1
உள் அரிகம்
,
பேசும் போது
ஒலி வெளியேறுவதில்லை;
நாக்கின் அடியில்
ஒரு தழல்
கரிந்து கொண்டே இருக்கிறது.
,
நினைவுகள் கண்ணாடியின்
பின்னணி அல்ல;
அவை உடைந்து
சிதறிய ஒளிப்படலங்கள்.
விழிகளுக்குள் சிக்கிய
ஒவ்வொரு நிழலும்
மறுக்க முடியாத
ஒரு சத்தியம்.
,
“உன்னைக் காண்கிறேன்” என்ற
உனது வாக்குறுதி
ஏக்கங்களின் மூன்றாம் பரிமாணம்;
அது உண்மையா? அல்லது
காலங்கடந்த
ஒரு பிம்பத்தின் பிரதியா?
,
இங்கு மொழி
ஒரு நீர்த்தடாகம்:
அது எதையும்
முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை.
நீரின் அலைவுகளில் தோன்றுவதும்
மறைவதுமாக ஒரு மாயாஜாலம்.
,
தூண்டப்பட்ட உணர்வுகள் யாவும்
பூமிக்குக் கீழே
ஓடும் அந்தரங்க ஆறுகள்;
அந்த நதியின் ஓசையையே
நாம் கவிதை என்று
பெயரிட்டு அழைக்கிறோம்.
,
சுழலும் படிமங்களின் மத்தியில்—
உணர்வு அங்கே இருக்கிறதா?
அல்லது நம் பார்வையின் வழியே
அது புனையப்படுகிறதா?
2
பிரதி
,
கண்ணாடிப் பூச்சியிலிருந்து வீழ்ந்த
ஓர் இழைமயக் கணத்தில்
காலப்புள்ளி ஒன்று ஒட்டப்பட்டது.
,
அது நான் அல்ல;
தன்னையே சிறு துண்டுகளாகப் பெயர்த்து
வெளியே எறிந்து கொள்ளும்
மௌனமான வேறொரு பிம்பம்.
,
தொட்டால் துளிர்க்கும் நினைவுகள்
மின்னலைப் போல
திசைகளைத் திருப்புகின்றன;
நீ நடந்த பாதையை
உனது நடைமுற்றமே
இப்போது மறுக்கிறது.
,
கண்ணாடி
என் மனதைப் பிரதிபலிக்கவில்லை;
ஒரு கணம்,
என் நிழலைத் தொட்டு
நானே கீழே விழுந்தேன்.
,
அங்கேதான் கவிதை கருக்கொண்டது—
பிம்பமாக அல்லாமல்,
புதைந்து உதிக்கும்
ஒரு தீரா உணர்வாக
மட்டும் எஞ்சுவதற்கு.
,
3
இரண்டாம் பரிணாமம்
,
கண்ணாடியின் மறுபுறம் நான்
ஒரு தவிர்க்க முடியாத சுவாசமாகிறேன்.
பார்க்கப்பட்ட ஒவ்வொரு முகமும்
வெவ்வேறு வலிகளின்,
மறைக்கப்பட்ட ஆசைகளின் உருமாற்றங்கள்.
,
நிழல்கள் ரகசியமாகப் பேசின:
“நீ எங்களின் பிரதி மட்டுமல்ல,
எங்களின் ஒரே கண்ணியம்.”
வெளிச்சத்தைத் துறந்த சில நிழல்கள்
இருளின் ஆழத்திலிருந்து
கவிதைகளை எழுதுகின்றன—
யாராலும் வாசிக்கப்படாத,
ஆனால் உயிர்ப்பு மிக்க கவிதைகள்.
,
வார்த்தைகள் யாவும்
மனதின் மீது அழுத்தப்படும்
இழைத் தடங்கள்.
விழித்த பிறகும் தொடரும்
ஒரு நீண்ட கனவின் எச்சங்கள்.
,
நான் எழுதுபவன் அல்ல;
வெறும் கண்ணாடி—
வாசிக்கப்படும் துயரங்களின்
மௌனத் திரைச்சீலை.
,
4
காலத்தின் திறப்பு
,
துருப்பிடித்த அந்த
நுழைவாயிலைத் திறக்கிறேன்
வாசல் வழியே கசிகிறது—
நாதம் அறுந்த இசைக்கருவிகளின்
நிசப்தமான இசை.
,
அலைகள் கரையில்
எழுதிச் செல்லும்
வாசகங்களை யாரும்
வாசிக்க முடியாது;
அவை நினைவுகளின்
வடிவமற்ற புதைகுழிகள்.
,
“மறைபொருளின் மரபுகள்,
காலத்தின் இறுதித்
துளியையும் மீட்டெடுக்கும்”
உமது வரிகளை
கடல் பாறைகளில்
வெட்டி எடுக்கிறேன்.
,
ஒரு பச்சை மீன்
என் மார்பில் ஊர்ந்து செல்கிறது.
அது தந்தையின் குரலில் கிசுகிசுக்கிறது:
“உன் இனத்தின் துயரை எழுது—
தோல்வியின் மொழியில் அல்ல,
ஆனந்தம் எனும் தீரா வேதனையில்.”
,
5
சுவாசத்தின் விளிம்பில் ஒரு நகரம்
,
நகரம் ஒரு சுவாசம்.
அது நுரையீரலுக்குள் புகும் முன்
ஈரமடைந்த சுவரிலிருந்து கசியும்
மணத்தைப் போல நினைவாகிறது.
,
நிலா மேகங்களைக்
கிழிக்கும் ஒளியாய்
அவளின் குரல் கேட்கிறது:
“நீ உன்னைத் துறக்கும் கணத்தில்
உண்மை பிறக்கிறது.”
,
புறநகரின் சிகரெட் புகையோடு கிளம்புகிறேன்.
அதன் சாம்பல் நிறப் புகை
உள்ளுணர்வின் கதவுகளைத் தட்டுகிறது.
,
மூளையின் இடுக்கிலிருந்து
பறந்த ஒரு பறவை,
வரலாற்றின் பக்கங்களைத்
துளைத்துச் செல்கிறது.
மெழுகில் அழுத்தும்
முத்திரையைப் போல வார்த்தைகள்
இருளைத் தின்னத் தொடங்குகின்றன.
,
நாம் உச்சரிக்காத சொற்களே
நமக்கு மரபாகின்றன—
காதலின் தடம்,
அழிவின் வாசல்,
பெயர்கள் துறந்த
மீண்டும் எழுதப்படும் கவிதைகள்.
00

பெயர் : ஏ.எச்.எம்.நவாஷ்
புனைப்பெயர் : ஈழக்கவி
சேவை : பேராதனைனைப் பல்கலைகழக மெய்யியல் துறை
முன்னாள் விரிவுரையாளர்,
ஓய்வுநிலை அதிபர்.
படைப்புத்துறை : கவிதை, விமர்சனம், ஆய்வு
நூல்கள் : 16 (வெளிவந்துள்ளன)

