அருகாமையின் பறத்தல்.

உன்

அருகாமை இருப்பின்

பெரும்  மகிழ்வில்

உதிர்கிறது

நட்சத்திரங்கள்

பூக்காடென

வானம் தொடும்

தூரத்தில்.

,

விட்டகன்ற

வேளையில்

ஏதோவொன்று

இழுத்து விட்டது.

பூமியில்

இருப்பாதாகவொரு

பாதகத்தை

அன்றாடங்கள்

யாவையுமே

அலுப்புகளாக்கி.

,

இனியொரு பொழுதும்

விடுவதாகவும்

இல்லை.

விட்டகலுவதாகவும்

இல்லை.

இப்பித்தின்

பெருங்காதலை

யாதொரு

பேரிழப்பின்

பிரளயத்திலும்.

***

மனக் கல்லின் பேதமை.

வெகு தூரம்

வந்த பிறகும்

உமிழப்பட்ட எச்சில்

காயாமல்

வீச்சமடித்தது

நெடுந் துயராக

சொற்களுக்கும்

மணம்

உண்டெனச் சொல்லியவாறு.

,

மக்க

வைத்த

காலம்

வினோதமாயிரம்

நிகழ்த்தியதால்

விரோதங்கள்

யாவும்

உதிர்ந்து போனது

மனதிடம்

மாட்டவிடாமல்.

,

சுழற்சியின்

வேகத்தில்

யாவுமே

புறத்தில்

வேறொரு

வடிவங்களெடுத்த

வேளையில்

அவனை

அல்லது

அவர்களைக்

கடந்த பொழுது

முகம்

திருப்பிக் கொண்டார்கள்

சிரித்தலின்

வாஞ்சைகளறியாமல்.

***

மதிப்புக் கூட்டப்பட்ட

மன வேலிகள்.

வேர்களில்

பின்னிய

மரங்களைத் தான்

இவர்கள்

வேலிகளிட்டுப்

பிரித்தார்கள்

அற்பக் காரணங்களுக்காக.

,

வாஞ்சைகள் கொண்ட

மரங்கள்

பூத்தது.

வருத்தத்தில்

இலைகளை

உதிர்த்து.

,

மேற்பரப்பில்

வெட்டிச் சாய்த்த

மரங்களுக்கு

இடையில்

பிணக் குவியலும்

கிடந்தது

ஆதி இணைப்பை

அறியாமல்

பொருளாகவே

யாவையும்

பார்த்துப் பழகியதால்.

,

மடிந்த

மண்ணறைக்குள்

இருக்கிறது

மறுக்கவியலாத

உண்மைகள்

சொல்ல முடியாத

துயரமாக

பூமியையும்

சுழ வைத்து.

***

விம்மலாகவொரு விலகல்.

ஆசையின் பொருட்டான

நகர்தலின்

விதி

எதுவாகவும் இருக்கட்டும்.

,

உன்

அருகாமையற்ற

பெறுதல்

யாதொன்றைக்

கொடுத்து சிறந்தாலும்

செயற்கை பூரித்தலைத்தவிர

செய்வது

வேறொன்றுமில்லை

எனக்கு.

,

விட்டகல முடியாத

இத்துயரப் பாடின்

கேவலை

நீ

அறிந்தும்

அனுப்புவதுதன்

பரிவை

நினைத்து

வழியும்

கண்ணீரைத் துடைத்து

கட்டியணைத்துக்கொள்

காணாது போகும்

துடிப்பில்

இதயம்

லயம்

கூடிக் கழிக்க.

***

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *