ஆயாசப் பொருமல்.
வெக்கை தாழாதபொழுதில்
தூக்கி வந்த நேசத்தை
மூட்டைகளாக்கி பரணியிலிட்டது
நினைவுக்கு வரும்.
அவிழ்த்துப் பார்க்க
ஆசைதான்.
சொல்ப் பேச்சு
கேளாத
சின்னவன் முண்டியடித்து
வெளிவந்து தொலைத்தால்
ஊருக்குப் போகவேண்டியதாகிவிடுமென்ற
பயத்தில்
வெறித்துப் பார்க்க வேண்டியதாகிறது
எப்பொழுதும்.
,
பாசத்தால்
தவிர்க்க முடியாமல்
பாரமாக
தலையில்
ஏறிவிட்ட
தீர்க்கப்படாத
கடனுக்கு
இத்தனைப் பாடுகளாவென
வியர்த்து வழிந்த
இயலாமையின்
கடமைகளை
துணிகளால்
துடைத்ததில்
கரிப்பு வாடை
கண்ணீரை
வரவழைக்கிறது
சுயாதீனக் கேவலாக
ஆயாசம் கூட்டி.
***
வெடித்ததன் வேதனை.
கனன்று
கொண்டே இருந்த
நெருப்பு
வெடித்த பொழுது
சிதறிய குழம்பு
பாறையாகிவிட்டது
துளிர்க்க முடியாத
உறவாக.
***
கள்வனைக் காணாத கண்ணாமூச்சி.
சேகரித்தப் பகலை
சேர்த்து வைத்து
இந்த
அந்தியால்தான்
கட்டினேன்
மூட்டையாக.
சூழ்ந்த
இரவிற்குள்
சோர்வாகாமல்
தேடிக்
கலைத்தோய்ந்து
கண் விழித்தபோது
அவிழ்த்துக் கிடக்கிறது
பகல்
மீண்டும்
அள்ளச்சொல்லி.
***