பரிபூர்ண வணங்குதலில்

நெகிழ்ந்துருகுகிறது சிவம்.

லாயத்திலிருந்து அவிழ்க்கபட்ட

குதிரைகள் திசைகளற்று

தெறித்து ஓடின

கடவுளின் ஜீவ சமாதி நோக்கி.

0

விளக்கம் தேடி புறப்பட்ட

கனவின் மறு முனையிலிருந்து

விழித்து எழுகிறேன்..

கடனைக் கழிப்பது போல

வடிவமற்று நீர்த்துப் போனவைகளை உதறிவிட்டு

நிலையத்தின் வாசலில்

எனக்குப் பிடித்த ஆவி பறக்கும்

காபியை பருக விரைகிறேன்.

0

குளிரும் வேண்டும்

போர்வையும் வேண்டும்.

மெய்மையும் வேண்டும்..

மெய்மறத்தலும்…

0

உயர் ஆளுமைகளுடன் பழக கூசுகிறேன்..

சற்றும் நெகிழாத

விறைப்பான சுயத்துடன்..

0

என் தேவைகளின் நிமித்தமே

என் நகர்வுகள் ..

0

நாம் வடிவமைக்கும்

ஒலிச்சேர்க்கைக்கு அப்பால்

என்றும் அணுகமுடியாத

அமைதியின் இசை..

நம் உபகரணங்களை உதறிவிட்டு பெருஞ்சுழலில்

குதித்தால் ஒழிய..

கூட்டமாய் நடக்கிறார்கள்

விலகிச் சென்றாலும்

நடந்துதான் ஆக வேண்டும்..

0

இறக்கி விடப் பட்ட இடம்

அக்னிக் காடு ..

ஒவ்வொரு மரமும் அக்னி ஜுவாலை

என வடிவம் கொள்கிறது.

அணைக்க அழைக்கும் கரங்கள்

சிதறும் ஒளிக்கற்றையினால் ஆனது.

0

சுரேசுகுமாரன்

இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *