பச்சை ஆவிகளின் பிரார்த்தனை: ஒரு மெட்டா-காவியம்

(The Prayer of Green Specters: A Transnational Meta-Epic)

ஈழக்கவி

I. நினைவகத்தின் கறை

மண்ணின் ஆழமான வன்வட்டில்,

இன்னும் ஈரம் உலராத குருதி

‘Cache’ ஆகத் தேங்கிக் கிடக்கிறது.

ஒரு குழந்தையின் கடைசிச் சிரிப்பு,

வானத்தின் நீலத் திரையில்

“Error 404: Future Not Found” என

மின்னல் கோடுகளாய் வெட்டி மறைகிறது.

காலம் தன் கோப்புகளை இழந்து நிற்கிறது.

II. டிஜிட்டல் வேட்டை

வானத்தில் ட்ரோன்கள்

அல்காரிதம்களைப் போல நெளிகின்றன.

அவற்றின் நிழல் நிலத்தில் விழுந்த கணமே,

பறவைகள் தமது கீதங்களை Uninstall செய்கின்றன.

சிதைந்து கிடக்கும் தாயின் விரல்களை,

உயிரற்ற ஒரு பிஞ்சுக்கை பற்றத் துடிக்கிறது—

மரணம் அந்த விரல்களில் மிச்சம் வைத்த

கொஞ்சூண்டு வெப்பத்தை தேடி…

III. மொழியின் துரோகம்

அவர்கள் அதனை “Collateral Damage” என்கிறார்கள்.

அச்சொற்களின் அகராதியில்

குழந்தைகளின் பெயர்கள் இருப்பதில்லை;

கனவுகளின் மொழிபெயர்ப்பு கிடைப்பதில்லை.

அங்கு மிஞ்சுவது வெறும் எண்கள் மட்டுமே—

பூஜ்ஜியங்களுக்குப் பின்னால் புதைக்கப்பட்ட

ஒரு பிரபஞ்சம்.

IV. நிலமற்ற குடியுரிமை

நாம் வரைந்த வரைபடங்கள்

எல்லைகளால் பூமியைக் கீறின.

ஆனால், அந்தப் பிஞ்சுகள்

எந்தத் தேசத்தையும் கற்கவில்லை.

அவர்கள் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டது

மூன்றே சொற்கள்:

பயம்,

கதறல், மற்றும்

முடிவற்ற மௌனம்.

V. பசுமை ஆவிகளின் மன்றாட்டு

இப்போது அவர்கள்—

பச்சை ஆவிகளாக 

பிரபஞ்சத்தின் நரம்புகளில் அலைகிறார்கள்.

ஒவ்வொரு இலையின் அசைவும்

ஒரு பிரார்த்தனை:

“இன்னொரு பிஞ்சுக்கரம்,

துப்பாக்கிச் சன்னங்களின் மொழியை

வாசிக்க நேரிடக் கூடாது.”

VI. மறையீடாக்கப்பட்ட குரல்

காற்றில் அவர்களின் குரல்கள்

‘Encrypted’ ஆகி அலைகின்றன.

மனிதக் காதுகளின் பழைய மென்பொருட்களால்

அவற்றை ‘Decode’ செய்ய முடிவதில்லை.

ஆனால் பூமி அதை உணர்கிறது;

அதனால் தான் அது எரிமலையாய்த் துடிக்கிறது.

VII. போரின் வரைவிலக்கணம்

ஒரு குழந்தை வினவியது:

“யுத்தம் என்றால் என்ன?”

பூமி விம்மிப் பதிலளித்தது:

“அது முதிர்ந்தவர்களின் மூளைகளில் முளைக்கும்

ஒரு கதிர்வீச்சு விளையாட்டு.

அதில் வெற்றியாளர்கள் யாராயினும்,

இறுதித் தோல்வி எப்போதும் குழந்தைகளுடையதே.”

VIII. விண்வெளியின் ஐ.நா.

இப்போது வானத்தின் நீலப் பரப்பில்

ஒரு புதிய உலகப் பேரவை கூடுகிறது.

அங்கு ‘வீட்டோ’ அதிகாரங்கள் இல்லை;

அரசியல் சதுரங்கங்கள் இல்லை.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றுதான்:

“அமைதி என்பது ஒரு வெறும் சொல் அல்ல—

அது குழந்தைகள் போரை மறக்கும் வரை

உயிரோடு இருப்பதற்கான

ஒரு அடிப்படை உரிமை.”

IX. கண்ணீர் மழை

இறுதியாக ஒரு மழை பெய்கிறது.

அது நீர் அல்ல;

காலாவதியாகிப்போன நினைவுகளின் மழையது.

ஒவ்வொரு துளியும் ஒரு குழந்தையின் விழி;

ஒவ்வொரு துளியும் ஒரு உலகின் சாட்சியம்.

X. முடிவுரை

நிமிர்ந்து பார்த்தால் மேலே வானமில்லை;

அது ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி.

அதில் தெரிவது நம்முடைய முகங்கள் தான்.

அந்தக் கண்ணாடி கேட்பது

ஒரே ஒரு கேள்வி:

“இந்த யுத்தம் உன்னுடையதா? அல்லது

உன்னால் நியாயப்படுத்தப்பட்டதா?”

00

பெயர்             : ஏ.எச்.எம்.நவாஷ்

புனைப்பெயர்       : ஈழக்கவி

சேவை            : பேராதனைனைப் பல்கலைகழக மெய்யியல் துறை

                    முன்னாள் விரிவுரையாளர்,

                   ஓய்வுநிலை அதிபர்.

படைப்புத்துறை    : கவிதை, விமர்சனம், ஆய்வு

நூல்கள்           : 16 (வெளிவந்துள்ளன)

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *