கண்களுக்கு அப்பாலல்ல வெளிச்சம்..
உள் உணர்ச்சிகளின் நுட்ப பரிமாணங்களை
ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது…
00
வாழ்க்கை முழுவதும் தவறுகள்
எப்போதும் போல்
ஒற்றை துடுப்பசைவில்
நகர்கிறது காலம்
00
இங்கு யாரும் எதிரி இல்லை
அந்த திருப்பத்தில்
கட்டுப்பாடு இழந்து.
திரும்பும் வாகனத்திற்கு
அனைவரும் ஒன்றுதான்..
00
காற்றில் அலையும் கூந்தலும்
மல்லிகை மணமும்
வேறு எதை புதிதாக சொல்லி விடப்போகிறது..
எல்லாமே பழசு தான்
எனினும் அதனூடாக எதையோ
தேடி அதிருப்தியில் முடிகிறது.
00
கருவறை வடிவ
கட்டுமானத்திற்குள்
மூப்பின் கூன் உடல்
ஓய்வு கொள்கிறது..
குழந்தைமை களைந்து
எழுச்சியுற்ற வாழ்வாட்டம்
அரிதாரம் கலைத்து
வீடு திரும்புகிறது..
00
கிளுகிளுப்பை முதல்
சாஸ்த்ரிய சங்கீதம் வரை
ஒலி எழுப்பும் இசை அனைத்தும்
மயக்கும் போதை வஸ்து போலத்தான் அன்றி
புனிதம் என்று இல்லை.
00

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

