பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது – மலாய் மொழிபெயர்ப்பு கவிதைகள்
முகமறியா தேசத்து மக்களை அறிந்து கொள்ளவும் அவர்களின் வாழ்வை புரிந்து கொள்ளவும் இலக்கியம் எப்போதுமே முன்னணியில் இருக்கிறது. வென்றவர்கள் எழுதிச்சென்ற வரலாறுகளையும் தோற்றவர்கள் எழுதாமல் சென்ற வரலாறுகளையும் ஒரு புள்ளியில் இணைத்து வைப்பது இலக்கியம்தான். அப்புள்ளி பூகோள அமைப்புகளின் வெற்றி தோல்விகளைத் தாண்டிய இன்னொன்றை புதிய தலைமுறைக்கு சொல்கிறது.
உலகின் சுத்தமான நாடுகளின் ஒன்றாக போற்றப்பட்ட நாட்டிற்கு புதியவர் ஒருவர் சென்றிருக்கிறார். சில நாட்களிலேயே அவரால் அங்கு இயல்பாக இருக்க முடியவில்லை சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. பிறகு அவர் தனக்கு ஏற்பட்ட மாற்றத்தைக் கொண்டு ஒன்றை கண்டறிகின்றார். அதாவது அங்கு பார்க்கும் இடமெல்லாம் சுத்தமாக இருந்தாலும் காற்று மாசுப்பட்டிருக்கிறது. இதுவரையில் எல்லோரும் சொல்லி வந்ததில் இருந்து ஒருவர் இன்னொன்றைச் சொல்கிறார். அது தன்னளவில் அவர் கண்டுவிட்ட அனுபவம். இலக்கிய வாசிப்பு இதைத்தான் நமக்கு சொல்கிறது. இதுவரையில் சொல்லப்பட்டதில் இருந்து சொல்லாத ஒன்றை நமக்கு உணர்த்துகிறது.
நமக்கு தெரிந்த மொழியில் நாம் வாசித்துவிடலாம். தெரியாத ஒரு மொழியில் எழுதும் ஒருவனை எப்படி அணுகுவது. இன்றைய தொழில்நுட்பம் ஓரளவுக்கு நமக்கு மொழிபெயர்த்து கொடுத்தாலும் அதனால் அந்த மூல படைப்பின் உணர்வை முழுவதுமாய்க் கடத்த முடிகின்றதா என்பது இன்றளவும் பரிசோதனை முயற்சியாகவே இருக்கிறது. என்ன இருந்தாலும். மனிதன் போல இன்னொரு மனிதனின் உணர்வுகளை நமக்கு அப்படியே பிரதியெடுத்து கொடுக்க முடியுமா என்ன? இந்தச் சிந்தனைக்கு காரணம் இந்தக் கவிதைத் தொகுப்பை மொழிபெயர்த்திருக்கும் கவிஞர் பா.அ.சிவம் கொடுத்திருக்கும் முன்னுரைதான். அதை வாசிப்போம்;
என்னுடைய இரசனை சார்ந்தே எனதுலகின் காட்சிகளைப் போலவே, வலியை, வெறுமையை, தனிமையை, துரோகத்தை, இயலாமையைப் பதிவு செய்திருக்கிற கவிதைகளே சட்டென அமர்கின்றன மனதில். எனது கவிதை உலகிலும் மொழிபெயர்ப்பு உலகிலும் கிட்டதட்ட ஒரே வகை காட்சிகளே அல்லது பார்த்த முகங்களே இருப்பதை உணரலாம். சில வேளைகளில் சலிப்பை அல்லது அலட்சியத்தைத் தந்தாலும், பல வேளைகளில் அவற்றை மீண்டும் மீண்டும் இயற்றுவதில் எனக்குக் கொண்டாட்டமே. நம்மை மீண்டும் மீண்டும் கண்டடைவதின் சுகத்தைச் சொற்களால் சொல்ல முடியாமல் போகிறது. போகட்டும். அதன் உட்பொருளை இந்த உலகின் கோடான கோடி மக்களில் யாராவது ஒருவர் புரிந்து கொள்வார், வாழ்க்கையின் ஏதாவது ஒரு திசையில் எனும் நம்பிக்கை மட்டும் திடமாக உள்ளது என்கிறார்
அப்படியான ஒரு திசையில் இருந்துதான் இந்தக் கவிதகளைப் பேச இன்று எத்தனிக்கின்றேன்.

நடுகல்.காம் இணையத இதழின் இது நான்காவது ‘மாதம் ஒரு மலேசிய புத்தகம்’. இம்முறை மலாய் மொழியில் இருந்து (சில ஆங்கில கவிதைகள்) தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் கவிதைகளைப் பார்க்கவுள்ளோம். மலேசிய மொழிபெயர்ப்பு கவிதைகள் என்கிற அடைப்படையில் இக்கவிதைகளை நாம் அணுகலாம்.
‘பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது’ கவிதைத் தொகுப்பில் 17 கவிஞர்களின் 44 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஐந்து கவிஞர்களைத் தவிர மற்ற கவிஞர்களின் சுருக்கமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 2009-ஆம் ஆண்டில் வல்லினம் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள்.
தத்துவங்களை அவ்வப்போது கவிதைகளில் வாசிக்க நேர்கிறது. அப்படி வாசிக்கையில் தத்துவத்தை உணர்ந்த ஒருவனின் வெளிபாடா அல்லது ‘போலச்செய்தலா’ என்பதை வாசகன் சட்டென புரிந்து கொள்வான்.
‘ஓடும் நதியில் இரண்டாவது முறையாக அதே நதி நீரில் யாராலும் கால் வைக்க முடியாது’ என ஓஷோ சொல்லியுள்ளதாய் வாசித்திருக்கிறேன். இதையே புத்தர் சொன்னதாகவும் வாசித்திருக்கிறேன். இதையே ஜென் குருவும் சீடனும் பேசுவதாகவும் வாசித்திருக்கிறேன். அது தவிர பலரும் தன் உரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளனர்.
கவிஞர் எ.சமாட் சையிட் இக்கூற்றை தனது ‘அலை’ என்னும் கவிதையில் சொல்லியுள்ளார்.
அலை
ஒருமுறை
எனது கால்களைத் தீண்டிய
அலையை
மறுமுறை
நான் அறியப்போவதில்லை
எப்போதுமே…
இதில் அவரின் கவனம் குவிவது நனையும் கால்களில் அல்ல; கால்களை நனைக்கும் அலை நீரை. அதைத்தான் மீண்டும் அவர் அறியப்போவதில்லை என்கிறார். இங்கு அலையாக இருப்பதில் நாம் எதை ஏற்றுகிறோம் என்பதுதான் வாசகனின் வாசிப்பாக இருக்கிறது. முன்னமே சொல்லப்பட்டதோ இதுவரையில் சொல்லப்படாததோ (அப்படியொன்று இருக்கிறதா என்ன?) கவிஞன் அதற்கு தன் கவிதையில் என்ன இடத்தைக் கொடுக்கின்றான் என்பதே அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது. இந்தக் கால் நனைத்து ஓடும் அலைகள் போல.
வாழ்க்கை எவ்வளவு வேகமாகச் செல்கிறதோ அவ்வளவு வேகமாக பலரும் போலிகளாக மாறிவருகிறோம். இங்கு போலி என்பதைவிட நாமுமே இயந்திரத்தனமாக மாறிவருகின்றோம் என சொல்வதே பொருந்தும். எ.சமாட் சையிட் எழுதியிருக்கும் ‘நண்பன்’ கவிதை இப்படியாக சொல்கிறது;
நண்பன்
நாம் எப்போதும்
கைகுலுக்கிக் கொள்கிறோம்
ஏன்
ஒருவரையொருவர்
அறிந்து கொள்வதில்லை?
கைகுலுக்கி ஒருவரையொருவர் அறிந்த கொண்ட நிலை மாறி கைகுலுக்க மட்டுமே சம்பிரதாயமாக நின்றுவிட்டதை வேறெப்படி சொல்வது. அதிலும் இக்கவிதைக்கு கவிஞர் வைத்திருக்கும் தலைப்புதான் இக்கவிதைக்கு மேலும் வலியைக் கொடுக்கின்றது.
உண்மைகள் மீதான ஈர்ப்பும் எதிர்ப்பார்ப்பும் எல்லோருக்குமே இருந்தாலும் படைப்பாளிகளுக்கு அது அதிகமாகவே இருக்கிறது. ‘உண்மை’ என்ற தலைப்பில் கவிஞர் எழுதியிருக்கும் கவிதை;
உண்மை
உண்மையான ஒவ்வொன்றும்
எவ்வளவு அழித்தாலும்
நிச்சயம் நிலைத்திருக்கும்
உரம் போடாமலே
நிச்சயம் பூ பூக்கும்…
காற்று இல்லாமலேயே
நிச்சயம் பொழிவாக இருக்கும்

காதலைக் குறித்த கவிஞர்களின் பார்வை எப்போதுமே விசித்திரமானவை. காதலின் ஆழத்தை அவர்கள் எதன் மேல் இறக்கிப் பார்க்கிறார்கள் என்பது அவர்கள் கவிதையின் ஆழத்தைக் காட்டுகிறது. கவிஞர் லிம் ஸ்வீ தின் எழுதிய ‘பூவும் வண்ணத்துப்பூச்சியும்’ என்னும் கவிதை இப்படியாக காதலை பூவுக்குள்ளும் வண்ணத்துப்பூச்சிக்குள்ளும் ஏற்றி வைக்கிறது. அது போதாதென்று, முதல் குரலாய் வண்ணத்துப்பூச்சியின் குரலும் அடுத்ததாய் பூவின் குரலுமென மாறிமாறி வந்து இருவரின் ஒருமித்த குரலில் இக்கவிதையை முடித்து வைக்கிறார் கவிஞர். அவர் முடித்துவிட்டார், காதலர்கள் இங்கிருந்து தங்களின் நினைவுகளுக்கு சென்றுவரலாம். ஒருவேளை அவர்கள் திருமணம் செய்திருந்தால் இக்கவிதை அவர்களுக்கு கூடுதல் அல்லது அவர்களின் கூடுதலின் இன்பத்தைக் நினைவுக்கூரும்.
பூவும் வண்ணத்துப்பூச்சியும்
பின்னர்
நானும் ஒரு காலைப்பொழுதில்
பறக்கத் தொடங்கினேன்
பரந்த பூங்கா வெளிக்கு….
பின்னர்
நானும் அந்தக் காலைப்பொழுதில்
மலரத் தொடங்கினேன்
ஓர் அழகிய செடியில்…
பின்னர் மலரின் வண்ண ஈர்ப்பால்
நானும் வந்தமர்ந்தேன்…
பின்னர் எனது படைப்பின் நியதியால்
நானும் அனுமதித்தேன்…
அதனால்
எங்களின் பிறப்பும்
முழுமையானது…
கல்வித்திட்டத்தின் மீதான விமர்சனம் அதன் பின்விளைவுகளின் பாதிப்பை கருத்தில் கொண்டே எழுகின்றது. பெரும்பாலான கல்வி நிலையங்கள் பாடத்தைப் புரித்து படிப்பதைக் காட்டிலும் மனனம் செய்து ஒப்புவிப்பதையே செய்கின்றன என்பது கவனிக்கத்தக்க ஓர் விமர்சனம். இப்படியான மனனம் செய்தாலே போதும் என்கிற சூழலை விமர்சிக்கிறது கவிஞர் அவாங் அப்துல்லாவின் கவிதை.
எண்ணுதல்
நாம் எப்போதும் படிக்கிறோம்
மிகச் சரியாகச் சொல்வதென்றால்
மனனம் செய்கிறோம்
ஒன்றுடன் ஒன்று கூட்டினால்
இரண்டு…
ஒன்றுடன் இரண்டு கூட்டினால்
மூன்று…
மூன்றுடன் மூன்றைப் பெருக்கினால்
ஒன்பது..
ஒன்பதுடன் ஒன்றைக் கழித்து
இரண்டுடன் கூட்டினால்
பதில் பத்து.
என்று முடியும் இந்தக் கவிதையின் வார்த்தை சூட்சமத்தை நாம் கவனிக்க வேண்டும். ஒருமுறை கணக்கு செய்தால் சரியாக வரும் கணக்கு இருமுறை சேர்ந்தார்ப்போல கணக்கிட்டால் கண்ணை குத்திவிடுகிறது. மனனம் மட்டுமே செய்யும் மாணவனால் கணக்கை மட்டுமல்ல எதையுமே சரியாக புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்.
விடைபெறுதல் என்பது விட்டுவிட்டுப்போகிறோம் என்பதைச் சொல்வதோடு வேறெதை விட்டு போகிறோம் எனவும் சொல்ல வருகிறது. பல தத்துவவாதிகள் ஆன்மீகவாதிகள் இதனை இன்றளவும் சொல்லத்தான் செய்கிறார்கள். கவிஞர்கள் என்ன விதிவிலக்கா. கவிஞர் நோர் எஸ்.எம் பறவை என்னும் கவிதையில் இப்படிச் சொல்கிறார். விடைபெறும் இந்தப் பறவையை நாம் எல்லா இடத்திலும் பொருத்திப் பார்க்க முடிகிறது.
பறவை
எங்கிருந்தோ வந்த
அப்பறவை மரத்தின் கிளையிலமர்ந்து
விளையாடியது…
தனது நீல நிற
இறகுகளைப்
பூமியில் உதிர்த்தது…
பறந்து
விலகிச் செல்வதற்கு
முன்னர்…
இக்கவிதைக்கு நேர்மாறாக இன்னொரு கவிதையை ‘மௌனம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார் கவிஞர். விடைபெறுதல் எல்லாவற்றையும் அழித்துவிடும். அது நினைவுகளின் அழிப்பானாய் இருப்பதை இப்படி சொல்கிறார். இனி நாம் சந்திக்க மாட்டோம் என்பது சிலருக்கு நீங்காத நினைவுகள் சிலருக்கோ வாழ்நாள் முழுவதும் நீக்கி நீக்கி நீங்காத துயரத்தின் நிழல்கள்.
மௌனம்
மௌனத்தினூடே
போய் வருகிறேன் என்றாள்
நாங்களும் பிரிந்தோம்
அக்கணமே
ஒருவரையொருவர்
அறிந்து கொள்ளாமலே…
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கவிஞர்கள் அதிகாரத்திற்கு எதிராகவே இருக்கிறார்கள். அதிகாரத்தின் ஆணவத்தை சாட்டையைக் கொண்டு அடித்தும் மயிர்பீழியைக் கொண்டு நீவியும் விடுகின்றார்கள். ஆனால் சாட்டையைவிடவும் மயிற்பீழி சில சமயங்களில் அதிகம் வலிக்க வைக்கிறது.
அப்படியான ஒரு கவிதையை கவிஞர் நோர் எஸ்.எம் இப்படியாக எழுதியிருக்கிறார்:
அரசியல்
அதிகாரம் என்பது
கூர்மை
கூர்மை என்பது
கத்தி
கத்தி என்பது
பிடித்திருப்பது
உனது கையில்
பிடித்திருக்கிறாய்
ஆனால்
உன்னையே
குத்திக் கொள்ளும் அளவு
ஏன்?
‘இந்த வலிதான்/மருந்திட்டது’ என்று ஒரு கவிதையை முடிக்கின்றார் கவிஞர் அப்துல் கபார் பஹாரி. இறந்த காலத்தின் வலியை நிகழ்கால நினைவோடையில் மருந்திடும் மனங்களுக்கு மேலும் ஒரு மருந்தாக ‘தேடல்’ என்னும் இந்தக் கவிதை அமைந்துவிடுகிறது.
தேடல்
இந்தக் கடற்கரையில்தான்
சந்தித்தோம்
கிளிஞ்சல்களின் ஓடுகள்
சங்கீத அலைகள்
பால் வெள்ளைப் பாறை
இந்த வானத்தில்தான்
சந்தித்தோம்
பாசி படர்ந்த கற்கள்
புற்களின் பூக்கள்
நடனக்கார இலைகள்
இந்த மன ஓரத்தில்தான்
சந்தித்தோம்
தனிமையை உதறி
உணர்ச்சியைக் கலைந்து
காதலைக் கொண்டாடி
இந்த வலிதான்
மருந்திட்டது…
கவிஞர் பா.அ.சிவம் இந்தக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தன் காரணத்தை அவரது முன்னுரையில் சொல்லியிருப்பார். மீண்டும் அதனை நமக்கு நினைவூட்டும் ஒரு கவிதையாகத்தான் கவிஞர் சித்தி சைனுன் இஸ்மாயில் எழுதியிருக்கும் ‘புல்லாங்குழல் வாசிப்பவன்’ என்னும் கவிதையை வாசிக்க முடிகின்றது.
புல்லாங்குழல் வாசிப்பவன்
அவனது துயரம்
நமது உணவுப் பாத்திரங்களில்
தொன்மையான உதிரத்தை நிரப்புகிறது
ஒவ்வொரு கலைஞ்சனின் வலியும்
அவனது புல்லாங்குழல் துளைகளில்
வந்து கசிகிறது…
நண்பர்களே..
அவனது கண்ணீர்த்துளிகளை
உற்று நோக்குங்கள்
அவனது விரல்கள்
அன்பால் தடுமாறுகின்றன…
முடிவற்ற கீதத்தை
இசைக்கிறான்
காலடியில் வந்து விழும்
சில்லறைகளுக்காக..
ஒரு கவிஞன்:
அவனது பாடல்கள் வழி
ஓடி மறைகின்றன
வாழ்வின் துயரங்கள்…
ஒரு சிறந்த படைப்பு தன் சாயலில் அல்லது தான் சொல்லும் உண்மைக்கு நெருக்கமாய் இருக்கும் இன்னொரு படைப்பை நமக்கு காட்டும். கவிஞர் ஷார்லின் ராஜேந்திரனின் ‘கட்டுமானப் பொறுப்பாளர்களுக்கு திரு அல்லது திருமதிக்கு’ என்னும் கவிதை பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் வெளியிடாக வந்த தடம் இதழில் பிரசுரமான சிறுகதையை நினைவுப்படுத்தியது. ‘சிவப்புக்கிளி’ என்னும் அச்சிறுகதையை கன்னட எழுத்தாளர் வசுதேந்திரா எழுதி, அச்சிறுகதையை கவிஞரும் எழுத்தாளுமான யூமா வாசுகி தமிழாக்கம் செய்திருந்தார்.
கனிம வளத்திற்கான விளைநிலங்கள் கொள்ளையடிக்கப்படுவதன் பின்னணியில் நடக்கும் தனிமனித மாற்றத்தையும் சமுதாய மாற்றத்தையும் பொருளாதார மாற்றத்தையும் சொல்லும் சிறுகதை. மாணவ பருவத்தில் தான் கேட்ட கதைகளில் வந்தவையெல்லாம் இன்று நிஜமான இயந்திர பூதங்களாக மாறி இளைஞனுக்கு மனஉளைச்சலைக் கொடுப்பதோடு இக்கதையை வாசிக்கும் நமக்கும் நம் கடந்த கால இழப்புகளையும் சொல்லிச்செல்லும்.
தோட்டபுற வாழ்க்கையை அனுபவித்தவன் நான். என் கண்முன்னே நாங்கள் வாழ்ந்த தோட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி எங்களுக்கும் அங்கு வசிக்க அனுமதியில்லாமல் போனது. நாங்கள் வாழ்ந்த அந்த நிலத்தில் இன்று பல தொழிற்சாலைகளும் நீண்ட தார்ச்சாலைகளும் இருக்கின்றன. நாங்கள் மிதித்து வாழ்ந்து விளையாடிய நிலத்தின் பச்சையம், எங்கள் நினைவுகளில் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இக்கதை எனக்கு என் வலியை நினைவுப்படுத்தியது. இன்று இந்தக் கவிதை எனக்கு எல்லாவற்றையும் நினைக்க வைத்ததோடு இக்கவிதையின் குரல் எங்கள் குரலாகவுமே ஒலிக்கத்தொடங்குகிறது.
கட்டுமானப் பொறுப்பாளர்களுக்கு; திரு அல்லது திருமதிக்கு
நான் பிறந்து வளர்ந்த இடங்களில்
ஏகப்பட்ட மாற்றங்கள்
இடமில்லை எனக் கூறி
நவீனமடைந்து வருகிறோம் வருகிறோம்
என்று கூறி…
எனது தாத்தா, பாட்டி
வாழ்ந்த புடுவில்
ஏன் போலீஸ் வளாகத்தை
அமைக்க வேண்டும்?
மாநிலப் பள்ளிவாசலை
ஏன் புக்கிட் பாஃலாவில்
அமைக்காமல்
நான் மரமேறி விளையாடிய பகுதிகளில்?
நண்பர்களுடன் சீட்டுக்கட்டு விளையாடிய
அம்பாங்கின் 218-ல்
ஏன் வணிக மையத்தை ?
எனது பிள்ளைகளுக்கும்
பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும்
காட்ட இயலாமல்
எனது நினைவுகள் அனைத்தையும்
இந்த மண்டையிலே
நானேன் பூட்டி வைத்துக்கொள்ள
வேண்டும்?
கனவுகள் கண்ட இடங்கள்
யாவும் கோபுரங்களாய்
அனைவரும் பார்ப்பதற்காய்
உயரமாகக் கட்டி
உயரமாகக் கொடியைப் பறக்கவிட
வேண்டும்
எனக் கூறுகிறார்கள் காரணங்களை…
விளையாட்டுத் திடல்களில்தான்
மீதமிருக்கின்றன நாட்டின் பசுமைகள்
‘பராமரிக்கப்படும் வனப்பகுதிகள்’
என ஒதுக்கிவைத்திருக்கிறார்கள்
கேளிக்கைக்காக கேபல் கார்களைத்
தொங்கவிடுவதற்கு…
யாரும் தொட முடியாதபடி
யாவரும் அருகில் காண முடியாதபடி
அவ்வளவு உச்சத்தில்
ஏன் கொடியைப் பறக்கவிட வேண்டும் ?
விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்
உங்களிடமிருந்து
நன்றி
கடமையுடன்,
ஒரு நகர்ப் @கிராமம்.காம்” பெண்@கிராமம்.காம்
இப்படியாக மேலும் பல கவிஞர்களின் கவிதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்கையில் அதன் மொழியைச் சிக்கலின்றி வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிகின்றது. இக்கவிதை சுமந்திருக்கும் செய்தியை சிதைக்காது நாமும் இந்தக் கவிதைகளை வாசிக்கின்றோம். அதற்கு முதன்மையான காரணம் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான பா.அ.சிவம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
மலேசிய இலக்கியச் சூழலில் நாங்கள் இழந்துவிட்ட கவிஞர்களின் பா.அ.சிவமும் ஒருவர். இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி காலமானார். இன்றும் கூட அவரது கவிதைகளும் மொழிபெயர்ப்புகளும் ஆங்காங்கே தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவரின் மறைவு பெரிய இழப்பாகத்தான் இன்றும் கருதப்படுகின்றது. வாழ்ந்து கொண்டே மறைந்த படைப்பாளிகளுக்கு மத்தியில் மறைந்த பின்னரும் தன் படைப்புகளால் பேசப்படும் படைப்பாளிகளில் ஒருவர் பா.அ.சிவம்.
நான் மாணவ பருவத்தில் இருந்து இளைஞனாக வளர்ந்த சமயத்தில் அந்த படைப்பாளியுடன் பழகுவதற்கு வாய்ப்பு அமைந்தது. இலக்கிய நிகழ்ச்சிகளில் கட்டாயம் ஒரு நபராக அவர் இருப்பார். எழுத்தில் ஆர்வம் உள்ள எவரையும் அவர் உதாசினம் செய்ததில்லை மாறாக அடுத்த கட்ட நகர்வின் மீதான நம்பிக்கையின் ஒளியை வீச செய்தவர். வாய்ப்பு இருப்பின் அவரின் கவிதைத் தொகுப்பு குறித்தும் ஒரு நாள் எழுதுகிறேன்.
இன்று இந்த கட்டுரையை உங்களைப் போலவே அவரும் எங்கிருந்தோ வாசிக்கிறார் எனவே நம்புகிறேன். அதோடு “நல்லாருக்குங்க தம்பி. இன்னும் நல்லா எழுதுங்க….” என வழக்கம் போல அவர் சொல்வதாகவே கேட்கிறேன்.
கவிஞர் பா.அ.சிவம் இதுவரையில் ‘உனது பெயர் நான்’ கவிதைத் தொகுப்பையும், ‘பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது’ மொழிபெயர்ப்பு தொகுப்பையும் ‘கூட்டரசு அரசியலமைப்பு சட்டம்’ என்ற புத்தகத்தை தமிழாக்கம் செய்திருந்தார். இது தவிர்த்து இதழ்களுக்கும் மின்னிதழ்களுக்கும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருந்தார். இன்றைய தலைமுறைக்கு ஏதாவது ஒரு வகையில் அந்த கவிஞனின் படைப்புகள் குறிப்பாக கவிதைகள் வாசிக்க கிடைக்க வேண்டும் என விரும்புகின்றேன். நான் எழுத ஆரம்பித்த சமயத்தில் வாசித்து வாசகரான படைப்பாளிகளில் பா.அ.சிவமும் ஒருவர்.
2013-ஆம் ஆண்டில் பா.அ.சிவம் மறைந்ததையொட்டிய அஞ்சலி கட்டுரையில் ‘பா.அ.சிவம் கவிதைகள்’ என்ற தலைப்பில் அவரது கவிதைகளை வல்லினம் பதிப்பகம் நூலாக்கம் செய்ய உள்ளதாக அறிவிப்பு செய்திருந்தார்கள். அவரின் கவிதைகளை தங்களுக்கு அனுப்பும்படியும் கேட்டிருந்தார்கள். என்ன காரணத்தினாலோ அந்தத் திட்டம் இன்னும் நிலுவையிலேயே உள்ளது. அப்படியான புத்தகம் இன்றைய தலைமுறை வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தேவை என நம்புகிறேன். இந்த மொழிபெயர்ப்பு கவிதை தொகுப்பை போல, அவரது கவிதைத் தொகுப்பும் வெளிவரவேண்டும் என்பதனை இதன்வழி வாசகனாக சிறு கோரிக்கை வைக்கிறேன்.
இனி அடுத்த மாதம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு சந்திக்கலாம்.
000

எழுத்தாளர் தயாஜி குறிப்புகள்
எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.