1

அந்த ஜோடிப் பறவைகள்

ஒன்றோடு ஒன்று உரச அமர்ந்து

பேசிக்கொள்ளும் மொழி

புரியவில்லை

மும்மொழிக் கொள்கை குறித்துகூட

இருக்கலாம்

யாருக்குத் தெரியும்?

நாமறிந்தது

ஒன்று அல்லது ஒண்ணரை

அன்றி

இரண்டுதானே.

2

கடைசியாகப் பார்த்த போது

அவள் கண்கள்

அவன் மீது மொய்த்திருந்தது

அதற்குப் பிறகு

அவன் கண்களைக்

காணவில்லை.

கண்கட்டி வித்தை மாதிரியும்

தெரியவில்லை

அங்கே

ஒரு கண் வைத்துக்கொள்

என்கிறார்களே….

அதுதானா இது?

அப்படிப் பார்த்தாலும்

இன்னொரு கண் எங்கே?

அதனை

அவன்கண் விடல்.

3

மிதமிஞ்சிய

அங்கமொழியுடன்

மரபின் பெருமை பற்றி

பெரியவர்

உருட்டி உருட்டிப் பேசுவார்

பேரனின் எடக்குமடக்கு

கேள்வியில் சிக்கிவிட்டால்

உருட்டுவார் உருட்டுவார்

உருட்டிக்கொண்டேயிருப்பார்

தலைமுறை இடைவெளி

சலங்கை கட்டி ஆடும்

தருணம் அது

எழுதும் தாளையே கிழிக்கும்

புதிய தலைமுறையின்

புத்திக் கூர் மை

என்றும் சொல்வார்கள்.

4

அடிக்கல்லே இல்லாமல்

கோபுரமாய்

விரிந்த வானத்தை

காலடித் தார்ப்பாயாக

ஒடிந்த குச்சியை

மந்திரக் கோலாக

ஓடாத சக்கரத்தை

உந்துவிசையாக

காணாத காட்சியை

கண்ணுக்குள் நிற்பதாக

கடைந்தெடுத்த பொய்யை

கலையின் உச்சமாக

காட்டுகிறார்கள்

இன்றைய

ஆகச் சிறந்த கேளிக்கைகளில்

சமூக ஊடகக் கதையாடல்களும்

அடங்கும்

டங்கும்

ங்கும்

கும்

ம்.

5

நேற்று போட்ட கோட்டை

இன்று

யாரோ சதுரமாக்கியிருக்கிறார்கள்

இன்றைய சதுரத்தை

நாளை

யாரோ வட்டமாக்குவார்கள்

நாளைய வட்டத்தை

நாளை மறுநாள்

யாரோ முக்கோணமாக்கலாம்

அதற்கு அடுத்த நாள்

அந்த முக்கோணத்தை

யாரோ நேர்க்கோடாக விரிக்கலாம்

மீண்டும் சதுரமாக்க

யாரோ வரலாம்

இதே வரிசை

தொடரலாம்

புதிய வடிவம்

யார் தருவார்?

அது

நமது கவலையா

என்ன..?

சோளப் பொறிக்கு

புதிய ருசித் தூள் வாங்கு

கலந்து கொறி

தெறி.


சுகதேவ் – மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *