முதல் செய்தி

அதுவொரு மிகச் சிறிய

மின்-செய்தி (Digital Text) மட்டுமே.

உலக வரலாற்றின் பக்கங்களை

அது மாற்றப்போவதில்லை;

பங்குச் சந்தைகளின் எண்களை

அது வீழ்த்தப்போவதில்லை;

செய்தி ஊடகங்கள்

அதைப் பிரசுரிக்கப் போவதில்லை;

பூமி தன் சுழற்சி வேகத்தை

ஒரு மில்லி நொடிகூட நிறுத்தப்போவதில்லை.

,

ஆனால், அன்றைய இரவில்

என் பிரபஞ்சத்தின்

அச்சு மட்டும் சற்றே நகர்ந்தது.

,

திரையின் இருண்ட பரப்பில்

உன் பெயர் முதன்முறையாக

ஒரு மின்மினியாய் ஒளிர்ந்தது.

அதன் கீழ் சில சொற்கள். அவ்வளவுதான்.

ஆனால் அந்தச் சில எழுத்துக்களின் துகள்களுக்குள்

ஒரு முழு எதிர்காலம்

தன் விதைகளை ஒளித்து வைத்திருந்தது.

,

நான் அந்தச் செய்தியை வாசித்தேன்.

மீள வாசித்தேன்.

மீண்டும் மீண்டும் நரம்புகளுக்குள் கடத்தினேன்.

ஒவ்வொரு முறையும் அதன் அர்த்தம்

தன் எல்லையை விரிவுபடுத்தியது;

ஒரு மழைத்துளி

பெருங்கடலாக உருமாறுவது போல,

ஒரு சிறு தீப்பொறி

நட்சத்திரமாய் வெடிப்பது போல.

,

சில செய்திகள்

வெறும் தகவல்களைக் கடத்துகின்றன,

சில செய்திகளோ

மாற்று உலகிற்கான கதவைத் திறக்கின்றன.

உன்னுடையது இரண்டாமகையைச் சேர்ந்தது.

,

அதில் விசேஷமான

கலைநயம் எதுவும் இல்லை;

ஒரு முகமன்…

ஒரு எளிய வினா…

ஒரு சிறிய சிரிப்புக் குறியீடு (Emoji).

ஆனால் வாழ்வை

உலுக்கும் பெரும் மாற்றங்கள்

எப்போதும் மிக எளிய

வடிவங்களில்தான் பிரவேசிக்கின்றன:

ஒரு பார்வை,

ஒரு தீண்டல், அல்லது

ஒரு மின்-செய்தி.

,

அன்றிரா

உனக்குப் பதில் குறியீட்டை

அனுப்புவதற்கு முன்

நான் பல நனவிலி நிமிடங்கள்

மௌனமாக அமர்ந்திருந்தேன்.

மனதில் பிரவகித்தவை

நூற்றுக்கணக்கான சொற்கள்;

ஆனால் நான் திரையில் வடித்தது

சில துளிகள் மட்டுமே.

ஏனெனில், இதயம் தன்

முதல் மொழியைத் தேர்ந்தெடுக்கும்போது

அதிநவீனத் தயக்கமொன்றைச் சூடிக்கொள்கிறது.

,

அதன் பின் நமது உரையாடல்கள்

விண்மீன் திரள்களாய் நீண்டன.

ஒரு செய்தியிலிருந்து மற்றொன்றுக்கு,

ஒரு இரவின் அடியிலிருந்து அடுத்த இரவுக்கு,

ஒரு மௌனத்தின் எல்லையிலிருந்து

அடுத்த மௌனத்திற்கு.

,

ஆனால், அந்தப் பெருவெளிக்கு அஸ்திவாரமாய்

அந்த முதல் செய்தி அங்கே நின்றிருந்தது.

,

இன்று நினைவுகளின் காப்பகத்திலிருந்து (Archives)

அதை மீண்டும் திறக்கும்போது,

அதன் டிஜிட்டல் எழுத்துக்களை

மட்டும் நான் பார்க்கவில்லை;

அவற்றின் ஒளிரும் பின்னணியில்

தன்னை மெதுவாக அறிமுகப்படுத்திக் கொண்ட

காதலின் முதல் நிழல்-வடிவத்தைக் காண்கிறேன்.

,

சில மனிதர்கள் நம் வாழ்விற்குள்

கதவைத் தட்டி அனுமதி கேட்பதில்லை;

அவர்கள் ஒரு எளிய செய்தியெனப் புகுந்து,

நம் அகத்தின்

பாழடைந்த அறைகளையெல்லாம்

திடீர் ஒளியால் நிரப்பிவிடுகிறார்கள்.

,

அன்றிரா திரையின் மீது ஒளிர்ந்த

அந்தச் சில சொற்கள்,

இன்றும் என் நினைவின்

இருண்ட அண்டவெளியில்

முதல் சூப்பர்நோவாவாக (Supernova)

எரிந்துகொண்டிருக்கின்றன.

00

பெயர்             : ஏ.எச்.எம்.நவாஷ்

புனைப்பெயர்       : ஈழக்கவி

சேவை            : பேராதனைனைப் பல்கலைகழக மெய்யியல் துறை

                    முன்னாள் விரிவுரையாளர்,

                  ஓய்வுநிலை அதிபர்.

படைப்புத்துறை    : கவிதை, விமர்சனம், ஆய்வு

நூல்கள்           : 16 (வெளிவந்துள்ளன)

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *