1.
,
அஞ்சு ரூபா சில்லறை இல்லயா?
அஞ்சு ரூபாவுக்கு ஜிபே கெடயாது
விற்கவே கூடாது எனக்கு என்றிருக்கும்
தங்களிடம் நானெப்படி
வாங்குவது?
,
2.
,
எடுத்தெறிந்து விட்டு
சாப்பிடலாம் தான்
குழம்பிலுள்ள முடியிலேயே இருக்கும்
மனதை என்ன செய்ய?
,
3.
,
முச்சந்தியில் நின்றபடி
இடதா வலதா எனக்குழம்பி
எத்திசையென்றபடி
திக்குத் தெரியாமல் நிற்கையில்
கால்களிடம் ஒப்படைக்க
எங்கெங்கோ சுற்றி விட்டு
கடைசியில் வந்து நின்றது
உன் வீட்டு முன்பு
——-+————–
,
4.
,
தனது வாலைச் சீண்டியபடி
துள்ளிக் குதிக்கும் பூனைக் குட்டியாக
வளைவில் எதிர்பாரா ஒரு நொடியில்
தொடர் வண்டியின் வால் பார்த்த மனசு
——-++++++—-
,
5.
,
முப்பதாம் தேதியே இண்டர்நெட் மற்றும் போனுக்கு
ஒண்ணு டு அஞ்சுக்குள்
வீணை, பாட்டு, மிருதங்கம் மற்றும் கடனட்டைக்கு
பையனுக்கு வீட்டு வாடகை
இம்ஐ சரியாக ஏழாம் தேதி
பாலுக்கு பத்துக்குள்
பதினைந்தில் இன்சூரன்ஸ்
இடையிடையே புத்தகங்கள்
மருந்து மாத்திரைகள்
காலணி வாங்க
என் முறை வருவதற்கு
ஆறுமாதமாயிற்று
கிழிந்த பனியனுக்கு எத்தனை மாதமோ?
எதிர் இருக்கையில்
கருவறையில் குழந்தையாக
,
—-++++++–++
,
6.
,
தனது அன்னை மடியில்
சிறுவனொருவன்
அவன் முகத்தில்
அத்தனை பாதுகாப்பு
அத்தனை நிம்மதி
அத்தனை அன்பு
அத்தனை சாந்தம்
இன்னும் சில ஆண்டுகளில்
அவனுக்கும் வந்து சேரும்
நாம் வழக்கமாக அணிந்துகொள்ளும்
பெரியவர்களின் முகமூடி
00

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

