பிரத்யட்சம்
*************
ஒரு மலையின் பின்புறத்தை
அறிவதுபோலத்தான்
ஒரு மனிதனின் அறியாத பக்கங்களை
அவ்வளவு அரிதாக
அறிய முடிகிறது.
,
அப்படியும் அறிய முடிகிற
அரிய தருணங்கள்
தீடீரெனக் காட்சியளிக்கும்
வரம் தரும்
கடவுளர்களாகப் பரிமளிக்கின்றன.
,
அதிர்ச்சியூட்டும்
அறியாத பக்கங்களுக்குக்
காலத்தால் பழக்கப்பட்ட பின்னர்
ஒரு புன்னகையால்
அந்த மனிதனைக் கடந்து போகிறேன்
அந்த மனிதனும் அப்படியே
கடந்து போகிறான் .
0
கேள்வி பதில்
********************
0
நேற்று வரைக்கும்
பூத்துக் குலுங்கும் மரம்போல
தலையில் அடர்த்தியாக முடி
வைத்திருந்தவர்
இன்று ஒரு தொப்பி
அணிந்து வந்தார்
0
வணக்கம் வைத்தபின்
என்ன தொப்பி ?என்றேன் .
0
ஈரமண்ணில் அப்போதுதான்
அரும்பியிருக்கும் சிறு புற்களைப் போல
மேலுதட்டுக்கு மேலே
அரும்பியிருந்த மீசை மயிர்களைப் பார்த்து
மீசையைக்கூட காணோம்
என்ன திருப்பதியா ?பழனியா? என்றேன் .
0
அமைதியாக
தொப்பியைக் கழட்டியபடியே
“அம்மா தவறிட்டாங்க சார்” என்றார் .
0
ரெஸ்ட்ரிக்ட் மோட்
******************
0
நீங்கள் கட்டுப்பாட்டுக்குட்பட்ட
நிலையில் இருக்கும்போது
மற்றொருவர் கட்டுப்பாடற்ற
நிலையில் இருக்கலாம்
அல்லது மற்றொருவர் கட்டுப்பாட்டுக்குட்பட்ட
நிலையில் இருக்கலாம்
இன்னொருவரும்கூட அப்படியிருக்கக்கூடும்.
,
எனது அன்புக்குரியவர்களே,
இதை உணர்ந்துகொள்ளுங்கள்
‘கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிலை’ என்பது எப்போதும் தொடரக்கூடியதே.
0
பால்யகால தேவதைகள்
************************
0
தேவதைகள் வானத்திலிருந்து
இறங்குவதாய்ச் சொல்கிறார்கள்
அது உண்மையில்லை
நமது பால்யத்தின் இழைகளினூடே
தேவதைகள் நம்மோடே
கூட வருகிறார்கள்
நாம்தான்
பார்க்கவும் பழகவும்
பயந்தோ தாமதித்தோ
விட்டு விட்டோம் அன்று
,
பால்யகால அதியற்புத தேவதைகளை
இன்று வரை தேடிக்கொண்டேயிருக்கிறோம்
,
ஆனால் தேவதைகள்
அவர் போக்கில் வாழ்கிறார்கள்
தம் அழகிய கண்களை விரித்துப் பார்த்தபடி
,
-(பாலசுப்ரமணியன் பொன்ராஜுக்கு )
000

தாமரைபாரதி (பெ.அரவிந்தன் )
இதுவரை வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள்
தபுதாராவின் புன்னகை (2019)
உவர்மணல் சிறுநெருஞ்சி(2021)
காசினிக்காடு(2023)
இங்குலிகம் (2024)
தெறுகலம் (2024)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த நான் தற்போது சென்னையில் வசிக்கிறேன் .

