மீரான் மைதீனின் காவியலோகம் நாவல்: கதையோடு கலந்த திருப்பங்கள்

எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்களின் எழுத்துகளை இப்போதுதான் வாசிக்கிறேன். அதில் முதல் நாவலாக காவியலோகம். இந்நாவலில் பல திருப்பங்கள் கதைப்போக்கிற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய பாத்திரங்களாக நந்தனா, சேது, இம்மானுவேல், ஜின், மற்றும் கதைசொல்லியாக ஆசிரியரே, தன் வாழ்வில் நடந்த சம்பவங்களைப் புதிவுசெய்பவையாக அமைகிறது.

       எட்டு பாகங்களாக வரக்கூடிய ஒன்றாக அறியப்பட்டாலும், இம்முதல் பாகத்தில் மூன்று பகுதிகள் இடம்பெறுகின்றன. ஆலுவா வீடு, சர்ச், பெங்களூர், கோவா மட்காவ், தத்துப்பா தோட்டம், பின் அதைச்சுற்றி நடக்கும் கடற்கரை, ஹோட்டல் என்று காட்சிவெளிகள் விரிகின்றன. அமானுஷ்ய கதைவகையில் அமைந்தாலும், ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டு, பின்னவர் ஜின்னாக உருமாற்றம் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? ஏன் அவர் ஜின்னாக மாறவேண்டும். ஜின் என்றால் என்ன?. எத்தனை வகையான ஜின்கள் இருக்கின்றன. ஜின் ஒருவரின் கட்டுக்குள் இருக்கும்போது, அவரை மற்ற உறவுகளிடமிருந்து பிரிக்கும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இது உண்மைதானா?. கதைக்குள்ளும் நந்தனாவை ஆக்ரமிப்பு செய்யும் ஜின்னும் அவளைத் தனியாக பிரித்து வைக்கிறது. ஆனால் அவளை ஏன் தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்?.

       ஜின்னாக மாற்றம் பெறுவதற்கு முன் ஏன் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய வேண்டும். சாரங்கி – சுந்தரி கதையை விளக்குகிறார். இம்மானுவேல் – நந்தனாவின் காதல் வாழ்க்கை – அந்நகரில் நடக்கும் பதினைந்து கொலைகள் – அதில் 11 – கொலைகளுக்குப் சுருட்டைப் புகையாக ஊதித் தள்ளக்கூடிய ஜின்னுக்கும் என்ன தொடர்பு – முதலாளி மட்டும்தான் அவ்வீட்டில் வசித்தாரா? இல்லை அவரின் குடும்பம் எங்கே? என்ன ஆனது? இதுபோன்ற பலக் கேள்விகள் இப்பாகத்தில் முளைவிடுகின்றன.

       எல்லோருடைய கதையினையும் மேலோட்டமாக அறிமுகம் செய்துவிட்டு, அதன்பின்னர் இக்கதையின் பின்னனி வாழ்க்கையினை அடுத்தடுத்து வரக்கூடிய பாகங்களில் ஒளிந்துகிடக்க வாய்ப்புகள் இருப்பதாக அனுமானிக்கலாம்.

முதல் பகுதி:

       கதை எழுதுவதற்காக சேதுவினால் வரவழைக்கப்பட்டவர், பாம்பாட்டிக் கதை, புராணக்கதை என விவரிக்கப்பட்டாலும், ஆலுவா வீட்டில் நடந்த சம்பவங்களைச் சேது அவருக்குச் சொன்ன போது, திகைப்புதான் மேலிடுகிறது. சேதுவை அறிமுகப்படுத்தும் போது, திடீர் பணக்காரன். பிரச்சனைக்குரிய இடம் கைக்குவந்தால் குறைந்த விலைக்கு உடனே வாங்கிவிடுவான். அப்படி வாங்கப்பட்ட வீடுதான் இவ்வீடு. இதற்கு முன் வாங்கிய வீட்டு முதலாளி தற்கொலை செய்துகொண்ட விசயம் சேதுவினால், இரவு பதினோறு மணிக்கு உரையாடலின் வழியாக தெரிய வந்ததும், அவருக்கு பயம் உச்சந்தலைக்குச் சென்றுவிடுகிறது. அன்றிரவே அவருக்கு ஒரு கனவும் வந்துவிடுகிறது. அக்கனவில் தற்கொலை செய்துகொண்ட முதலாளியோடு பேசக்கூடிய வாய்ப்பும் வருகிறது. உயரமான, புகைவிட்டுக்கொண்ட, சோபாவில் அமர்ந்து, அந்தச் சுருட்டுக்காரர் மட்டுமே பேசுகிறார். அப்பேச்சுக் கதையாக விரிவடைந்தது. சாரங்கி, சுந்தரி இவர்களின் காதல் – காமம் கலந்த வாழ்க்கையாக அமைகிறது. திருமணம் செய்யும் முடிவை அவளெடுத்தாளும் கூட, நான்கு அண்ணன்களிடம் அனுமதிக் கேட்கிறாள். ஒரு அண்ணனிடம் முடிவு எடுக்கப்படுவதாகக்கூறி, இறுதியில் இனிப்புக்கொடுத்து கொல்லவும் செய்கிறார். சாரங்கியைப் பதினோறாவது நாள் கழித்து, அடித்து மரத்தில் தொங்க விடுகிறார்கள்.

       காலை விடிந்ததும், கனவில் கண்டதைப்பற்றி யோசித்தார். சேதுவிடம் இதைப்பற்றிச் சொன்னாலும், அவனுக்கொன்றும் தெரியாமலே இருந்தது. இருப்பினும், அடுத்து நந்தனா எனும் பாத்திரம் ஆலுவா வீட்டிற்குள் வருகிறது. சேதுவினால், சௌந்தராஜன் மூலமாக வருபவள். கதைகளை டைப் செய்வதற்காக, வாரத்திற்கு பத்தாயிரம் போனஸ் சம்பளம் என்கிற அடிப்படையில் இடம்பெறுகிறாள். அவளை, அவள் வீட்டிலிருந்து – பின் ஆலுவா வீடு என அழைத்து வருவதற்காக இம்மானுவேல் எனும் கதாபாத்திரமும் உடன் வருகிறது. சேது அவனை ஒப்பந்தமுறையில் வைத்திருந்தான்.

       அன்று மாலை மூவரும் பயணம் செய்யும் போது, பதினைந்து கொலைகள் பற்றிச் சில தகவலை இம்மானுவேல் எனும் ஆட்டோக்காரன் சொல்கிறான். அதில் நான்கு குற்றவாளிகள் சரணடைந்தது ஒருபுறமென்றாலும், மீத கொலைகளுக்கு யாரும் வரவில்லை. இருப்பினும் அந்த ஆட்டோவில் சுருட்டு வாசனை அவருக்கு மட்டுமே உணர வைக்கிறது. பின் தொடரவும் செய்கிறது. பாதி இழுக்கப்பட்ட சுருட்டுதான் கண்டுபிடித்ததாகத் தகவல் என்று சொல்லும் போது குழப்பம் மேலிடுகிறது. இக்கொலைகளுக்கும், அம்முதலாளிக்கும் ஏதோ தொடர்புகூட இருக்கலாம்.

       இப்படி முதல்நாள் கழிய, இரண்டாவது நாளிரவில் அவர் எழுதிக்கொண்டிருந்தார். அன்றைய நாள் பல செய்திகளை முன் வைத்தது. நந்தனாவின் மீது விருப்பம் கொண்டவனாக அவரும், சேதுவை வெறுப்பேத்த அவளுடன் நெருக்கமாக பேசவேண்டும் என்ற எண்ணம் ஒருபுறமென்றாலும், சேதுவும் அவள் மீது விருப்பம் கொண்டவனாக தன் கருத்தை முன் வைத்தான்.

       இருவரும் நந்தனாவின் மீது அதீத அன்பு வைத்தாலும், இம்மானுவேலும் அவள் மீது காதல் கொண்டிருப்பானோ எனும் சந்தேகமும் வந்தது. அவனுக்கு இருபத்தைந்து வயதுதான். முதல் நாளை விடவும், இரண்டாவது நாளில் வீட்டின் உள் வரைக்கும் ஆட்டோக்காரனின் அந்தஸ்து உயர்த்தப்பட்டிருந்தது.

       கதை நகர்வென்பது, பாத்திரங்களின் அறிமுகம் – அவர்களின் உரையாடல் – அதன் வழியாக சில, பல கதைகளைக் குறிப்பாக, உதிரிக் கதைகளின் தொகுப்புகளை ஆங்காங்கே தெளிக்கப்பட்டு கதைப்போக்கு செல்கிறது. இம்மானுவேல் சொன்ன கதைகளில் ஒன்றாக கடற்கரையில் நடந்த சம்பவமாக, ஒரு காதல் ஜோடியை ஒரு கும்பல் தாக்கி வன்புணர்வு செய்ததாகச் சொன்னான். அடுத்தக்கட்டமாக சேது எப்போதும் நந்தனாவோடு இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில், தன்னிடத்தில் தான் மொபைல் இருக்கிறது என்று தெரிந்தும், தேவையில்லாமல் ஆலுவா வீட்டிற்கு அவ்விருவரையும் அலைக்கழிக்க வைக்கிறான். பயம் நிறைந்த மனதோடு சென்றவருக்கு, சாவி இடுக்கின் வழியாக பார்த்தால், அங்கே புகைவிடும் சுருட்டுக்காரனனின் உருவம் மங்கலாக தன்னைக் காட்சிபடுத்தியது. இம்மானுவேலும் அதைப்பார்த்து பேச்சுமுச்சில்லாமல் அதிர்ந்தான்.

       அளவு கடந்த அன்பால், நந்தனாவின் பிறந்த நாளில் விலையுயர்ந்த வைர மூக்குத்தியைப் பரிசளித்தான் சேது. உடன் இந்தோனேசிய குடுவை ஒன்றும். நகரத்தில் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் உணவளித்தான். பின்பு அவளை ஆட்டோக்காரன் வீட்டில் விட்டுவிட்டு, அம்மூவரும் புத்தர் சிலைப் பார்ப்பதற்காக சென்றனர். ஆனால், உண்மையில், வீட்டில் வாஸ்து பார்க்கும் ஒரு நாரைப் பார்க்கத்தான் சேது சென்றிருந்தான்.

       அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் கனவு வருகிறது. அதே புகை உருவம் வருகிறது. ஒருவேளை இவர் சாரங்கியாக இருப்பாரோ என்றவரிருக்க, தன்னை ஜின் என்றே அறிமுகம் செய்கிறது. அந்த ஜின்னிடம் கேள்வியை முன்வைக்கும் போது, என்னோடு நெருங்கி பேசுவதற்கு என்ன காரணம். அதற்குப் பதிலாக உன் பாட்டன் சாயபு தான் காரணம் என்றது அந்த ஜின்.

       பின் காலையில் எழுந்தபோது, நந்தனாவுக்கு காதல் கவிதையொன்றை எழுதினார். சேது வாஸ்து பார்ப்பதற்காக, அந்நபரைப் பார்க்க போனதால், அக்கடிதத்தை அவளுக்குக் கொடுத்து, கண்களில் முத்தம் பெற்றது ஒருவகையென்றாலும், முதல் பகுதியின் நிறைவில், இரண்டு நாட்கள் கழித்து, இம்மானுவேலோடு திருமணம் செய்துகொள்ள சென்றுவிட்ட செய்தி, பின்னரே அவ்விருவருக்கும் தெரிய வநதாக பதிவாகிறது.

இரண்டாம் பகுதி:

     இரண்டாம் பகுதியின் தொடக்கம் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து நடக்கின்றன. அவர் எழுதிக்கொண்டிருக்கும் கதையின் இறுதிக்காட்சி, தட்டச்சு செய்யும் நிலையிலிருக்கும் போதுதான் நந்தனாவின் செயல்பாடு அவ்விருவருக்கும் சண்டையினை வெளிப்படுத்த வைத்தது எனலாம்.

       சேதுதான் நந்தனா சென்றதில் பயங்கரமான கோபத்தில் இருந்தான். இந்தச் செய்திகளெல்லாம் துங்கப்பத்திரா செல்வதற்கு பெங்களூரில் ஒரு அறையில் தங்கியிருந்தவரை சேதுதான் எதேர்ச்சையாக சந்திக்கும்போது உரையாடினார்கள். அவ்விருவரும் அவள் மீது காதல் கொண்டாலும், வெளிப்படையாகச் சொல்லி இருந்தால், இம்மானுவேலோடு திருமணம் செய்து வைத்திருக்கலாம் என்றும் அவர் மனதில் நினைத்துக்கொண்டார். பின்னர் சௌந்தரராஜனைத் தேடிப்பிடித்து அவளின் முகவரியை வாங்கிக்கொண்டு, வீட்டிற்கே சென்றனர்.

       அங்கு சென்றால் நிலைமை வேறாக இருக்கிறது. சேதுதான் அவளைக் கடத்திவிட்டான் என்ற குழப்பத்திலிருந்து அவர்தான் மீட்டுவந்தார். அதன் பின்னர் நான் தத்துப்பாவைப் பார்க்க இருப்பதாகவும், அதுவும் கோவா அருகில். அவரின் பயணத்தை நிறுத்திவிட்டு, சேது அழைத்துச் சென்றான். தான் வாங்கிய புதிய இடத்தில் சிக்கல் இருக்கிறது. அதனால்தான் அங்கு செல்கிறோம். மாலை ஐந்து மணிக்குப் போனால், ஒருமணிநேர காத்திருப்புக்குப்பின் ஆறுமணிக்குச் சந்திக்கலாம் என்று நிலவரம் தெரிகிறது. இதற்கிடையில் சில உரையாடல்கள் அவ்விருவரிடமும் காணப்பட்டாலும், 1965 – ல் பென்ஸ்கார் ஒன்றை வாங்கத் திட்டமிட்டடிருந்தான். அது சார்ந்த கேள்வி மற்றும் பதிலைத் தெரிந்துகொள்ள, தத்துப்பாவைப் பார்க்க விருப்பம் கொண்டான்.

       பெரிய மைதானம், தோட்டம், நிறைய ஆதரவாளர்கள், வாகனங்கள் என்று அவ்விடம் பெரியதாகக் காணப்பட்டது. ஆடல் – பாடல்கள் – ஆண்கள் – பெண்கள் இவை ஒருபுறம் ஆர்பரித்தாலும், அங்கிருக்கும் ஒருவனின் உதவியோடு தத்துப்பாவைப் பார்த்தனர். அவரிடமிருந்து சுருட்டுப்புகை பரவியிருந்தது. அப்புகையை விடுபவர் ஆண் அல்ல. பெண். ஆனாலும் அங்கு கூடியிருப்பவர்கள் தத்துப்பா என்றே அழைக்கின்றார்கள். அது வேறுயாருமில்லை. நந்தனா. அவளை ஆலுவா வீட்டிலிருந்த ஜின் இங்கு கூட்டிவந்து இரகசியம் சொல்கிறது. அவர் கனவில் கண்ட அச்சுருட்டுக் காரனின் உருவம் அப்படியே நந்தனாவில் மேல் படிந்திருக்கும் காட்சி அவருக்கு மட்டுமே புலப்படுகிறது. ஆலுவா வீட்டிலிருக்கும்போது, அவள் பிரியமாக ‘அன்னே சார்’ என்று அழைத்த சொல், இப்போது தத்துப்பாவின் வாயிலிருந்தும் அதே சொல் வருகிறது. ஜின் இவளை முழுமையாக ஆக்ரமித்திருக்கிறது. எப்படியோ அங்கிருந்து வெளியே வந்தாலும், இந்தத் தகவலையெல்லாம் சேதுவிடம் அவர் கூறினார். நந்தனா இப்படியிருக்க இம்மானுவேல் என்ன ஆனான் என்பதுதான் அவ்விருவருக்கும் பெபருத்த கேள்வியாக இருக்கிறது.

மூன்றாம் பகுதி:

       இப்பகுதி மூன்று இரவு தாண்டிய பகுதியாக அறியப்பட்டாலும், துங்கபத்ரா நதிக்கரை வழியாக போகவேண்டியிருந்தவரைத் தடுத்துநிறுத்தியது மட்டுமில்லாமல், நந்தனா எப்படி தத்துப்பாவாப மாறினால் என்கிற அதிர்ச்சியிலிருந்து சேது மீளவில்லை.

       அன்றிரவே கோவா கட்ற்கரையில் இருவரும் உரையாட ஆரம்பித்தனர். அது மதுக்கூடலாகயிருந்தது. சேது மதுப்பிரியனாக மாறினான். தத்துப்பாவைப் பார்க்க வந்த காரணத்தைச் சொல்கிறான். பொறுமையாக இருங்கள் என்று நந்தனா சொல்லியும், அக்காரை வாங்க தீவிரமாக இருந்தான். பலக் குழப்பத்தோடு அவரிடம் பேசுகிறான். அப்போது ஆலுவா வீட்டிலிருந்த ஜின் பற்றிய பேச்சை எடுக்கிறான். அவர் தனக்கு நேர்ந்த கனவு பற்றிய விபரத்தைக் கூறியும், நந்தனாவுக்கு நான் வாங்கிக்கொடுத்த ஆஷ்டிரேவும், அந்தச் சுருட்டு வாசனையும் அவளிடமே சுற்றி வந்தது.

       தன் பயணத்தை ரத்துசெய்துவிட்டு, வேறொரு ஓட்டலில் அவரை தங்க வைக்கிறான். இப்படி அன்றைய நாள் கழிய, மறுநாள் காலையில், அவர் தங்கியிருக்கும் அறைக்கு பெரிய போர்வையைப் போர்த்திக்கொண்டு, கவலையில் மறுவுருவமாக இம்மானுவேல் நின்றிருந்தான். அவரைச் சந்தித்து சில விசயங்களைப் பகிர்ந்துகொண்டான். அப்பேச்சு கடற்கரை ஓரமாக நிலைத்தது. சேது இங்கிருப்பது, அவனுக்குத் தெரியாதென்றாலும், ஏற்கனவே நந்தனாவுக்கும், தனக்கும் காதல் இருந்ததாகவும், ஆலுவா வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே, ஒன்றரை ஆண்டுகள் காதலித்தோம். பின்னர் இந்நகருக்கு வந்த மறுவாரமே திருமணம் செய்துகொண்டோம். ஆனால், எங்களால், நிம்மதியான வாழ்வை வாழ முடியவில்லை. அவளை நெருங்கினால், யாரோ தன்னைத் தடுத்து நிறுத்துகிறார்கள். என்பதுபோல் உணர வைக்கிறது.

       பகலில்கூட நெருங்க முடியாதபடியான சூழல் அவளிடத்தில் வெளிப்படுகிறது. அவளிடமிருந்து புதுவகையான ஆற்றல், பல மடங்கு வீரியத்தோடு இருக்கிறது என்று தன் வேதனையை அவரிடம் கொட்டித்தீர்த்தான். அவளை விட்டு பிரிய மனமில்லாமல், காலப்போக்கில் அவளுக்குப் பயந்து, தஞ்மடையும் நிலையும் எனக்கு வாய்த்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், ஓராண்டுக்கு முன்பே குறி சொல்லக்கூடிய பழக்கம் அவளுக்கு வந்துவிட்டதாகவும், அருகிலிருக்கும் வீட்டாள்களுக்குச் சொல்லும்போது, அது சரியானதானவும் இருந்ததால், இவளிடம் தெய்வ அருள் இருப்பதாக நம்பி, பின் பிரபலமாக மாறிவிட்டது.

       தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு, பல வருடங்களாகப் புகைப்பிடிப்பவர் போல, அனுபவஸ்தாலியாக, பித்தளைக்குடுவையில் தண்ணீரை ஊற்றி, அதைப் பார்த்துக் கொண்டு குறி சொல்கிறாள்.

       இப்படியாக இம்மானுவேலின் பேச்சு நீண்டு கொண்டாலும், இறுதியாக அவள், அவரிடம் கோரிக்கையொன்றை வைத்தான். என்னை நந்தனாவோடு சேர்த்து வைக்க வேண்டுமென்கிற கோரிக்கை. உன் இடத்திற்கு அவளைக் கூட்டிச்செல் என்று சொன்னருக்கு மறுபதிலாக, என்னை அவர்கள் கொலைசெய்யக்கூடும் என்றும் தன் அச்சத்தை வெளிப்படுத்தினான்.

       இச்சமயத்தில், சேதுவின் உதவியாளர்கள் அவரைத்தேடி வந்தனர். சேது ஒருமணி நேரத்தில் வந்துவிடுவார் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு சென்றனர். ஆனால், இம்மானுவேல் அவரை விடுவதாகயில்லை. அவளிடமிருக்கும் அந்த ஜின்னை எப்படியாவது நீங்கள்தான் விரட்ட வேண்டுமென்று மண்டியிட்ட பின்பு, இருவரும் யோசித்தனர் என்ன செய்யலாம் என்று.

       காலை ஒன்பது மணியளவில் சேது வந்ததும், இம்மானுவேல் ஒன்றுவிடாமல் தனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் இவரிடமும் ஒன்றுவிடால் சொல்கிறான். பின்னர், மீண்டுமொருமுறை அவளைச் சந்திக்கத் திட்டமிடுகின்றனர்.

       தனிப்பட்ட ஒருநாளில் சந்திக்க முடிவெடுத்து, அன்று மாலையே ஆறுமணிக்கு காரில் கிளம்பினார்கள்.

       அங்கே தனி அறையில் தியானத்தில் இருந்தாள் நந்தனா. அவளின் முன்னால் குடுவையில் தண்ணீர், கையில் பூக்களும், எதிர் டேபிளில் அவர் கொடுத்த ஆஷ்ட்ரேயும் இருந்தது.

       அவளிடம் முறையிட்டார் அவர். இம்மானுவேலைவிட்டு விலக வேண்டும். என்று சொன்னவுடன், அதன்படி இனி பிரச்சனை இருக்காதென்று, தீர்வு கிடைத்தவுடன், அன்றிரவே ஆலுவா வீட்டிற்கு அவரும், சேதுவும் கிளம்பினார்கள். மதியம் வந்து சேர்ந்ததும், அவ்வீட்டில் சுருட்டு வாசனை மீண்டும் பரவியது.

       அன்றிரவு நடுசாமத்தில் வந்த அவரின் கனவில், தன்னோடு உரையாடிய அந்த ஜின் சில உண்மைகளைச் சொல்லியது. சேது வாங்க நினைத்தக் கார் பென்ஸ்கார். 210 கோடிக்கான மதிப்பு அக்காரின் உள்ளே இருக்கிறது. இதைப்பற்றி அவனிடத்தில் சொல்லிவிட்டு, நான் துங்கபத்ராவுக்குச் செல்கிறேன் என்று அவர் விடைபெறுகிறார். ஆனால் சேதுவுக்கு இதை யார் சொன்னது என்னும் குழப்பம் மேலிடுகிறது என்பதோடு முதல் பாகம் முடிவுக்கு வருகிறது.

0

முத்தழகு கவியரசன்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் சொந்த ஊர். இயற்பெயர் மு.கவியரசன். (20,ஜீலை,1991) விவசாயக் குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரி. மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம். தூய சவேரியார் கல்லூரியில், (பாளையங்கோட்டை) சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் முனைவர் பட்டம். இவரின் முதல் நாவலான “பரிதவிப்பு” 2021 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் தேர்வு இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. “காட்சிகள் சொன்ன காரணங்கள்” குறும்புதினம், சுப்பு லட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் (மதுரை) பாடத்திட்டத்தில் மூன்று ஆண்டுகளாக இடம் பெற்றது. “மகிழ்ந்திருங்கள்” நாவலைப் பன்முக கலை இலக்கிய மேடை (தேனி) வெளியிட்டது.

வாசகசாலை, சுவடு இணைய இதழ், உங்கள் நண்பன், புதிய மனிதன், உயிர் எழுத்து, காணி நிலம், இலக்கியச்சுடர், இலண்டனிலிருந்து வெளியாகும் காற்றுவெளி போன்ற பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் மற்றும் கதைகள், கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இவரின் முதல் சிறுகதையாக, திருப்பூரிலிருந்து வெளியாகும் கனவு இதழில் “பசியும் மற்ற பிறவும்” எனும் தலையில் பிரசுரமானது.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *