-தயாஜி

அழுவதற்கே ஆசைப்படுகிறேன்

கண்ணீரில் ஏதோவொன்று

இருந்திடவேச் செய்கிறது

சிலவற்றை நினைக்க

இனித்திடவும் செய்கிறது

,

ஏதோ ஒன்றை

வெறித்துப்பார்த்து அழட்டுமா

ஏதுமில்லாததை

நினைத்துக்கொண்டே அழட்டுமா

,

கண்களில் வழியும்

நீர்மட்டுமா அழுகை

கண்களுக்கேத் தெரியாமல்

வலிப்பதுதானே அழுகை

அழுதுவிட்ட பொழுதில்

பாரம் குறைந்து லேசாகிறேன்

இத்தனைப் பாரத்தை எங்குதான்

பதுக்கியிருந்தேன்

,

மூச்சு வாங்கிக்கொண்டு அழுகிறேன்

மூச்சு விடுவதற்காகவாவது அழ வேண்டாமா

அழுத கண்ணில் மங்கலாய்த் தெரியும்

உருவங்களின்

உள்ளத்தை எப்படி தெளிவாகக் காண்கிறேன்

சின்ன வயதின் பிடிவாத அழுகை

சிதைத்துப்போன வாழ்விற்கான அழுகை

,

என அழுவதற்கான

கண்ணீர்த்துளிகளின்

அட்சயப்பாத்திரம் எங்குதான் மறைந்திருக்கிறதோ

எப்போது கலங்கினாலும்

கண்ணீரை வழியவிடுகின்றது

,

அழுவது ஒன்றும்

அற்பச்செயல் அல்ல

அது ஆன்மாவைச்

சுத்தம் செய்யும் ஆசீர்வாதம்

மனசை லேசாக்கும் மார்க்கம்..

00

எழுத்தாளர் தயாஜி.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *