எவர் ஒருவர் ஜனாசாவை குளிப்பாட்டும் போது அதன் குறையை மறைக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு 40 மடங்கு பாவங்களை மன்னிக்கிறான். எவர் ஒருவர் ஜனாசாவுக்கு கபன் ஆடை அணிவிக்கிறாரோ அல்லாஹ் சுவனத்தில் அவருக்கு பட்டாடையை அணிவிக்கிறான். எவர் ஒருவர் ஜனாசாவிற்கு குழிதோண்டி அதிலே வைக்கிறாரோ அவருக்கு சுவனத்தின் ஒரு வீட்டை வழங்குகிறான். -அபூ ராஃபி (ரலி) / அல்பானி. |
இரண்டு மூன்று வீடுகள் இணைத்து சாமியானா போடப் பட்டிருந்தது. சாமியானா நிழலுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பாலிமர் இருக்கைகள்.
சாமியானாவின் முன்புறமும் பின்புறமும் இரண்டு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் குவிந்திருந்தன.
ஐஸ்பெட்டியில் சீனி முகமது கிடத்தப்பட்டிருந்தார். வயது 70. ஆறடி உயரம். பழுப்பு நிறம். நெற்றியில் தொழுகை அடையாளம். உள்ளங்கை குவிப்பு போல மூக்கு. மருதாணி ஈஷிய தாடி. ஐவேளை தொழுகையாளி. எட்டு தடவைகள் மெக்கா போய் வந்தவர். நகரின் பணக்காரர்களில் ஒருவர். தனது சொந்த செலவில் தன் உறவினர் வாழும் பகுதிக்கு மஸ்ஜித் கட்டிக் கொடுத்தவர். ஜக்காத், சதகா, ஹதியா என எல்லோருக்கும் வாரி வழங்கியவர். மனைவிக்கு வயது 68. நான்கு மகள்கள் நான்கு மருமகன்கள். பத்து பேரக் குழந்தைகள். அசைவ ஹோட்டல் நடத்தி வந்தவர். அந்த ஹோட்டலுக்கு நகரில் பத்துக்கிளைகள்.
ஐஸ்பெட்டியின் தலைமாட்டில் சீனி முகமதுவின் மனைவியும் மகள்களும் அமர்ந்திருந்தனர். அவர்களின் முகம் அழுது அழுது வீங்கியிருந்தது.
‘தீதார்’ பார்க்க உறவினர்களின் நண்பர்களின் கூட்டம் அப்பியது.
மூத்த மருமகன்தான் இறுதிகாரியங்களுக்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தார்.
“எப்டி ஆச்சு பாய்? நேத்தைக்கி காலைல என்கூட நல்லா பேசிக்கிட்டிருந்தாரே?”
“ஹார்ட் அட்டாக். ஆஸ்பத்திரில வச்சு ஆறு மணி நேரம் போராடி பார்த்திட்டோம். போன உயிர் போன உயிர்தான்!”
“யா அல்லாஹ்!”
“வெளிநாடுகளில் இருக்கும் அவர் தம்பிகளுக்கு தகவல் சொல்லிட்டீங்களா?”
“சொல்லிட்டம் அவங்களும் காலைல வந்திட்டாங்க!”
“வெளியூர் சொந்தக்காரங்க?”
“வந்துக்கிட்டே இருக்காங்க. மஸ்ஜித் ஒலிபெருக்கி மூலம் மௌத்தை அறிவிச்சிட்டம். ஆட்டோ வச்சு ஊர் முழுக்க சொல்லிட்டம். போஸ்ட் அடிச்சு ஒட்டிட்டோம். பேப்பர்லயும் மௌத் பற்றி செய்தி போட்டுட்டோம்.”
“சீனி முகமது பாய் மாதிரி ஒரு நல்ல மனுஷனை இனிம பாக்க முடியாது!”
“அவர் எங்களுக்கு மாமனார் அல்ல. அத்தா மாதிரி. உங்களாலயே அவர் இழப்பைத் தாங்க முடியலேன்னா எங்களால அவர் இழப்பை தாங்கிக்க முடியுமா?”
“ஒழுக்கத்தின் மறு உருவம் சீனிமுகமது!”
“ஆமா!”
“உக்கடம் மூமீன்களின் அழகிய முன் மாதிரி அவர்!”
“ஆமா!” நலம் விசாரிப்பவரை மென்மையாக புறம் தள்ளிவிட்டு நகர்ந்தார் மூத்த மருமகன்.
துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.
வீட்டின் கொல்லைப்புறத்தில் மூன்று தேக்ஸாக்களில் மட்டன் பிரியாணி தயாராகிக் கொண்டிருந்தது.
நேரம் நகர்ந்தது.
மஸ்ஜித்தின் முத்தல்லி, இமாம், மோதினார் வந்து சேர்ந்தனர். சந்தூக்கு ஒரு மூலையில் காத்திருந்தது.
முத்தவல்லி மூத்த மருமகனிடம் போனார். “அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வஅலைக்கும் ஸலாம் முத்தவல்லி!”
“அஷர் தொழுகைக்கு பின் நம்ம கபர்ஸ்தான்லயே மௌத் அடக்கம் பண்ணப்போறதா சொல்லியிருந்தோம்!”
“ஆமா!”
“ஜனாசாவை குளிப்பாட்டிரலாமா?”
மூத்த மருமகன் தயங்கினார்.
56 இஞ்ச் மேட்டூர் மல்துணி வாங்கி கபன் துணி துண்டாடிக் கொண்டிருந்தனர். ஒரு 20 லிட்டர் கேனில் ஜம்ஜம் நீர் காத்திருந்தது.
இலந்தை இலைகள்.
சீயக்காய் பவுடர்.
சிந்தால் சோப்.
சந்தனம்.
கற்பூரம்.
கபன் துணிகளிலிருந்து கயிறு போன்ற நீண்ட நாடா துண்டுகள் கத்தரிக்கப்பட்டன.
“ஜனாசாவை குளிப்பாட்ட வெள்ளையத்தா என்கிற சையத் நய்யார் உசேன் வரவேண்டும். அவருக்காக காத்திருக்கிறோம். அவர் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இதுவரை 4000 ஜனாசாக்களை குளிப்பாட்டி இருக்கிறார். சேவை உள்ளம் கொண்டவர். வெள்ளையத்தா இல்லாமல் மௌத் வீடுகள் இல்லை!”
“ஒரு சினிமா ஆக்ஷன் ஹீரோவுக்கு தரும் அறிமுகத்தை வெள்ளையாத்தாவுக்கு தருகிறீர்கள்!”
“வருவார்.. நீங்களே பாருங்கள்!”
திறன்பேசியில் யாருடனோ பேசியபடி காட்சியமைப்புக்குள் பிரவேசித்தார் வெள்ளையத்தா. வந்தவுடன் அனைவருக்கும் அழகிய முகமன் பரிமாற்றம்.
“ஜனாசாவை குளிப்பாட்டிரலாமா?”
“ஓ!”
“மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு என்கிற ஒற்றைப்படையில் குளிப்பாட்டுவோம்…” வெள்ளையத்தா இரு கைகளிலும் உபயோகித்து எறியும் கையுறை மாட்டிக் கொண்டார்.
ஜனாசாவை தூக்கி வந்து ஒரு மறைவில் கிடத்தினர்.
ஜனாசாவை ஒரு முறை தீர்க்கமாக பார்த்தார் வெள்ளையத்தா.
மூன்று அண்டா நீரில் ஜம்ஜம் நீரை கலந்து இலந்தை இலைகளை உருவி போட்டார் வெள்ளையத்தா. குனிந்து ஜனாசாவின் கண்களை கசக்கி மூடினார்.
ஜனாசாவின் ஆடைகளை களைந்தார்.
ஒலு செய்யும் வலது கையிலிருந்து ஜனாசா குளியலை ஆரம்பித்தார் வெள்ளையத்தா.
முதல் குளியலுக்கு சீயக்காய் தூளை பயன்படுத்தினார் வெள்ளையத்தா. சுத்தம் செய்து கொண்டே போன வெள்ளையத்தாவின் கண்கள் மறைவிடம் பக்கம் போயின.
இரு பக்க தொடைகளிலும் ஏதோ வரையப்பட்டிருந்தது.
உன்னித்தார் வெள்ளையத்தா.
இடது பக்க தொடையில் ஒரு பெண்ணுருவம் பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த பச்சை குத்தப்பட்ட முகம் வெள்ளையத்தாவுக்கு மிகவும் பரிட்சயம்.
காசிமின் மனைவி லைலா.
உருவத்துக்கு கீழே ‘லைலா என் ஈரக்குலை’ என்கிற வாசகம் இருந்தது.
வலது பக்க தொடையில் ஒரு பெண்ணுருவம் பச்சை குத்தப்பட்டிருந்த்து. அது அது… ரசாக்கின் மனைவி பரக்கத்!
அந்த உருவத்துக்கு கீழே ‘பரக்கத் என் ரூஹு’ என்கிற வாசகம் இருந்தது.
காசிம், லைலா, ரசாக், பரக்கத் நால்வருமே இதே மஹல்லாவில் ஹயாத்துடன் இருப்பவர்கள்தான்…
ஊருக்கு அறிவுரை சொன்ன சீனி முகமது இரு பிறன் மனை உருவத்தையும் பெயரையும் பச்சை குத்தி வைத்திருக்கிறாரே!
பச்சை குத்தப்பட்ட பெண் உருவங்களுக்கு 40 வயது இருக்கும். இந்த பச்சை குத்துதல் முப்பது வருடங்களுக்கு முன் நடந்திருக்கிறது.
இந்த பச்சை குத்தல் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியுமா?
இல்லை இது ஒரு தலை காதல் சார்ந்த பிறன்மனை நோக்குதலா?
எதுவாக இருந்தாலும் இந்த விஷயம் இப்போது வெளிப்படுவது மோசமான விளைவுகளை மூன்று குடும்பங்களில் ஏற்படுத்தும்.
வெண் புள்ளிகள் கொண்ட ஜனாசா-
கடுமையான தோல் நோய்கள் உள்ள ஜனாசா –
ஆணுறுப்பு பெண்ணுறுப்பும் கொண்ட திருநங்கை ஜனாசா-
இப்படி எத்தனையோ ஜனாசாக்களின் ரகசியங்களை மறைத்து கண்ணியம் காத்திருக்கிறேன். இப்போதும் அதைத்தான் செய்யப் போகிறேன்!
“யா அல்லாஹ்! ஹாஜி சீனி முகமதை மன்னிப்பாயாக. நேர்வழி பெற்றவர்களில் அவரது பதவியை உயர்த்துவாயாக! அவர் விட்டு செல்லும் மக்களுக்கு அவருக்கு பகரமான ஒருவரை ஏற்படுத்துவாயாக. அகில உலக ரட்சகனே! எங்களையும் அவரையும் மன்னிப்பாயாக! அவரது கபரை விசாலமாக்குவாயாக. அதிலே ஒளியை ஏற்படுத்துவாயாக. பிறன்மனை நோக்கிய சீனி முகமதின் பாவங்களை மன்னிப்பாயாக!” சோப் வைத்து சந்தனம் வைத்து அடுத்த இரு குளியல்கள்.
பிரார்த்தனை செய்த வெள்ளையத்தா சீனிமுகமதின் மறைவிடத்தை மறைத்தார். நடுவில் இரு துணி பட்டைகளை நீட்டினார். இடுப்பில் கபன் துணியை போர்த்தினார். இருகட்டை விரல்களில் ஒரு பட்டையும் முகவாயில் ஒரு பட்டையும் இறுக்கினார். தலைப்பகுதி சுருட்டி ஒரு பட்டை கால் பகுதி சுருட்டி ஒரு பட்டை கட்டினார்.
கடைசியில் அத்தர் தெளித்தார்.
உதவியாளர்களுடன் சேர்த்து ஜனாசாவை அலங்கரிக்கப்பட்ட சந்தூக்கில் கிடத்தினார்.
வெள்ளையத்தா கூடியிருந்த கூட்டத்தை ஒரு முறை நோட்டமிட்டார்.
கூட்டத்தில் லைலாவும் பரக்கத்தும் அழுத கண்களுடன் நின்றிருந்தனர். வெள்ளையத்தாவின் பார்வையை பார்த்ததும் முகத்தை துடைத்துக் கொண்டு பார்வையை தாழ்த்தினர்.
எந்த யூகத்திலும் ஈடுபடாது ஜனாசா ஊர்வலத்தை பின் தொடர்ந்தார் வெள்ளையத்தா. “யா அல்லாஹ்! ஒரு கீராத் நன்மைக்காக ஜனாசாவின் ஒரு கசக்கும் உண்மையை மறைக்கவில்லை. மூன்று குடும்பங்களின் அமைதிக்காகவும் நல்லுறவுக்காகவும் இதனை மறைத்தேன். எல்லாவற்றையும் நீயே அறித்தவன்.”
வெள்ளையத்தாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.
000
