யாமத்தின் ஓசையில்
முனகும் காமம்
உன் கூந்தல் வழி
ஏகும்பொழுதில் மூச்செறிகிறதே!
,
கட்டையாய்ப் பின்னிக் கிடந்து
கரும்பாம்பாய் நீண்டு
பின்புற மேடுகளில் மாறி மாறி
மேய்வது
உன் சடையல்ல திலகமே
ஆசை ததும்ப விழிவழியே நீண்ட
எனதீராக் காமமே!
காமதேனே!
,
உலர் வெடிகனியெனக் காத்திருக்கும்
காமத்தளம் வெடிக்கையில் சிதறும்
கன்னிமைத்திரவமதில் நீந்தி விளையாடுகின்றன நம்
சேராமையின் விழைவுகள்
,
மேலதர விளிம்பெங்கும் துழாவும்
நாவடிச் செதில்களின்
ஈரத்தால் சிலிர்த்தெழும் உரோமங்கள்
காமத்தின் முகவரியைத் தெரிவிக்கின்றன
,
நாவின் சுவையரும்புகள்
ஒன்றையொன்று சுவைக்கும்
ஒப்பிலா நிகழ்கணங்களில்
முயக்கத்தின் ரீங்காரம்.
,
மூடிய இமைகளில்
மூடாத இமைகளால் வருடுவதை
இரசித்திருந்த வேளைகளில்
வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள்
தங்கள் இமைகளைத் திறந்து மூடின .
,
உஷ்ணமுறும் மூச்சின்
மேல் கீழ்
தாழ் உச்ச ஸ்தாயிகளில்
அலைவுறும் மோக பகிர்தலில்
மூழ்கிக் கிடப்போம் வா!
,
3.
நீயற்ற இந்த இரவு
தனிமையுடைத்து
,
நீயுள்ள இந்த இரவு
இனிமையுடைத்து
,
கைகளைக் கோர்த்துக்கொள்
காமமும் காமமும்
கோர்த்துக் கொள்வதைப் போல
,
விரல் சதைகள் அழுந்துமாறு அன்று
விரலெலும்புகள் ஒடியுமாறு கோர்த்துக்கொள்
,
மிருது தோலின்
வெம்மையடங்கிக்
குளிரெழும்பும் பொழுதெங்கிலும்
உள்ளும் புறமுமாய்க் கலந்தொழுகுவோம்
,
இந்த இரவைப் பாவமென
இந்தக் காமத்தைப் பாவமென
இந்தக் கூடலைப் பிறழ்வெனச்
சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்
,
காலப்பதுமையின் விசித்திரங்களில்
முதுமையொரு கனி
அக்கனியை இருவரும்
புசிப்போம் சுருங்கி மடிப்புற்ற தோலுடனும் என்றுமே
மாறாக் காமத்துடனும்
,
அப்போதும் நிகழட்டும்
சிலிர்ப்பூட்டும்
அதி அற்புத கணங்கள்.
000
தாமரைபாதி (பெ.அரவிந்தன் )
இதுவரை வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள்
தபுதாராவின் புன்னகை (2019)
உவர்மணல் சிறுநெருஞ்சி(2021)
காசினிக்காடு(2023)
இங்குலிகம் (2024)
தெறுகலம் (2024)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த நான் தற்போது சென்னையில் வசிக்கிறேன் .