எங்கு பார்த்தாலும்
பசுமையாய்
பச்ச பசேலென்று
வயல்வெளிகளாக
இருந்த எனது கிராமம்
,
கொஞ்சம் கொஞ்சமாக
வேலி முட்கள் வளர்ந்த
முட்புதர்களாக மாறியது
,
அச்சமயத்தில் தான்
பட்டாசு ஆலைத்
தொழிற்சாலைகள்
மெது மெதுவாக
தலை தூக்கியது
,
அச்சமயம்
மணி பிடிப்பது
மருந்து செலுத்துவது
போன்ற வேலைகளில்
காளிராஜ் அண்ணன்
கெட்டிக்காரன்
,
எப்போதும்
பட்டாசுத் தொழிற்சாலை
வேலைக்குச் செல்ல மாட்டான்
என்றாவது மட்டும் தான்
,
அதனால்
மண் அடிப்பது
மணி பிடிப்பதென்றால்
காளிராஜ் அண்ணனைத் தான்
தேடி வந்து
அழைத்துச் செல்வார்கள்
00
திடீரென்று ஒருநாள்
சென்னையில்
வேலை பார்த்த எனக்கு
தொலைபேசி அழைப்பு வந்தது
அண்ணன் வேலை பார்த்த இடம்
வெடித்து விட்டதென்று
,
பல நாட்களாக
வேலைக்கு செல்லாதவன்
அன்று தான்
சென்றிருக்கிறான்
சென்னையிலிருக்கும் என்னால்
உடனடியாக ஊருக்கு
வர முடியவில்லை
நான் வருவதற்குள்ளாகவே
அண்ணனை
எரித்து விட்டார்கள்
,
தூக்கி எறியப்பட்டு
உடுத்தியிருந்த
கைலி சட்டையெல்லாம்
தீக்கிரையாகி
தோலுரிக்கப்பட்டு
கரேரென்று கிடந்ததாகவும்
,
மூன்று பேர்களில்
அண்ணனுக்கு மட்டும் தான்
அதிக காயமென்று
மறுநாள்
அம்மா சொல்லித் தான் தெரியும்
00
அண்ணனின்
கடைசி முகம்
காணாத நான்
கடைசியாய் அவன்
சிரித்த சிரிப்பை மட்டுமே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
,
வீட்டிலிருக்கும் புகைப்படத்தில்…
***
வறண்ட நிலப்பரப்பாக
கண்மாய் மாறியதில்
அனைத்து கால்வாய்களும்
மறைந்து போனது
,
செழித்த நிலமோ
பரந்து கிடக்கிறது
அவை
பயிர்களின் விளைச்சலின்றி
வேலி முட்களாகவே
தோற்றம் பெற்றது
,
விவசாயிகள்
இருக்கதான் செய்கிறார்கள்
அவர்களும்
விவசாயம் மறந்து
மற்றொரு தொழிலில்
,
மண் வளம்
நிறைந்து கிடக்கிறது
மழை வெள்ளமோ
எட்டிப் பார்ப்பதில்லை
,
அப்போது
சிலுசிலு வென்று
வீசும் காற்றில்
சலசல வென்ற சத்தத்துடன்
நெற்பயிர்கள்
ஒன்றையொன்று
உரசிக் கொள்ளும்
,
இப்போது
அதன் சத்தமும்
கேட்பதில்லை
,
இவை எல்லாமும்
இன்று
மண்ணுக்குள் புதைந்த
சடலமாக
அமைதியாய்
துயில் கொள்கிறது…
***
ஊரில்
வருடத்திற்கு ஒருமுறையென்று
வைகாசி மாதம்
காளியம்மன் கோவில்
பொங்கல் திருவிழா
சிறப்பாக நடைபெறும்
,
ஊர்ப் பொங்கலுக்கு
வரி வசூலிப்பதில்
முதல் ஆளாக அப்பா
வரி கொடுத்து விடுவார்
,
வரி கொடுப்பவர்களின்
ஒவ்வொரு வீட்டிலும்
மின்குழாய் விளக்குகள்
தவறாமல் கட்டப்படும்
,
வருடா வருடம்
யார் வீட்டில்
மின்குழாய் விளக்குகள்
இல்லையென்றாலும்
எங்கள் வீட்டில்
தவறாமல் இருக்கும்
,
பொங்கல் நாளன்று
கோவில் தீச்சட்டி
எடுத்து வந்து
எங்கள் வீட்டு சாமியை
அழைத்துச் செல்வது
நடைமுறை
,
வெள்ளி செவ்வாயென
சூடம் பத்தி காட்டி
தவறாது சாமி
கும்பிடுவதும்
அப்பாவின் வழக்கம்
,
ஆனால்
இப்போதெல்லாம் அப்பா
வரி கொடுப்பதை
மறந்து விட்டதோடு
மட்டுமல்லாமல்
சாமி பக்கமும்
போவதேயில்லை…
***
அந்தி மாலை
தன் ஒளிக்கற்றைகளை
கொஞ்சம் கொஞ்சமாக
மறைத்துக் கொள்கிறான்
பகலவன்
,
இரை தேடிச் சென்ற
பறவைகள் அனைத்தும்
வீடு திரும்பும் நிமித்தமாக
தன்னுடைய கூட்டிற்கு
திரும்புகிறது
,
மேய்ச்சலுக்கு சென்ற
ஆடு மாடுகள்
கூட்டம் கூட்டமாக
சத்தங்கள் எழுப்பி
தன் கூடாரங்கள்
வந்தடைகின்றன
,
தாயின் வருகையறிந்து
பசியின் வேகத்தில்
கட்டியிருக்கும் கயிற்றை
முன்னிழுத்துக் கொண்டு
ஓடி வரத் தவிக்கிறது
கன்றுக்குட்டி
,
சுறு சுறுப்பாக
தன் வேலையை
செய்து கொண்டிருந்த
எறும்புகள்
சாரை சாரையாய்
ஒரு தொடர்வண்டி போல்
தன் இருப்பிடம்
நோக்கிச் செல்கின்றன
,
பன் பட்டர்
சோன் பப்படி யென்று
ஒலிப்பெருக்கி சத்தத்துடன்
வியாபாரி ஒருவர்
இருசக்கர வாகனத்தில்
தெருக்களில்
விற்பனை செய்கிறார்
,
பட்டாசுத் தொழிற்சாலை
வேலை முடித்து
நான்கு சக்கர வாகனத்தின்
ஒலிப்பெருக்கி சத்தத்துடன்
பேருந்து நிலைய
மைதானத்தில்
வந்து இறங்குகிறார்கள்
,
விவசாயம் மறந்த
எம்மூர் மக்கள்…
***

கண்ணன். க
“தொலைந்து மீண்டவன்” மற்றும் “மௌனத்தின் உரிமைக்குரல்” என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார்.

